ரயில்வேயிடம் ரூ.35 பெற 5 ஆண்டுகள் போராடிய நபர்

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் ரத்து செய்த பயணச்சீட்டுக்காக அதிகமாகப் பிடிக்கப்பட்ட ரூ.35-ஐ ரயில்வேயிடம் இருந்து பெற கடந்த 5 வருடங்களாக போராடியுள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : May 30, 2022, 06:21 PM IST
  • ரயில் டிக்கெட் ரத்து செய்தபோது தவறாக பிடிக்கப்பட்ட ரூ.35
  • ரயில்வேயிடம் 5 ஆண்டுகள் போராடி பெற்ற நபர்
  • 2.98 லட்சம் பயணிகளுக்கு ரூ.35 வழங்க ரயில்வே ஒப்புதல்
ரயில்வேயிடம் ரூ.35 பெற 5 ஆண்டுகள் போராடிய நபர்  title=

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியைச் சேர்ந்த பொறியாளரான சுஜீத் சுவாமி, கடந்த  2017-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி தனது ஊரில் இருந்து டெல்லி செல்வதற்காக, கோல்டன் மெய்ல் ரயிலில் ஏப்ரல் மாதத்தில் முன்பதிவு செய்தார். 2017 ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து ஜிஎஸ்டி அமலான நிலையில், அவர் அதற்கு முன்னதாகவே தனது ரூ.765 மதிப்புடைய பயணச்சீட்டை ரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து ரூ.100 கழிக்கப்பட்டு ரூ.665 அவரது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

ரத்து செய்வதற்கான கட்டணம் ரூ.65 மட்டுமே என்பதால் தனக்கு ரூ.100 பிடிக்கப்பட்டது குறித்து சுஜீத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ரயில்வே அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சகம், சுஜீத்திடம் வசூலிக்கப்பட்ட ரூ.100-ல் ரூ.65 ரத்துக் கட்டணமாகவும், ரூ.35 சேவை வரியாகவும் வசூல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.  ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்கு முன் பதிவுசெய்து, ஜிஎஸ்டி அமலான பின் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, சேவை வரி திருப்பி அளிக்கப்பட மாட்டாது எனவும், ரயில்வே அமைச்சகம் பதிலளித்தது. 

மேலும் படிக்க | குழந்தைகளுக்கான சிறப்பு படுக்கை வசதி : அறிமுகம் செய்தது ரயில்வே

ஆனால், அவர் ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்பே பயணச்சீட்டை ரத்து செய்ததை அடுத்து அந்த ரூ.35 திருப்பி அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் 2019-ம் ஆண்டு மே 1-ம் தேதி அவரது வங்கிக்கணக்கில் ரூ.33 மட்டும் வரவு வைக்கப்பட்டது. இருப்பினும், அந்த ரூ.2-ஐப் பெறுவதற்காக அவர் கடந்த 3 ஆண்டுகளாகத் தனது போராட்டத்தை தொடர்ந்து வந்தார். 5 ஆண்டு போராட்டங்களுக்கு விடையாக கடந்த 27-ம் தேதியன்று அந்த ரூ.2-ம் அவருக்கு திருப்பி அளிக்கப்பட்டது.

அதோடு இல்லாமல், சுஜீத் போன்று தவறுதாக பிடிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த ரூ.35 திருப்பி வழங்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2.98 லட்சம் பயணிகளுக்கு ரூ.35 திருப்பி வழங்கப்படவுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.2.43 கோடி ஆகும்.

இதற்காக ரயில்வே, ஐஆர்சிடிசி, நிதி அமைச்சகம் மற்றும் சேவை வரித்துறைக்கு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் சுஜித் 50-க்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதியுள்ளார். ஆனால் இறுதியில் தனது போராட்டத்தால் சுமார் 3 லட்சம் பயணிகள் பயனடைந்ததை அடுத்து தான் திருப்தி அடைவதாகவும், தனக்கு வந்த ரூ.35 மற்றும் 5 ஆண்டுகளுக்கு தலா ரூ100 என ரூ.535-ஐ தான் பிம் கேர்ஸ் நிதிக்கு வழங்கியதாகவும் சுஜித் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | UPSC சிவில் சர்வீஸ் 2021 முடிவுகள் அறிவிப்பு; ஸ்ருதி சர்மா முதலிடம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News