இஸ்லாமியர்களின் பிளாஸ்மா கொடையை பாராட்டும் பாஜக பிரபலங்கள்...

கடந்த மாதம் டெல்லியில் நடந்த தப்லி-இ- ஜமாஅத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட பல முஸ்லிம்கள் இப்போது தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

Last Updated : Apr 22, 2020, 10:44 AM IST
இஸ்லாமியர்களின் பிளாஸ்மா கொடையை பாராட்டும் பாஜக பிரபலங்கள்... title=

கடந்த மாதம் டெல்லியில் நடந்த தப்லி-இ- ஜமாஅத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட பல முஸ்லிம்கள் இப்போது தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீண்ட முஸ்லிம்களின் விருப்பத்தை பாஜக மாநில பிரிவு செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி செவ்வாய்க்கிழமை வரவேற்றுள்ளார். மற்றும் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா நன்கொடை அளிக்க முன்வந்த இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., ‘பிளாஸ்மா நன்கொடை அளித்த முஸ்லிம்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை உள்ளது’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாவது., "தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் குணமான பின்னர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மற்றவர்களுக்கு 'ஊநீர்' (Plasma) தானம் செய்ய தயாராக இருப்பதாக கூறியதை பாராட்டி பதிவிட்டிருந்தேன். அரபு நாடுகளிலிருந்து பதிவிடப்படும் சில முட்டாள்தனமான பதிவுகளுக்கு அச்சப்பட்டே நான் அப்படி பதிவிட்டதாக சிலர் புளகாங்கிதம் அடைந்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த பதிவின் நோக்கத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பல விமர்சனங்களை முகநூலிலும், ட்விட்டரிலும் காண முடிந்தது. இஸ்லாமிய பெயர் கொண்ட பல அடிப்படைவாதிகளும், கொள்கை முரண்பாடு உடைய பலரும் தனிப்பட்ட முறையில் மிக தரம் தாழ்ந்தும் விமர்சனம் செய்துள்ளார்கள். இதில் அதிகம் போலி அடையாளத்தோடு உள்ளவர்களே.

தமிழகத்தில் கொரோனா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மிக அதிகமானோர் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளில் இருந்தவர்களே என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை. நேற்று வரை தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 1520 பேரில், 1302 பேர் அதாவது 85 விழுக்காடிற்கும் மேலானவர்கள் 'ஒரே குழுவை' (தப்லீக் தொடர்புகள்) சார்ந்தவர்கள் என்பது தமிழக அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது பெரும்பாலும் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களே இதில் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. தொடர்ந்து பலமுறை மாநில அரசு முறையீடு செய்தும் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து வந்தது கண்கூடு. அதே போல் தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுத்த போதும் பெரும்பாலான மசூதிகளில் வழிபாடு நடைபெற்றன என்பதை நாம் ஊடகங்களின் வாயிலாக பார்த்து கொண்டே தான் இருந்தோம்.

மாநில அரசும், காவல்துறையும் ஒத்துழைக்க மறுத்தவர்களை பொறுமையாக கையாண்டதும் நாம் அறிவோம். அரசின் வேண்டுகோளுக்கு ஒத்துழைக்க மறுத்ததற்கு விழிப்புணர்வு இல்லாமை என்று சொல்லப்பட்டாலும் அலட்சியமே என்பதை யாராலும் மறுக்க முடியாது.அனுமதியில்லாமல் மசூதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமிய வெளிநாட்டு மத போதகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் அல்லது தனிமை படுத்தப்பட்டிருக்கின்றனர்.சில மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டிருந்தவர்கள், மருத்துவர்களுக்கு பல இடையூறுகளையும், அவதூறுகளையும் செய்து கொண்டிருந்ததை மறுக்க முடியுமா? காவல்துறையினர் பட்ட அவலங்களை நினைத்து பார்க்க கூட முடியாது. பரிசோதனைக்கு சென்ற மருத்துவர்களை,செவிலியர்களை, பணியாளர்களை அவமானப்படுத்தி, தகராறு செய்து, கடுமையாக தாக்கி விரட்டியடித்த காட்சிகளை தடை செய்து விடமுடியுமா?

