ஏப்ரல் 15 முதல் மே 3 வரை முன்பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் டிக்கெட்டுகளை ரத்து செய்த ரயில்வே

மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், செவ்வாயன்று ரயில்வே அதன் அனைத்து பயணிகள் சேவைகளையும் மே 3 வரை ரத்து செய்தது மட்டுமல்லாமல் அனைத்து முன்பதிவுகளையும் நிறுத்தியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 14, 2020, 08:47 PM IST
ஏப்ரல் 15 முதல் மே 3 வரை முன்பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் டிக்கெட்டுகளை ரத்து செய்த ரயில்வே title=

புதுடெல்லி: சீனாவில் தொடங்கி 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி, இந்தியாவையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை, அடுத்த மாதம் (மே -May) 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி இன்று காலை உத்தரவிட்டார். 

பிரதமரின் உத்தரவை அடுத்து, ரயில் மற்றும் விமானம் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன் விளைவால் பயணிகள் ரயில்களை நிறுத்தி வைத்ததன் காரணமாக ஏப்ரல் 15 முதல் மே 3 வரை பயணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட சுமார் 39 லட்சம் டிக்கெட்டுகளை ரயில்வே ரத்து செய்ய உள்ளது என்று பி.டி.ஐ. செய்தி ஊடக வட்டாரங்கள் தெரிவித்தது. 

ஏப்ரல் 14 க்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டால், ரயில்கள் இயக்கப்படும் என்பதால், பயணங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரயிலவே அனுமதித்த நிலையில், பயணிகளால் சுமார் 39 லட்சம் முன்பதிவு செய்யப்பட்டது. 

தற்போது மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், செவ்வாயன்று ரயில்வே அதன் அனைத்து பயணிகள் சேவைகளையும் மே 3 வரை ரத்து செய்தது மட்டுமல்லாமல் அனைத்து முன்பதிவுகளையும் நிறுத்தியது.

எவ்வாறாயினும், அனைத்து பயணிகளும் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான முழு பணத்தைத் திரும்பப் பெறுவார்கள்.

இந்திய ரயில்வே நிர்வாகம், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு தானாகவே அவர்களின் கணக்கில் முழு பணத்தைத் திரும்ப செலுத்தப்படும் என்றும், கவுண்டர்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு ஜூலை 31 வரை பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றும் கூறியுள்ளது.

Trending News