அரூர் சிறுமி பாலியல் வழக்கில் கடும் நடவடிக்கை தேவை - PMK!

அரூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்...

Last Updated : Nov 11, 2018, 01:18 PM IST
அரூர் சிறுமி பாலியல் வழக்கில் கடும் நடவடிக்கை தேவை - PMK! title=

அரூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்...

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

"தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிட்லிங் மலைக்கிராமத்தில் விடுமுறைக்காக வந்திருந்த மாணவி  கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.  கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிட்லிங் மலைக்கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகளான 16 வயது மாணவி பாப்பிரெட்டிப் பட்டியில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். தீப ஒளி திருநாள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அம்மாணவி கடந்த 5-ஆம் தேதி இயற்கை அழைப்புக்காக வீட்டுக்கு அருகில் உள்ள மறைவான பகுதிக்கு சென்ற போது அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்ற இரு கயவர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகவே, உயர்கல்வி படித்து சாதிக்க வேண்டிய மாணவி உயிரிழந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

மாணவியின் உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட கயவர்கள் மட்டுமின்றி காவல்துறையும், அரசு நிர்வாகமும் சேர்ந்தே பொறுப்பேற்க வேண்டும். தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு  சில கொடூரர்கள் பாலியல் ரீதியாவும், உடல் ரீதியாகவும் எத்தகைய கொடூரங்களை இழைத்தார்களோ, அதைவிட மிக மோசமான, மனிதநேயம் கொண்டவர்களால் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அந்த மாணவிக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மாணவிக்கு எந்தவிதமான மருத்துவமும் வழங்காமல், வழக்குப் பதிவு செய்து தருமபுரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர், அத்துடன் தங்களின் கடமை முடிந்து விட்டதாகக் கருதி ஒதுங்கிக் கொண்டனர்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடியாக மருத்துவம் அளிக்கப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வில்லை. காப்பகத்தில் சேர்க்கப்பட்ட மாணவிக்கு  உடல்நலம் பாதிக்கப்பட்டு, மோசமடைந்த நிலையில் மிகவும் தாமதமாகவே தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு தீவிர மருத்துவம் அளித்தும் பயனின்றி உயிரிழந்துள்ளார். மிகக்கொடூரமான பாலியல் தாக்குதலுக்கு ஆளான மாணவியைக் காப்பாற்றும் விஷயத்தில் அக்கறையும், சமூகப் பொறுப்பும் இல்லாமல்  மிகவும் அலட்சியமாக நடந்து கொண்ட காவல்துறை உள்ளிட்ட அனைவரின் செயலும் கண்டிக்கத்தக்கது.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை மிகவும் அலட்சியம் காட்டி வருகிறது. இந்தக் கொடூரம் நடந்து ஒரு வாரம் ஆகியும் இன்று வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இரு குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷின் தாயார் அப்பகுதியில் அரசு மதுபானங்களை கள்ளச்சந்தையில்  விற்பனை செய்து வருவதாகவும், இதற்காக கோட்டைப்பட்டி காவல்துறையினருக்கு கையூட்டு தருவதாகவும், அதனால் தான் குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்புகார் உண்மை என்றால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மாணவியின் இல்லத்தில் பயன்படுத்தத் தக்க வகையில் கழிப்பறை வசதி இருந்திருந்தால் அம்மாணவிக்கு இத்தகையக் கொடுமை நிகழ்ந்திருக்காது. மலைவாழ் மக்களுக்கு கழிப்பறை வசதிகளை கட்டித்தருவது உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அத்திட்டங்களை செயல்படுத்தித் தராததும்  இதற்கு காரணம் ஆகும் அந்த வகையில் மாணவியின் சாவுக்கு தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும்.

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை இனியும் அலட்சியம் காட்டாமல் குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். இந்த வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு  ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News