ஆனால், 25ம் தேதி தொடங்கி இன்று வரை தினமும் தப்லீக் மாநாடு மற்றும் அவர்களின் தொடர்புகளில் இருந்தவர்களுக்கு தான் 85 விழக்காடுக்கும் மேலாக பரவி வந்துள்ளது என்ற நிலையில், அவர்களில் குணமடைந்த சிலரே அவர்களின் ஊநீர் (plasma) தானம் செய்ய முன்வந்த போது, அதை பாராட்டியதில் எந்த உள்நோக்கமும் எனக்கிருக்கவில்லை. அவர்கள் எவ்வளவு தானம் செய்தாலும் 85 விழுக்காடுக்கும் மேலாக அந்த சமுதாயத்தினருக்கே தான் அது பலனளிக்கும் என்பதை கூட அந்த சமுதாயத்தை சார்ந்த சிலர் அறிந்திருக்கவில்லையே என்று தான் அவர்களின் பதிவுகள் உணர்த்துகின்றன. மீண்டும் சொல்கிறேன். தப்லீக் மாநாட்டிற்கு சென்றது குறித்து நாம் யாரையும் விமர்சிக்கவில்லை. அது அவர்களின் உரிமை. ஆனால், அங்கு சென்று வந்தவர்கள் மாநில அரசின் பல வேண்டுகோள்களுக்கு இணங்கி தாமாகவே முன்வந்து பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் இருந்த காரணத்தினால் தான் இன்றைக்கு தமிழகத்தில் 1596 பேருக்கு தோற்று பரவியுள்ளது என்பது கசப்பான உண்மை. இது ஒரு குழுவிற்குள்ளேயே பரவியதற்கு காரணமும் இதுவே. மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகவியலாளர்கள் என்று பல தரப்பினருக்கும் பரவியதற்கு காரணம் கண்கூடாக தெரிகிறது.

முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள், நடுநிலையாளர்கள் என்று மார் தட்டி கொள்பவர்களெல்லாம், தப்லீக் விவகாரத்தின் தவறுகளை நான் சுட்டிக்காட்டிய போதெல்லாம், ஐயோ, மதரீதியாக பேசுவது முறையா என்று விமர்சித்தார்கள். அவர்களின் நல்ல பண்பை சுட்டிக்காட்டி நான் இன்று பாராட்டும் போது ஐயோ இஸ்லாமியர்களை பாராட்டி பேசுவதை நம்பாதீர்கள் என்று பொங்கி எழுந்து அந்த சமுதாயத்தினரை தூண்டி விடும் தொனியில் பதிவுகளை இடுவது இரு மதத்தினருக்கிடையே ஒற்றுமை இருக்க கூடாது என்ற அவர்களின் கொடூர எண்ணத்தையே வெளிப்படுத்துகின்றன. 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்ற மொழிக்கேற்ப அவர்களின் சிந்தனைகள் உள்ளன என்பது உறுதியாகிறது. இடது சாரிகளும், மற்ற எதிர்க்கட்சிகளும் போலி மதசார்பின்மை கொள்கையோடு, நஞ்சை விதைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

தப்லீக் விவகாரத்தில் தமிழக அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும், பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இதுநாள் வரை நான் வலியுறுத்தியதும், இன்று 'ஊநீர்' (Plasma) தானம் குறித்து பாராட்டு தெரிவித்ததும் இஸ்லாமிய சமுதாயத்தின் நலனுக்காக தான் என்பதை உறுதியாக சொல்கிறேன். நான் மதவாதி அல்ல. ஆனால் அடிப்படைவாதத்தை எதிர்த்தால் மதவாதி என்று என்னை அழைப்பார்களேயானால், நான் மதவாதியாகவே இருந்து விட்டு போகிறேன். போலி மதசார்பின்மை பேசி சிறுபான்மையினரின் ஓட்டுக்காகவும், வயிற்று பிழைப்பிற்காகவும் இனிப்பில் விஷம் கலந்து கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் வரை உண்மையான மதசார்பற்ற பெருந்தன்மை கொண்ட ஹிந்து கலாச்சாரத்தின் மீதான தீய சக்திகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

மேலும்,இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு எச்சரித்து விட்டது அதனால் இஸ்லாமியர்களை பாராட்டி பேசுகிறார் நாராயணன் என்று சொல்வது வேடிக்கை மட்டுமல்ல வெட்டித்தனமான கருத்து. இந்தியாவை பார்த்து உலகமே வியந்து பார்த்து கொண்டிருக்கிறது. அந்த கூட்டமைப்பின் பல நாடுகளுக்கு கொரோனா விவகாரத்தில் மட்டுமல்ல பல்வேறு விவகாரங்களில் இந்தியா தான் தலைமை தாங்கி செல்கிறது என்பதையும் அதற்கு தலைமை தாங்குவது நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் எனபதையும் நினைவில் வைத்து கொள்வது சிறப்பு." என குறிப்பிட்டடுள்ளார்.

Trending News