வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 27, 2019, 03:05 PM IST
வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி title=

சேலம்: ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 56 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு என மொத்தம் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இந்தநிலையில், தனது வாக்குசாவடியில் ஜனநாயக கடமையை செலுத்த, இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கிருந்து வாகனம் மூலம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவுடிக்கு சென்று பொது மக்களுடன் சேர்ந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டார். 

இந்த தேர்தலில் 1.28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. முதல் கட்ட தேர்தலில்156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது

இன்று நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி கடந்த 16-ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல் படி 2,31,890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் காவலர்கள், ஆயுத படை காவலர்கள், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 63 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். 

இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளை வரும் ஜனவரி 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News