டிரம்ப் உயிரை காத்தது கடவுள் ஜெகந்நாதர்... சொல்வது இஸ்கான்! - 48 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?

Donald Trump: டொனால்ட் டிரம்ப் உயிரை அவர் 48 ஆண்டுகளுக்கு பின் முன் செய்த கர்ம வினையால், கடவுள்தான் அவரை காப்பாற்றியிருக்கிறார் என இஸ்கான் (ISKON) அமைப்பு தெரிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 14, 2024, 02:52 PM IST
  • டொனால்ட் டிரம்ப் மீது இன்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
  • இதில் அவரின் வலதுபுறம் காதில் காயம் ஏற்பட்டது.
  • அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 20 வயது இளைஞர் கொல்லப்பட்டார்.
டிரம்ப் உயிரை காத்தது கடவுள் ஜெகந்நாதர்... சொல்வது இஸ்கான்! - 48 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? title=

Donald Trump ISKON: அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட உள்ளவருமான டொனால்ட் டிரம்ப்பை தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட முயன்றார். தாமஸ் மேத்யூ பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மற்ற ஒருவரும் கொல்லப்பட்டார், உதவிய இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். 

பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் பகுதியில் நடந்த பொதுகூட்டத்தில் டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில் டிரம்பின் வலது காது பகுதியின் மேற்பகுதியில் காயம் அடைந்தது. அவருக்கு வேறு காயங்கள் ஏதும் ஏற்படாதவாரும், அவரை பத்திரமாகவும் அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு படையினர் காப்பற்றினர்.

இஸ்கான் கூறுவது என்ன?

டொனால்ட் டிரம்ப் உள்பட அனைவரும் சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு படையினரின் துரித செயல்பாட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் உயிரை அவர் 48 ஆண்டுகளுக்கு பின் முன் செய்த கர்ம வினையால், கடவுள்தான் அவரை காப்பாற்றியிருக்கிறார் என இஸ்கான் (ISKON) என சுருக்கமாக அழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு... குண்டு பாய்ந்ததில் காயம்... அலறிய மக்கள் - நடந்தது என்ன?

இதுகுறித்து இஸ்கான் அமைப்பின் துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான ராதாரமன் தாஸ் அவரது X தளத்தில் "ஆம், நிச்சயமாக இது தெய்வீக செயல்தான்..." என வரிகளுடன் அந்த நீண்ட பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "சரியாக 48 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெகந்நாதர் ரத யாத்திரை விழாவை டொனால்ட் டிரம்ப் காப்பாற்றியிருந்தார். இன்று, நாம் மீண்டும் ஜெகந்நாதர் ரதயாத்திரை விழாவைக் கொண்டாடி வரும் இந்த வேளையில், டிரம்ப் மீதான தாக்குதலில் இருந்து அவர் உயிரை ஜெகந்நாதர் காப்பாற்றி உள்ளார்.

48 ஆண்டுகளுக்கு முன்பு...

கடந்த 1976ஆம் ஆண்டு இதே ஜூலை மாதம் டொனால்ட் டிரம்ப், ரதங்களை தயாரிப்பதற்கு தனது சொந்த ரயில் யார்ட் (Train Yard) இடத்தை இலவசமாக வழங்கினார். இதன்மூலம், இஸ்கான் பக்தர்கள் ஜெகந்நாதர் ரதயாத்திரையை ஏற்பாடு செய்ய டிரம்ப் உதவினார். இந்தாண்டின் ஜெகந்நாதர் ரதயாத்திரை விழாவின் 9ஆவது நாளை இன்று நாம் கொண்டாடி வருகிறோம். அவர் மீதான இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இருந்து அவர் நூலிழையில் தப்பிச்சென்றதற்கு முக்கியமான காரணம், ஜெகந்நாதரின் தெய்வீகத் தலையீட்டைக் காட்டுகிறது.

அப்போது 30 வயதான ரியல் எஸ்டேட் முதலாளியான டொனால்ட் டிரம்பின் உதவியுடன், ஜெகந்நாதரின் முதல் ரத ஊர்வலம் 1976ஆம் ஆண்டுகளில் நியூயார்க் சாலைகளில் நடந்தது. சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்கான் அமைப்பு நியூயார்க் நகரில் முதல் ரத யாத்திரையை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டபோது பல்வேறு சவால்களை அவர்கள் சந்தித்தது" என நியூயார்க்கில் நடைபெற்ற முதல் ஜெகந்நாதர் ரத யாத்திரை நிகழ்வின் பின்னணியை விவரித்திருக்கிறார்.

ரதம் செய்வதற்கான இடம்...! 

