)
தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை படிப்பதற்காக லண்டன் சென்று இருந்தார். இந்நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். விமான நிலையம் வந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, விஜய் அரசியலுக்கு வருவதற்கு பாஜக பயப்படவில்லை என்றும், உதயநிதியை துணை முதல்வராகியதால் திமுக ஒரு குடும்ப கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது என்று குறிப்பிட்டார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவு என்ற துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்புத் திட்டத்தில் 3 மாதங்கள் கற்றதாகவும், நோபல் பரிசு வென்றவர்கள், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் தலைவர்கள் தனக்கு பாடம் எடுத்தார்கள் என தெரிவித்தார். அரசியலில் ஈடுபடுபவர்கள் அவ்வபோது நம்மை சீர்ப்படுத்திக்கொள்வது முக்கியம். இந்த 3 மாதங்கள் அரசியலில் பல விஷயங்களை கற்று கொள்வதற்கும், என்னை நானே சீர்ப்படுத்திக்கொள்வதற்கும், குறை, நிறைகளை சரி செய்வதற்கும் உதவியது. அதே சமயம் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அரசியலில் நுழைய முடிவு செய்துள்ளார். அவர் சமீபத்தில் தனது மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். அங்கு தனது கட்சியின் கொள்கைகளை தெரிவித்துள்ளார். அதனை பற்றி பின்னர் பேசுகிறேன். அவருக்கு தன்னுடைய கொள்கைகளை சொல்ல உரிமை உள்ளது போல, பாஜகவிற்கு தங்கள் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. திராவிடக் கட்சிகள் பேசும் சித்தாந்தத்தை தான் விஜய் பேசியுள்ளார். அவரது கருத்துக்கள் திராவிட கருத்துகளைப் போலவே இருக்கின்றன, புதிதாக எதுவும் பேசவில்லை. விஜய்யின் அரசியல் பிரவேசம் எந்த விதத்திலும் பாஜகவை பாதிக்காது. புதியவர்கள் அரசியலில் நுழைவதை பற்றி பாஜக கட்சி கவலைப்படவில்லை.
ஆனால் நடிப்பும் அரசியலும் மிகவும் வேறுபட்டவை என்பதை விஜய் நினைவில் கொள்வது அவசியம். அக்டோபர் 27க்கு பிறகு விஜய் எத்தனை முறை பொது வெளியில் வந்திருக்கிறார்? அவரிடம் எப்போது கேள்வி கேட்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அப்போது கேட்போம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள். தற்போது திராவிட கட்சிகளின் வாக்குகள் மூன்று குழுக்களாக பிரிந்து கிடக்கும் அதே வேளையில் பாஜகவின் வாக்குகள் அதிகமாகி வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதல்வராக உள்ளார். திமுக ஒரு குடும்ப கட்சி என்று பாஜக நீண்ட காலமாக கூறி வருகிறது. தற்போது அது உண்மையாகி உள்ளது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினின் பணி குறித்து பின்னர் பேசுவோம். பல மாநிலங்களில் பாஜக வலுவான கட்சியாக உள்ளது, கடந்த மூன்று மாதங்களில் ஏராளமான புதிய தொண்டர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது ஏராளமானோர் பாஜகவில் இணைந்துள்ளனர். கட்சிக்கு புதிய தலைவர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளது. திமுக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் வித்தியாசமாக செயல்படுகின்றன. முதல்வர் ஸ்டாலின், தனது நண்பர் செந்தில் பாலாஜிக்காக இவ்வளவு மகிழ்ச்சியில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் குற்றம் செய்து சிறைக்கு சென்ற குற்றவாளி. ஆம் ஆத்மி கட்சியும் அதன் வழியையே பின்பற்றுகிறது. பாஜகவின் வழியும், சீமானின் வழியும் வேறு வேறு. பாமக, அமமுக எங்களுடன் தொடர்ந்து கூட்டணியில் இருக்கிறார்கள். 2026 தேர்தல் மிகவும் வித்தியாசமாகவும், பரபரப்பாகவும் இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள் என்று அண்ணாமலை கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