MK Stalin உறுதி அளித்தது போல் பெட்ரோல் விலைகளை குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகள் மூலம் பல அறிக்கைகள் அளிக்கப்பட்டன. அதில் திமுக அறிக்கையில் முக்கிய ஒரு உறுதியாக பார்க்கப்பட்டது திமுக-வின் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பற்றிய அறிக்கையாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 13, 2021, 06:11 AM IST
  • கொரோனாவின் கொடூரம் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதாக பாதித்துள்ளது.
  • தமிழகத்தில் பல இடங்களில் பெட்ரோல் விலை மிக அதிகமாக உள்ளது.
  • பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கவும், டீசலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஓ.பன்னீர்செல்வம்.
MK Stalin உறுதி அளித்தது போல் பெட்ரோல் விலைகளை குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை title=

சென்னை: கொரோனாவின் கொடூரம் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதாக பாதித்துள்ளது. அடிப்படை தேவகளை பூர்த்தி செய்துகொள்ளவெ பலர் பாடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அன்றாட வாழ்க்கைக்கான சில அடிப்படை வசதிகளிலும் தொடர்ந்து விலை அதிகரிப்பு இருந்து வருகிறது. அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வாகும்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகள் மூலம் பல அறிக்கைகள் அளிக்கப்பட்டன. அதில் திமுக அறிக்கையில் முக்கிய ஒரு உறுதியாக பார்க்கப்பட்டது திமுக-வின் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பற்றிய அறிக்கையாகும். தற்போது தமிழகத்தில் பல இடங்களில் பெட்ரோல் விலை மிக அதிகமாகவும், சில இடங்களில் லிட்டருக்கு சுமார் 100 ரூபாயாகவும் விற்கப்படும் நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் சமயம் வந்து விட்டதாக பல தரப்பினர் கூறி வருகின்றனர்.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் (O Panneerselvam) அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்கள் எதிகொள்ளும் பல பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சனையை அரசு வேகமாக சரி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

அவர் தனது அறிக்கையில், " கொரோனா நோய்த் தொற்று ஒருபுறம் மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது என்றால், மறுபுறம் வருவாய் இழப்பு, விஷம் போல் ஏறிக்கொண்டு வரும் விலைவாசி உயர்வு என, பல்வேறு காரணிகள் தமிழக மக்களை வாட்டி வதைக்கின்றன. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன.

இந்த விலைவாசி உயர்வுக்கு பதுக்கல், கடத்தல் என பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணமாக விளங்குவது தினசரி ஏறிக்கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலைதான் என்று சொன்னால் அது மிகையாகாது.

பெட்ரோல், டீசல் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அச்சாணி. டீசல் விலை உயர்வின் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல் வாகனக் கட்டணங்கள் உயர்ந்து, அனைத்து வகைப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும்.

ALSO READ: Tasmac: டாஸ்மாக் திறப்புக்கு எதிராக BJP ஜூன் 13 ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்

இந்த விலை உயர்வு காரணமாக, பாசனத்திற்காக டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகள், சந்தைக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வியாபாரிகள், சாதாரண பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

தற்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் திமுக (DMK) தனது தேர்தல் அறிக்கையில், 'அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்' என்று அறிவித்தது.

திமுக அரசு 7-5-2021 அன்று ஆட்சிப் பொறுப்பேற்றபோது, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 17 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 65 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள சூழ்நிலையில், 12-06-2021 அன்று (இன்று) பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 ரூபாய் 43 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 91 ரூபாய் 64 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, திமுக அரசு அமைந்த பிறகு, பெட்ரோல் விலை 4 ரூபாய் 28 காசாகவும், டீசல் விலை 4 ரூபாய் 99 காசாகவும் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல், டீசல் விலையை தினசரி உயர்த்திக்கொண்டே போவது என்பது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை அளிக்கும் என்றும், எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியினை குறைக்க வேண்டும் அல்லது பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தக் கருத்தின் அடிப்படையிலும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு ஏற்பவும், பெட்ரோல் விலையை (Petrol Price) லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கவும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார். 

பல தரப்பிலிருந்து வரும் கோரிக்கைக்கு செவி சாய்த்து, பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்தால், அது மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
 

ALSO READ: Women Priests in TN: தமிழகத்தில் பெண் அர்ச்சகர்; விரைவில் தமிழக அரசு முடிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News