ஆப்கான் கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி: கொண்டாடிய தாலிபான்கள், மவுனம் காத்த பொது மக்கள்

பொது பொழுதுபோக்கின் பல வடிவங்களின் மீது தாலிபான் வெறுப்பை காட்டியுள்ள போதிலும், ​​கிரிக்கெட் எப்போதும் இதில் விதிவிலக்காக இருந்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2021, 10:26 AM IST
ஆப்கான் கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி: கொண்டாடிய தாலிபான்கள், மவுனம் காத்த பொது மக்கள் title=

டி 20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதை பாராட்டி தாலிபான் அதிகாரிகள் திங்களன்று சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்தனர். எனினும், கடந்த காலங்களில் இதுபோன்ற வெற்றிகள் உற்சாகமாக கொண்டாடப்பட்ட காபூலின் தெருக்களில், தற்போது அமைதியான சூழலே இருந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்த் அணியை வீழ்த்தியது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை (Afghanistan) கைப்பற்றிய பிறகு அந்த நாட்டின் அணி பெற்ற முதல் பெரிய வெற்றியாகும் இது.

பொது பொழுதுபோக்கின் பல வடிவங்களின் மீது தாலிபான் வெறுப்பை காட்டியுள்ள போதிலும், ​​கிரிக்கெட் எப்போதும் இதில் விதிவிலக்காக இருந்து வருகிறது. இருந்த சூழலிலும் கூட, ஆப்கான் தேசிய அணி விளையாடும் போதெல்லாம் தாலிபன் போராளிகள் ஆட்டத்தைக் கூர்ந்து கவனித்தது உண்டு.

தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் ட்விட்டரில், "ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். மேலும் எதிர்காலத்தில் அவர்கள் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ: ஆபத்தில் ஆப்கானிஸ்தான்: பணம், நிலம் தந்து தற்கொலைத் தாக்குதலை ஊக்குவிக்கும் தாலிபான் 

தாலிபானின் (Taliban) கத்தார் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளரும் பாராட்டுக்களில் இணைந்து கொண்டார். "மற்ற துறைகளில், குறிப்பாக அரசியல், பொருளாதாரம் மற்றும் அறிவியல் துறைகளில் இதே போன்ற மற்றும் இன்னும் உயர்ந்த சாதனைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவரான ஆப்கானிஸ்தானின் தற்போதைய உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானியின் இளைய சகோதரர் அனஸ் ஹக்கானியிடமிருந்து மிக உயர்ந்த பாராட்டுச் செய்தி வந்தது.

"ஆப்கானிஸ்தான் வென்றது," என்று இளைய ஹக்கானி கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான தாலிபான் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள சுஹைல் ஷஹீன் ட்வீட் செய்து "வெல்-டன் பாய்ஸ்” என்று வாழ்த்தினார்.

இருப்பினும், காபூல் நகரம் முழுவதும் அமைதி நிலவியது. இத்தகைய வெற்றிகள் முன்பு காபூல் தெருக்களில் மகிழ்ச்சி, சரவெடிகள், பட்டாசுகளின் சத்தத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். எனினும், நேற்றைய வெற்றிக்குப் பிறகு காபூலில் மிகக்குறைந்த அளவிலான பாட்டாசு சத்தமே கேட்டது.

தெருக்கள் பெரும்பாலும் காலியாகவும் அமைதியாகவுமே இருந்தன.

தாலிபான் எதிரிகளும் இந்த வெற்றியை நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதினர். காபூல் வீழ்ச்சிக்குப் பிறகு தாலிபான் எதிர்ப்புப் படைகளின் தலைவர்களில் ஒருவராக மாறிய முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே, கிரிக்கெட் அணி தேசிய கீதத்தைப் பாடி, தாலிபான்களால் அங்கீகரிக்கப்படாத கொடிக்கு முக்கியத்துவம் அளித்ததை ட்விட்டரில் சுட்டிக்காட்டினார்.

ஆகஸ்ட் மாதம் நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் அஷ்ரப் கானி, இந்த வெற்றி "இந்த தேசம் உயிருடன் இருக்கிறது. இதை யாரும் பணயக்கைதியாக வைத்திருக்க முடியாது என்ற புதிய நம்பிக்கையை அனைவரின் இதயங்களிலும் நிறுவியுள்ளது!" என்று கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக வன்முறை மற்றும் கிளர்ச்சிகள் இருந்தபோதிலும், ஆப்கான் மக்கள் கிரிக்கெட் விளையாட்டை உற்சாகமாக பின்தொடர்ந்து வந்துள்ளனர். காபூலில் வசிப்பவர்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை (World Cup) போட்டிகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தாலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அடுத்த மாதம் கூடுகிறது.

ALSO READ: Taliban vs good: உலகமே பாராட்டும் வகையில் தாலிபான்கள் செய்த காரியம் என்ன?

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News