தமிழர்களின் வீடுகளை அகற்றுவதா?... கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

மூணாறில் இருக்கும் தமிழர்களின் வீடுகள் அகற்றப்படும் விவகாரத்தில் கேரள அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 27, 2022, 02:41 PM IST
  • மூணாறில் எல்லை அளவீடு செய்யப்படுமென்று கேரள அரசு தெரிவித்துள்ளது
  • இதனால் தமிழர்களின் குடியிருப்புக்கு ஆபத்தான சூழல்
  • கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
தமிழர்களின் வீடுகளை அகற்றுவதா?... கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம் title=

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கேரளத்தின் எல்லைகள் டிஜிட்டல் முறையில் மறு அளவீடு செய்யப்பட்டு வருவதாக அறிவித்திருக்கும் கேரள அரசு, அதன் ஒரு கட்டமாக மூணாறில் வாழும் தமிழர்களின் வீடுகளை காலி செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் எல்லை அளவீடு சட்டவிரோதம் எனும் நிலையில், அதைக் காரணம் காட்டி தமிழர்களின் வீடுகளை அகற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

கேரள மாநிலத்தின் எல்லைகளை டிஜிட்டல் மறு அளவீடு செய்யும் பணி நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதற்காக மூணாறை அடுத்த இக்கா நகரில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான 60 வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று தேவிகுளம் வட்டார வருவாய்த் துறையினர் அறிவிக்கை அனுப்பியுள்ளனர். தமிழர்கள் வீடுகளை காலி செய்யாவிட்டால், நாளை மறுநாள், நவம்பர் 29-ஆம் தேதி அந்த வீடுகள் இடிக்கப்படும் என்றும் தேவிகுளம் வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கேரள அரசின் எல்லை அளவீட்டுக்கு மூணாறில் உள்ள தமிழர்களின் வீடுகள் எந்த வகையிலும் தடையாக இல்லை. அவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருகின்றனர்; உள்ளாட்சி அமைப்புகளுக்கு தவறாமல் வரி செலுத்தி வருகின்றனர். அதே பகுதியில் கேரளத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத தேவிகுளம் வருவாய்த் துறையினர், தமிழர்களுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுப்பது பாகுபாடானது ஆகும். தமிழர்கள் என்ற ஒற்றை காரணத்திற்காகவே அவர்களை அங்கிருந்து அகற்ற கேரள அரசு துடிப்பதாகவே இந்த நடவடிக்கையை பார்க்கத் தோன்றுகிறது.

அரசுக்கு சொந்தமான இடங்களில் தமிழர்கள் கட்டியுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என்றால், அதற்கு முன்பாக அவர்களுக்கு நகர்ப்புற வளர்ச்சி வாரியம் மூலம் வீடுகளை கட்டித்தர வேண்டும். ஆனால், அதை செய்யாத கேரள அரசு மிகக் குறைந்த காலக்கெடுவுக்குள் அறிவிக்கை அனுப்பி, தமிழர்களின் வீடுகளை காலி செய்யும்படி நெருக்கடி தருவது நியாயமல்ல; அதை ஏற்க முடியாது.

மேலும் படிக்க | போலி பத்திரபதிவு செய்யப்பட்டால் உடனடி ரத்து! அமைச்சர் எச்சரிக்கை!

கேரள அரசு மேற்கொண்டிருக்கும் எல்லை மறு அளவீடு, கேரளத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். கேரள மாநில எல்லையின் பெரும்பகுதி தமிழ்நாட்டை ஒட்டியுள்ளது. விதிகள் மற்றும் மரபுகளின்படி தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்று தான் எல்லைகளை கேரள அரசு மறு அளவீடு செய்ய வேண்டும். ஆனால், கேரள அரசு தமிழகத்தின் ஒப்புதலை பெறாமல் தன்னிச்சையாக எல்லைகளை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கேரள அரசின் செயலால் இரு மாநில எல்லையோரங்களில் உள்ள தமிழக நிலப்பகுதிகள் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

கேரள அரசின் எல்லை மறு அளவீட்டுப் பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படாவிட்டால், தமிழக எல்லை ஆக்கிரமிக்கப்படுவது மட்டுமின்றி, மராட்டியத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே எவ்வாறு எல்லைப் பிரச்சினை எப்படி தீராத சிக்கலாக உருவெடுத்துள்ளதோ, அதேபோல் தமிழ்நாட்டிற்கும், கேரளத்திற்கும் இடையிலும் எல்லைச் சிக்கல் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும். அதை தடுத்து நிறுத்த வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு; அதை அரசு தட்டிக்கழிக்கக் கூடாது.

எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு கேரள அரசின் எல்லை மறு அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன், மூணாறு பகுதியில் தமிழர்களின் வீடுகளை அகற்றும் முடிவை கைவிடும்படியும் அம்மாநில அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News