உண்டியல் குலுக்கியவர்கள் இப்போது விலை போய்விட்டார்கள் - கம்யூனிஸ்ட்டை சாடிய சி.வி.சண்முகம்

உண்டியல் குலுக்கி சேர்த்த பணத்தில் வளர்த்த கம்யூனிஸ்ட் கட்சியை இன்று அறிவாலயத்திடம் விற்றுவிட்டார்கள் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 5, 2022, 04:56 PM IST
  • பாலகிருஷ்ணனை சாடியிருக்கிறார் சி.வி.சண்முகம்
  • அறிவாலயத்துக்கு கொத்தடிமை என விமர்சனம்
  • விலை போய்விட்டதாகவும் குற்றச்சாட்டு
 உண்டியல் குலுக்கியவர்கள் இப்போது விலை போய்விட்டார்கள் - கம்யூனிஸ்ட்டை சாடிய சி.வி.சண்முகம் title=

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தமிழகத்தில் உள்ள முக்கியமான அரசியல் கட்சிகளுக்கு சிறப்பான பாரம்பரியம் உண்டு. குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் M.கல்யாணசுந்தாம். பி. ராபமூர்த்தி போன்றவர்கள் தலைமையில், கண்ணியமாகவும், நாணயமாகவும் அரசியல் செய்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, நம்மை ஆளாக்கிய புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் தூக்கி எறியப்பட்டபோது அவருக்கு தோளோடு தோள் நின்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் புடம் போட்ட தங்கங்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் இன்றைய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் நிலைமை உள்ளது.

வீதி வீதியாக உண்டியல் குறுக்கி சேர்க்கும் பணத்தில், டீ குடித்து கட்சிக்காக உழைத்த கம்யூனிஸ்ட் தொண்டர்களின் தியாகங்களை மண்ணில் போட்டு மிதிக்கும் வகையில் இன்றைக்கு தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து பல கோடிகளைப் பெற்று தங்கள் இயக்கத்தையே அறிவாலயத்தின் கொத்தடிமையாக மாற்றியுள்ளார்கள். தற்போதைய பொம்மை முதலமைச்சரின் குரலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருக்கக்கூடிய K பாலகிருஷ்ணன் திமுக சொல்வதையெல்லாம் மென்று விழுங்கி மீண்டும் வாந்தி எடுத்துள்ளார். பாலகிருஷ்ணன், அவருடைய வாயை வாடகைக்கு விடுவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பது போல் ஆற்றல் மிகு எங்கள் இயக்கத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புபடுத்தி முறையற்ற கருத்துக்களை உமிழ்ந்திருக்கிறார்.

Balakrishnan

ஒரு ஆட்சியில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கெல்லாம் முதலமைச்சரை பொறுப்பாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த நபர் வலியுறுத்துவாரேயானால், கடந்த கால திமுக ஆட்சியின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கும் அன்றிருந்த முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் பொறுப்பாக்குவாரா? இந்த விடியா அரசின் 18 மாத ஆட்சியில், பல்வேறு காவல் நிலையங்களில் காவல்துறையினரால் பலர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவங்களுக்கு தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினை பொறுப்பாக்க வற்புறுத்துவாரா? தன்னுடைய சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்களுக்கு ஜால்ரா அடித்து வயிறு வளர்க்க வேண்டும் என்ற நிலையில் உள்ள இந்த நபருக்கு நாவடக்கம் தேவை.

துப்பாக்கிச்சூடு என்ற சம்பவம் ஒன்றை, தான் தொலைக்காட்சியின் பார்த்து அறிந்தேன் என்று எங்களின் முதலமைச்சர் அன்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. தமிழகமெங்கும். எந்தவொரு சம்பவம் நடந்தாலும் மூன்றாவது கண்ணாக இருக்கக்கூடிய காட்சி ஊடகத் துறையினார் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள். ஆதலால்தான், தொலைக்காட்சியில் பார்த்தேன் என்று அவர் சொன்னார். எந்தவொரு இடத்திலும் தூத்துக்குடியில் 99 நாட்களாக அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டங்கள் பற்றி தனக்குத் தெரியாது என்று அவர் சொல்லவில்லை.

மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உண்டான சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆலை விரிவாக்கத்திற்கும், அந்த ஆயை தொடர்ந்து இயங்குவதற்கும் ஸ்டாலின் அவர்களும், திமுக அரகம் துணை போனது. பாலகிருஷ்ணன் அவர்கள், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு எடுத்த நடவடிக்கைகளை மறைத்து பேட்டி அளித்துள்ளதைப் பார்க்கும்போது, தேர்தல் நேரத்தில் திமுக-விடமிருந்து, கம்யூனிஸ்ட் கட்சி, தேவையான தேர்தல் நிதியை பெற்றதாக பத்திரிகைகளில் வந்திருந்த செய்தியினை உறுதிப்படுத்துகிறது. அதற்கு நன்றிக் கடனாக பாலகிருஷ்ணன் இப்போது செயல்படுகிறார்.

Thoothukudi

“ஊருக்குத்தான் உபதேசம், உனக்கில்லையடி" என்பதுபோல் எங்களுக்கு உபதேசம் செய்ய புறப்பட்டுள்ள பாலகிருஷ்ணன், கோவையில் கார் வெடிகுண்டு வெடிந்து அதை இயக்கிய நபர் பற்றியோ, அவர்கள் தீட்டிய சதித் திட்டங்கள் பற்றியோ இன்றைய முதல்வர் இதுவரை வாய் திறக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளாரா? மேலும் கள்ளக்குறிச்சி, கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். மாணவியின் பெற்றோர் மாவட்ட நிர்வாகத்தினரிடமும், காவல் அதிகாரியிடமும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தார்கள்.

ஆனால், அந்த புகாரின் அடிப்படையில் 4 நாட்களாக காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு அப்பள்ளியை சூறையாடி முழுமையாக தீக்கிரையாக்கினார்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சுமார் 350-க்கும் மேற்பட்டோர் தற்போதும் காவல்துறையின் பிடியில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதற்கு காரணம், இந்த விடியா அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததுதான். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது.

மேலும் படிக்க | விமானம் முதல் 5 ஸ்டார் ஹோட்டல்வரை - பெண் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய ரவுண்ட் டேபிள் இந்தியா

இந்த நிகழ்வு குறித்தும் இந்த விடியா அரசின் முதல்வர் இதுவரை வாய் திறக்கவில்லை. அவதூறு பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, தற்போது வாய் நீளம் காட்டும் பாலகிருஷ்ணன், இந்த விடியா அரசின் முதலமைச்சரை மேற்கண்ட சம்பவங்களுக்கும் பொறுப்பாக்காதது ஏன்? பாலகிருஷ்ணன் கொள்கைப் பிடிப்புள்ள உண்மையான கம்யூனிஸ்ட் இயக்கத் தொண்டர்களை களங்கப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம். இனியாவது கம்யூனிஸ்ட் கட்சி தனித்தன்மையுடன் செயல்படும் என்று எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News