பாடாய் படுத்தி ஒரு வழியாய் பிடிபட்டது சிறுத்தை: நடந்தது என்ன? முழு விவரம் இதோ

பாப்பாங்குளம் எனும் பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை புகுந்த சிறுத்தை, நான்கு நாட்களாக  பிடிபடாமல் இருந்த நிலையில் இன்று மதியம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. 

Written by - அதிரா ஆனந்த் | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 27, 2022, 03:51 PM IST
பாடாய் படுத்தி ஒரு வழியாய் பிடிபட்டது சிறுத்தை: நடந்தது என்ன? முழு விவரம் இதோ title=

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுக்கா பாப்பாங்குளம் எனும் பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை புகுந்த சிறுத்தை, நான்கு நாட்களாக  பிடிபடாமல் இருந்த நிலையில் இன்று மதியம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பிடிபட்டது ஆண் சிறுத்தை என்றும், உடுமலைப்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்த பிறகு எந்த வனப்பகுதியில் விடுவது என முடிவு செய்யப்படும் என்றும் வனமருத்துவர்கள் கூறியுள்ளனர். 

கடந்த திங்கட்கிழமை காலை 6 மணியளவில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுக்கா பாப்பாங்குளம் எனும் பகுதியில், சோழ காட்டிற்குள் மாறன் மற்றும் வரதராஜன் ஆகிய இருவரை பதுங்கியிருந்த சிறுத்தை (Leopard) ஒன்று தாக்கியது. தகவலறிந்து சோளக்காட்டில் ஒன்றுகூடிய பொதுமக்களில் மேலும்  இரு நபர்களை சிறுத்தை தாக்கியது. 

நான்கு நபர்களை சிறுத்தை தாக்கிய நிலையில் உடனடியாக வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் அனைவரும் பாப்பாங்குளத்திற்கு வந்தனர். சிறுத்தை பதுங்கியிருக்கும் சோலைப்பட்டியை சுற்றி 12 வனவிலங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சோளத்தட்டை சுற்றி மூன்று தூண்கள் அமைத்து மாமிசங்கள் உள்ளே வைத்து சிறுத்தை வருகிறதா என கண்காணித்து வந்தனர். 

திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த வன ஊழியர் வீரமணிகண்டனை சிறுத்தை தாக்கியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை சோள காட்டில் இருந்து சிறுத்தை வெளியேறாத வண்ணம் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் சோள காட்டில் இருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி துவங்கப்பட்டது. க்ரேன் கொண்டு வரப்பட்டு தேடும் பணி துவங்கியது. 

பட்டாசுகள் வெடிக்கப்பட்டு , சைரன் ஒலிக்கப்பட்டும் எந்தவிதமான அறிகுறியும் தென்படாததால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் நேரடியாக சோளக்காட்டிற்குள் இறங்கி தேடினர். அப்பொழுது தான் சிறுத்தை வெளியேறியது தெரிய வந்தது. உடனடியாக அருகாமையில் இருக்கும் கிராம மக்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதுடன் சிறுத்தையை தேடும் பணி ஆரம்பம் ஆனது. 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பெருமாநல்லூர் பகுதியில் சிறுத்தை தென்படுவதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார். புதன்கிழமை காலை பெருமாநல்லூர் பொங்குபாளையம் எனும் இடத்தில் துரை என்பவருக்கு சொந்தமான காட்டில் சிறுத்தையின் எச்சங்களும் , கால் தடமும் கண்டறியப்பட்டது. 

ALSO READ | Leopard Hunt: 5 நாட்கள் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது! சிக்கியது சிறுத்தை!

உடனடியாக பொங்குபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உடன் மேலும் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் தெரிகிறதா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள அம்மாபாளையம் எனும் இடத்தில் பேஸ்ட் குடோனில் வேலை பார்த்த ராஜேந்திரன் என்பவரையும்   ப்ரேம் என்ற வேட்டைதடுப்பு காவலரையும்  சிறுத்தை தாக்கியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் நான்காவது நாளாக இன்றும் ஈடுபட்டனர். 

1 மணி நேரத்திற்கும் மேலாக குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தை வனத்துறையினரின் கண்காணிப்பு பணியாளர்களையும் மீறி குடோனில் இருந்து வெளியேறியது. அருகாமையில் இருக்கும் முட்புதரில் தான் சிறுத்தை பதுங்கி இருக்கிறது என உறுதி செய்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அதற்கு அருகாமையில் சென்றனர். பின்னர் மருத்துவர்கள் மூலம் அதற்கு ஊசி போடப்பட்டது. 

ஊசி செலுத்தியதுடன் முட்புதரில் இருந்து வெளியில் வந்த சிறுத்தை அருகாமையில் இருந்த சந்திற்குள் அரை மயக்கத்துடன் சென்றது. மயக்கம் அடையும் வரை காத்திருந்த வனத்துறையினர் (Forest Officials), மயக்கம் அடைந்த சிறுத்தையை  கூண்டு வைக்கப்பட்ட வண்டியில் ஏற்றி உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட இடத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்திய மருத்துவர் விஜயராகவன் செய்தியாளர்களிடம் பேசிய போது , பிடிபட்டது ஆண் புலி என்றும் அதனுடைய வயது எத்தனை என்பதை இனிமேல் தான் கண்டறிய வேண்டும் என்றும் ,  அதற்கு தோராயமாக 3 முதல் 4 வயது இருக்கும் என்றும்,  உரிய மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு எந்த வனப்பகுதியில் விடுவது என முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

ALSO READ | குடியிருப்புகளின் அருகே தந்திரமாக சுற்றித்திரியும் சிறுத்தைகள், கரடிகள்: Watch

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News