"1976ஆம் ஆண்டு இஸ்கான் தனது 10ஆவது ஆண்டை கொண்டாடியது. அதனால், நியூயார்க்கில் உள்ள பக்தர்கள் அங்கு பெரிய ரத யாத்திரையை முதன்முதலாக திட்டமிட்டனர். ஐந்தாவது அவென்யூவைப் பயன்படுத்த இஸ்கானுக்கு அனுமதி இருந்தது, இது உண்மையில் ஒரு பெரிய விஷயம். ஆனால், மரத்திலான பெரிய ரதங்களை  உருவாக்க, அணிவகுப்பு பாதையின் தொடக்க இடத்திற்கு அருகில் ஒரு வெற்றுத் தளம் தேவைப்பட்டது. நாங்கள் கேட்ட அனைவரும் இல்லை என்றனர். காப்பீட்டு அபாயங்கள் போன்றவற்றைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டார்கள், அதனை புரிந்துகொள்ள முடிந்தது.

மேலும் படிக்க | பூரி ஜெகந்நாதர் யாத்திரை... நகரத்தை வலம் வரும் முப்பெரும் தேவர்கள்..!!

ஐந்தாவது அவென்யூவில் அந்த ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியது அதிசயம் ஒன்றும் இல்லை என்றாலும், ரதங்களை உருவாக்கக்கூடிய ஒரு பெரிய இடத்தை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பலரின் கதவுகளையும் இஸ்கான் தட்டியாது, ஆனால் அனைத்தும் வீணானது. அப்போதுதான் கிருஷ்ண பக்தர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவெடுத்தார்.

ஓகே சொன்ன டொனால்ட் டிரம்ப்

பக்தர்களின் விரக்தி உச்சத்தை அடைந்ததாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த நம்பிக்கைகளும் சிதைந்தன. ஏறக்குறைய உதவிக்கேட்ட அனைத்து நிறுவன உரிமையாளர்களும் சொல்லியது ஒன்றுதான், அதுபோன்ற ரதங்களை உருவாக்க பென்சில்வேனியா ரயில் யார்டு சிறந்த இடமாக இருக்கும் என்பதுதான், ஆனால் அது விற்பனைக்கு வந்துவிட்டதாக சிலர் அப்போது தெரிவித்தனர். சில நாட்களுக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் என்பவர் அந்த பழைய ரயில் யார்டை வாங்கியதாக கூறினார். இதற்கு முன்னர் பலரும் மறுப்பு தெரிவித்துவிட்டதால், டிரம்ப் மட்டும் எப்படி ஒத்துக்கொள்வார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைத்தனர். 

இருந்தும் பக்தர்கள் பெரிய மகா பிரசாதம் மற்றும் காணிக்கை பொட்டலத்துடன் டிரம்ப்பின் அலுவலகத்திற்கு அவர்கள் சென்றனர். அவரது செயலர் பக்தர்களிடம்,"அவர் இந்த மாதிரியான விஷயங்களுக்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார், நீங்கள் வேண்டுமானால் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால் அவர் இல்லை என்று சொல்லப் போகிறார் என்று சொல்லி அனுப்பிவைத்தார். 

ஜெகந்நாதரின் ஆசீர்வாதம்

மூன்று நாட்களுக்குப் பிறகு, டிரம்பின் செயலாளர் பக்தர்களை அழைத்துள்ளார். அப்போது அவர்,"என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் உங்கள் கடிதத்தைப் படித்தார். நீங்கள் விட்டுச்சென்ற பிரசாதத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் கேட்டதற்கு அனுமதியும் அளித்துவிட்டார்" என்றார். அதன்பின் இஸ்கான் விழா ஏற்பாட்டாளர்கள் டிரம்பின் அலுவலகம் சென்று அவர் கையெழுத்திட்டிருந்த அனுமதி கடிதத்தை வாங்கிச் சென்றுள்ளனர்" என இதன் பின்னணியை அந்த பதிவில் விவரித்துள்ளார். 

மேலும், இறுதியாக, "மற்ற கார்ப்பரேட் நிறுவன உரிமையாளர்களைப் போலவே, டிரம்பும் எங்களின் ரத யாத்திரை திட்டத்தை எளிதில் நிராகரித்திருக்கலாம். ஏன் அவர் இல்லை என்று சொல்லவில்லை, இன்னும் அந்த கேள்விக்கு பதில் இல்லை, ஏனெனில் பக்தர்கள் அதை ஜெகந்நாதரின் ஆசீர்வாதம் என்று சொல்கிறார்கள்" என்றார். மேலும், கடவுள் உங்களை ஆசிவர்வதிக்கட்டும் டொனால்ட் டிரம்ப் என அந்த நீண்ட பதிவை முடித்துள்ளார். இதன்மூலம், 48 ஆண்டுகளுக்கு முன் டொனால்ட் டிரம்ப் செய்த கர்ம வினையின் பலனாலேயே கடவுள் ஜெகந்நாதர் இன்று அவரின் உயிரை காப்பாற்றியிருப்பதாக இஸ்கான் பக்தர்கள் நம்புகின்றனர். 

மேலும் படிக்க | கடவுளின் கஜானாவை திறக்க பாம்பு பிடிப்பவர் ஏன்? 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பூரி ஜெகந்நாதர் கருவூலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News