வேலூர் 3 ஆக பிரிக்கப்படும்!! தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்கிறது

திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்காகக் கொண்டு வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2019, 11:35 AM IST
வேலூர் 3 ஆக பிரிக்கப்படும்!! தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்கிறது title=

சென்னை: திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்காகக் கொண்டு வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என தனது சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இன்று நாட்டின் 73-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி தொடர்ந்து 6-வது தடவையாக மூவர்ணக் கொடியை ஏற்றி உரையாற்றினார். அதேபோல சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தின உரையாற்றினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அப்பொழுது முதல் அமைச்சர் பழனிசாமி கூறியது, 

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும். அதில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை என இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும். இதனையடுத்து தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர உள்ளது.

தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 

பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்ல பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது

தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.16,000 ஆக உயர்த்தப்படும்.

மக்கள் பயன்பாட்டிற்காக மேலும் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.

இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்க கூடாது என்ற கொள்கையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியை திணிக்க எடுக்கப்படும் முயற்சியை முறியடிப்பதில் உறுதியாக உள்ளோம்.

Trending News