ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தவருக்கு சட்ட பாதுகாப்பா? டிரம்புக்கு ’நோ’ சொன்ன நீதிமன்றம்!

Donald Trump Federal Election Charges: முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சட்டப் பாதுகாப்பு கோரிக்கைகளை நிராகரித்த நீதிபதிகள் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கலாமா என்று கேள்வி எழுப்பினார்கள்..

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 7, 2024, 08:37 AM IST
  • அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்
  • சட்டப் பாதுகாப்பு கோரிக்கைகள் நிராகரிப்பு
  • ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கலாமா? நீதிபதிகள் கேள்வி
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தவருக்கு சட்ட பாதுகாப்பா? டிரம்புக்கு ’நோ’ சொன்ன நீதிமன்றம்!

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு, முன்னாள் அதிபருக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. ஏற்கனவே அதிபராக இருந்தபோது ஜனநாயகத்தை கழுத்தை நெரித்தீர்கள் என்ற தீர்ப்பின் வாசகங்கள், டொனால்ட் டிரம்பிற்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

Add Zee News as a Preferred Source

நீதிபதிகளின் உறுதியான தீர்ப்பு

எதிர்வரவிருக்கும் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவிருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிய விரிவான சட்டப் பாதுகாப்புகளை நீதிபதிகள் நிராகரித்தனர். அவர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யமுடியாது என்று நீதிபதிகளின் தீர்ப்பு தெளிவாக கூறிவிட்டது.

டொனால்ட் டிரம்ப் மீதான ஃபெடரல் தேர்தல் குற்றச்சாட்டுகள்

டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது செய்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்கு விசாரணையில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க முடியாது என்று ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிபட மறுத்துவிட்டது. மத்திய தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டின் பேரில் டிரம்ப் மீது வழக்கு தொடரக்கூடாது என்று கோரிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.

தேர்தல் மோசடி முயற்சிகள்

2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்ததாக டொனால்ட் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்காக, விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளின் தீர்ப்பு காட்டமாகவே இருந்தது.

57 பக்கங்கள் கொண்ட ஒரு ஏகமனதான தீர்ப்பை வழங்கீய மூன்று டி.சி சர்க்யூட் நீதிபதிகள் கொண்ட குழு, பதவியில் இருந்தபோது டொனால்ட் டிரம்பு செய்த செயல்களுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் டிரம்புக்கு இந்த முடிவு பெரும் தலைவலியாக மாறலாம்.

மேலும் படிக்க | உலகின் மிக ஏழ்மையான நாடுகள் எவை தெரியுமா? எண்ணெய், தங்கம் அதிகம்..!

டிரம்பின் வாதங்களை நிராகரித்த நீதிமன்றம் 
அமெரிக்க அதிபர் பதவிக்கு வழங்கப்பட்டுள்ள பரந்த சட்டப் பாதுகாப்புகளை சுட்டிக்காட்டி டிரம்ப் தரப்பு வைத்த வாதங்கள் அனைத்தையும் நிராகரித்த நீதிபதிகள், குற்றச்சாட்டுகள் அனைத்துமே தீவிரமானவை என்றும், அவர் மீது வழக்குத் தொடர முடியும் என்றும் தீர்ப்பு கூறிவிட்டனர்.

2020 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, அன்றைய அதிபர் என்ற முறையில் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட செயல்கள் அனைத்தும் நாட்டின் இறையாண்மையின் மீதான தாக்குதல் என்று நீதிபதிகளின் தீர்ப்பு அடிக்கோடிட்டு சொல்லிவிட்டது.

நீதிபதிகளின் கருத்து
அன்றைய அதிபர் டிரம்ப், தனது அதிகாரத்தை பயன்படுத்தி 'சட்டவிரோதமாக தனது பதவிக் காலத்தை நீட்டிக்கவும், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இடமாற்றம் செய்யவும்' முயற்சித்தார் என்று நீதிபதிகளின் ஒருமனதான தீர்ப்பு கூறுகிறது. இது 'பொதுவாக பொருந்தக்கூடிய குற்றவியல் சட்டங்களை' மீறும் செயல் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  

2020 தேர்தலில் தோல்வியடைந்தாலும், ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் அதிபர் டிரம்ப் மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சி, நிரூபிக்கப்பட்டால், நமது அரசாங்கத்தின் கட்டமைப்பின் மீதான முன்னெப்போதும் இல்லாத தாக்குதலாகக் கருதப்படும் என்பதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்கமுடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேல்முறையீடு

நீதிபதிகளின் தீர்ப்பு உறுதியானதாக இருந்தாலும், முன்னாள் அதிபர் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இன்னும் முடிந்து போய்விடவில்லை. அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு சென்றும், தன் மீதான தேர்தல் முறைகேடு வழக்கில் இருந்து நிவாரணம் பெறலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சரணடைந்தார் என்பதும், தற்போது வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அதிபராக பதவியில் இருந்தபோது, அவர் மேற்கொண்ட தவறான செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும்போது, அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட்டால் ஜனநாயகம் உயிர் பிழைக்குமா என்று அரசியல் நோக்கர்கள் கவலைப்படுகின்றனர்.

மேலும் படிக்க | புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் அரசர் சார்லஸ் III... இவரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News