குறைதீர்ப்புக் கூட்டத்துக்கு வருவதைவிட அதிகாரிகளுக்கு என்ன வேலை ? - தஞ்சை மக்கள் கேள்வி

குறை தீர்ப்பு கூட்டத்துக்கு வராத அதிகாரிகள் - காத்திருந்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள்  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 16, 2022, 03:52 PM IST
  • தஞ்சை குறைத்தீர்ப்பு கூட்டத்திற்கு வராத அரசு அதிகாரிகள்
  • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பொதுமக்கள்
  • ஊடகத்தினர் வந்ததும், திடீரென வந்த துணை அதிகாரிகள்
குறைதீர்ப்புக் கூட்டத்துக்கு வருவதைவிட அதிகாரிகளுக்கு என்ன வேலை ? - தஞ்சை மக்கள் கேள்வி title=

வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைகேட்பு கூட்டம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மக்கள் தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் மனுக்களாக கொண்டுவந்து அந்தக் கூட்டத்தில் சமர்ப்பிப்பர். கொரோனாத் தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நாட்களில் ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர்ப்புக் கூட்டம் நடக்கவில்லை. 
பின்னர் தளர்வு ஏற்பட்ட பின்னர், மீண்டும் ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர்ப்புகூட்டம் நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்க | ஸ்டெர்லைட் போராட்டம்.... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம்!!

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி, பல்வேறு கட்சியினர், பொது அமைப்பினரும் வந்து தங்களது மனுக்களை வழங்குவதுண்டு. கொரோனா காரணமாக இணையவழி மூலம் குறைகளை அளிக்கலாம் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சிலர் அறிவித்தாலும், சாமானிய மக்கள் கடிதங்களாக எழுதிவந்து நேரில் அளிப்பதையே திருப்தியாக கருதுகின்றனர். எங்கோ கடைக்கோடி கிராமங்களில் இருந்து காலையில் எழுந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குறைகளோடு பொதுமக்கள் வரும் போது, அதைக் கேட்க வேண்டிய அதிகாரிகள் யாருமே இல்லையென்றால் அந்த மக்களுக்கு எப்படியிருக்கும்.?!

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தஞ்சை மாவட்ட அரசு அதிகாரிகள் யாரும் வராததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் காத்திருந்த அவல நிலை நடந்துள்ளது. 

வழக்கம்போல், திங்கட்கிழமையான இன்று காலையிலேயே பொதுமக்கள் குறைதீர்ப்பு மனுக்களோடு ஆட்சியர் அலுவலகம் வந்தனர். வழக்கமாக காலையிலேயே மனுக்களை வாங்கும் நிலையில், இன்று காலை 11 மணி வரை எந்த மனுக்களையும் அதிகாரிகள் வாங்காததால் பொதுமக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். அதன்பிறகுதான், 11 மணி வரை குறைதீர்ப்பு கூட்டத்திற்கு எந்த அரசு அதிகாரிகளும் வரவில்லை என்பதே அனைவருக்கும் தெரிந்தது. அனைத்து இருக்கைகளும் அதிகாரிகள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது. 

மேலும் படிக்க | நரிக்குறவர்களின் பகுதிக்கே வந்து கோரிக்கைகளை கேட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொலை தூரத்தில் இருப்பதால் அதிகாலையிலேயே எழுந்து வந்தால், மனுக்களை வாங்காமல் மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதைவிட அரசு அதிகாரிகளுக்கு என்ன அப்படி முக்கிய வேலை என்றும், இதுபோன்ற பணிகளில் அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அரசு அதிகாரிகள் யாரும் வராத தகவல், ஊடகத்தினரின் கவனத்துக்குச் செல்லவே, உடனடியாக சம்பவ இடத்துக்கு செய்தியாளர்கள் வந்தனர். இதையடுத்து, பதற்றமடைந்த ஆட்சியர் அலுவலக போலீஸார் பொதுமக்களை வரிசைப்படுத்தினர். பொதுமக்களிடம் ஊடகத்தினர் செய்தி சேகரிக்கத் தொடங்கிய சில மணி நேரங்களில் அங்கு வந்த உதவி ஆட்சியாளர் மற்றும் அரசு அதிகாரிகள் பரபரவென பொதுமக்களின் மனுக்களை வாங்கி சமாளித்தனர். இந்தச் சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | வீடுகட்ட இடையூறு... நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் முன்பு தீ குளிக்க முயற்சி!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News