ஏப்ரல் 11 பாமக சார்பில் பொதுவேலை நிறுத்தம் - அழைப்பு விடுத்த ராமதாஸ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஏப்ரல்11-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் போராட்டம் பாமக சார்பில் நடைபெற உள்ளதால், அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 7, 2018, 05:41 AM IST
ஏப்ரல் 11 பாமக சார்பில் பொதுவேலை நிறுத்தம் - அழைப்பு விடுத்த ராமதாஸ் title=

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஏப்ரல்11-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் போராட்டம் பாமக சார்பில் நடைபெற உள்ளதால், அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். 

அதைக்குறித்து தனது முகநூலில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உழவர்கள் நலனுக்காக குரல் கொடுப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஈடு இணை எந்தக் கட்சியுமில்லை. விவசாயிகளின் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்காக முதன்முதலில் குரல் கொடுப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். 

காவிரி விவகாரத்தில் பொம்மலாட்டம் போடும் தமிழக அரசு -ராமதாஸ் தாக்கு

ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் அதை செயல்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், முதன்முதலில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட காவிரி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு அறிவித்தவாறு வரும் 11-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ரூ.25000 கோடி இழப்பு - அதிமுக ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் :ராமதாஸ்

மீனுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை என்பதைப் போலவே, ஒரு போராட்டத்தை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் வெற்றிகரமாக எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை பாட்டாளி சொந்தங்களுக்கும் யாரும் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் போராட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திவிட வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சொந்தங்கள் காத்துக் கொண்டிருப்பதை நான் அறிவேன். உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில் 11-ஆம் தேதி போராட்டத்தை பாட்டாளிகள் இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடிப்போம்.

வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டம் விவசாயிகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான போராட்டம் ஆகும். இதற்காக அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் திரட்டி இதை மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும். போராட்டம் குறித்த உத்திகளை வகுப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்களை மாநில, மாவட்ட நிர்வாகிகள் நடத்த வேண்டும். போராட்டத்தின் நோக்கம் குறித்த காரணங்களை விளக்கி துண்டறிக்கைகளை தயாரித்து வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் முன்கூட்டியே வழங்கி அவர்களின் ஆதரவைக் கேட்டுப் பெற்று உறுதி செய்ய வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம்: இரட்டை வேடம் போடும் மத்திய அரசு -ராமதாஸ் தாக்கு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் போராட்டம் காவிரி பாசனப் பகுதிகளுக்கு மட்டுமான போராட்டம் அல்ல.... அது ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான போராட்டம் என்பதையும், இது தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் மட்டுமல்ல.... நமது உணவுப் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்கான போராட்டம் என்பது குறித்த விழிப்புணர்வை அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும். அனைத்து தரப்பினரும் இப்போராட்டத்தில் கைகோர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக இது விவசாயிகள் உள்ளிட்ட மக்களுக்கான போராட்டம். இப்போராட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும், தொல்லையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். போராட்டத்தின் போது சிறு அசம்பாவிதமோ, வன்முறையோ நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் எடுபடாது - ராமதாஸ் தாக்கு

11-ஆம் தேதி பாட்டாளிகளின் ஆதரவுடன் நடத்தப்படும் போராட்டம் மாபெரும் வெற்றி என்ற செய்தி அன்று காலையே உலகம் முழுவதும் பரவ வேண்டும். அவ்வாறு நடந்தால் அடுத்த சில நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வருவதும் உறுதி.

இவ்வாறு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Trending News