மகளிருக்கு மாதாமாதம் ரூ. 1000... இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம் - முதல்வர் அறிவிப்பு!

Kalaignar Magalir Urimai Scheme: கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ மாற்றுத்திறனாளி ஓய்வூதியம்‌ மற்றும்‌ முதியோர்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ குடும்பத்தில்‌ உள்ள தகுதிவாய்ந்த பெண்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌ என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 12, 2023, 09:25 PM IST
  • வரும் செப். 15ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • இரண்டு கட்டங்களாக முகாம்கள் நடைபெற்றன.
  • சிறப்பு முகாம்களுக்கான தேதியும் அறிவிப்பு.
மகளிருக்கு மாதாமாதம் ரூ. 1000... இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம் - முதல்வர் அறிவிப்பு! title=

Kalaignar Magalir Urimai Scheme: கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டம்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்க கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ தலைமை தாங்கினார். கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்ட விண்ணப்பங்கள்‌ பதிவு செய்யும்‌ முகாம்கள்‌ இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 

முதற்கட்ட முகாம்‌ ஜுலை 24ஆம்‌ தேதி முதல்‌ ஆகஸ்ட்‌ 4ஆம்‌ தேதி வரை நடைபெற்றது. இரண்டாம்‌ கட்ட
முகாம்கள்‌ ஆகஸ்ட்‌ 5 ஆம்‌ தேதி முதல்‌ 14ஆம்‌ தேதி வரை நடைபெறும்‌. இதுவரை ஒரு கோடியே 54 இலட்சம்‌ விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப்‌ பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய நாளில்‌ விண்ணப்பம்‌ பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச்‌ சிறப்பு முகாம்களும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில்‌ விண்ணப்பப்‌ பதிவு முன்னேற்றம்‌ குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்‌. 

விதிவிலக்கு அளித்து உத்தரவு

குறிப்பாக, கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ விண்ணப்பிப்பதற்கு தகுதிகள்‌ மற்றும்‌ தகுதியின்மைகளை வரையறை செய்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில்‌ கடுமையாக உடல்‌ பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையால்‌, பராமரிப்பு உதவித்‌ தொகை வழங்கப்படும்‌ மாற்றுத்திறனாளிகளின்‌ குடும்பங்கள்‌ விண்ணப்பிக்கத்‌ தகுதியானவர்கள்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்‌ துறையின்‌ கீழ்‌ சமூகப்‌ பாதுகாப்பு திட்டத்தில்‌ ஒய்வூதியம்‌ பெறும்‌ மாற்றுத்திறனாளிகளின்‌ குடும்பங்களுக்கும்‌, இந்தத்‌ திட்டத்தில்‌ விதிவிலக்கு அளிக்க வேண்டும்‌ என்று முதலமைச்சரிடம்‌ கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து‌ பரிசீலித்த முதலமைச்சர்‌, வருவாய்த்‌ துறையின்‌ கீழ்‌ மாற்றுத்திறனாளிகள்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌
மாற்றுத்திறனாளிகள்‌ தவிர, அக்குடும்பத்தில்‌ உள்ள தகுதிவாய்ந்த பெண்களும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ பயன்பெறும்‌ வகையில்‌ விதிவிலக்கு அளிக்க ஆணையிட்டுள்ளார்‌.

மேலும் படிக்க | நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது

கடந்த ஜூலை 22ஆம் தேதி அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்‌ எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்திரா காந்தி முதியோர்‌ ஒய்வூதிய தேசியத்‌ திட்டம்‌, இந்திரா காந்தி விதவையர்‌ ஓய்வூதிய தேசியத்‌ திட்டம்‌, ஆதரவற்ற விதவைகள்‌ ஓய்வூதியத்‌ திட்டம்‌, ஆதரவற்ற மற்றும்‌ கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத்‌ திட்டம்‌, 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப்‌ பெண்களுக்கான ஓய்வூதியத்‌ திட்டம்‌, இலங்கை அகதிகளுக்கான (முதியோர்‌, ஆதரவற்ற விதவைகள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌) ஓய்வூதியத்‌ திட்டம்‌, முதலமைச்சரின்‌ உழவர்‌ பாதுகாப்பு முதியோர்‌ ஓய்வூதியத்‌ திட்டம்‌ உள்ளிட்ட சமூகப்‌ பாதுகாப்பு திட்டங்களின்‌ ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூபாய்‌ 1200 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டது.

ஒரு குடும்பத்தில்‌ யாரேனும்‌ ஒரு நபர்‌, சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்களிலும்‌, அமைப்புசாராத்‌ தொழிலாளர்‌ நல வாரியத்திலும்‌ முதியோர்‌ ஒய்வூதியம்‌ பெற்று வந்ததால்‌, அக்குடும்பத்தில்‌ உள்ள பெண்கள்‌ கலைஞர்‌
மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ பயன்பெற இயலாது என்று திட்ட விதி வகுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பெருமளவு விவாதிக்கப்பட்டது. 

இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்

முதியோரின்‌ கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த அரசு முதியோர்‌ ஓய்வூதியத்தை வழங்குகிறது. முதியோரைப்‌ பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பத்தின்‌ கடமை மட்டுமல்ல, சமூகத்தின்‌ கடமை என்றும்‌ அரசு கருதுகிறது. அதேவேளையில்‌ அரசு வழங்கும்‌ முதியோர்‌ ஓய்வூதியத்தால்‌, அந்தக்‌ குடும்பத்தில்‌ உள்ள தகுதியான பெண்கள்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ பலன்‌ பெறுவது தடைபடக்கூடாது என்று முதலமைச்சர்‌ ஆணையிட்டுள்ளார்‌. 

எனவே, இந்திரா காந்தி முதியோர்‌ ஓய்வூதிய தேசியத்‌ திட்டம்‌, முதலமைச்சரின்‌ உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌ மற்றும்‌ அமைப்புசாராத்‌ தொழிலாளர்‌ நல வாரியம்‌ ஆகிய திட்டங்களில்‌ முதியோர்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ குடும்பங்களில்‌ உள்ள ஓய்வூதியதாரர்‌ அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ விண்ணப்பிக்கலாம்‌ என்று முதலமைச்சர் ஸ்டாலின்‌ அறிவித்துள்ளார்‌.

சிறப்பு முகாம்கள்

தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின்‌ குடும்பத்‌ தலைவிகள்‌, முதியோர்‌ ஓய்வூதியத்‌ திட்டங்களில்‌ ஒய்வூதியம்‌ பெறும்‌ குடும்பங்களில்‌ உள்ள தகுதிவாய்ந்த மகளிர்‌ மற்றும்‌ ஏற்கெனவே முகாம்களில்‌ பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில்‌ வருகை புரிய இயலாத குடும்பத்‌ தலைவிகள்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்ய, ஆகஸ்ட்‌ 18,19,20 ஆகிய மூன்று நாட்கள்‌ சிறப்பு முகாம்கள்‌ நடத்தப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட வகை குடும்பங்களில்‌ உள்ள பெண்கள்‌ ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால்‌, மீண்டும்‌ விண்ணப்பிக்கத்‌ தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள்‌ அனைவரும்‌ இந்த வாய்ப்பினைப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்‌ கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நாங்குநேரி சாதிய தாக்குதல்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News