மோடிஜியை கண்டு வியந்து மகிழ்கிறேன் - காசியில் இளையராஜா பேச்சு

பிரதமர் மோடியின் எண்ணத்தை கண்டு வியந்து மகிழ்கிறேன் என இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 19, 2022, 04:16 PM IST
  • காசியில் தமிழ் சங்கமம் இன்று தொடங்கியது
  • பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
  • இளையராஜா கலந்துகொண்டு உரையாற்றினார்
மோடிஜியை கண்டு வியந்து மகிழ்கிறேன் - காசியில் இளையராஜா பேச்சு title=

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருக்கும் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கலாசாரத்துறை சார்பில் காசி தமிழ்ச் சங்கமம் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 16ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். மேலும் திருக்குறள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பிரதமரால் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இசையமைப்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான இளையராஜா பேசுகையில், “காசி நகருக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை இங்கே விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பாரதியார் இங்கே இரண்டு வருடம் தங்கிப் படித்திருக்கிறார். இங்கு படித்து அவர் கற்றுக்கொண்ட விசயங்களை, இங்குள்ள புலவர் பெருமக்களின் விவாதங்களை நேரில் கண்டு, கேட்டு தெரிந்து கொண்ட பாரதியார், இந்தியாவில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நேரத்தில், காசி நகர் புலவர்களின் விவாதங்களை கேட்க ஒரு கருவி செய்வோம் என்று பாடியிருக்கிறார். "கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்" என்று நதி நீர் இணைப்பு என்ற ஒன்று வரும் முன்பாகவே தனது 22 வயதில் அதைப்பற்றிப் பாடிவிட்டார்.

அப்படியான பாரதியார் தனது ஒன்பது வயது முதல் பதினொருவயது வரை இரண்டு ஆண்டுகள் இங்கே இருந்து பயின்று அறிவு பெற்றிருக்கிறார் என்பது தமிழ் மக்களுக்கு மிகவும் அரிய விஷயமாகும். அதே போல் நீங்கள் அறியாத இதுவரை குறிப்பிடப்படாத விஷயத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். கபீர் “தோஹா"பாடினார் இரண்டு அடிகளில் பாடுவது அது. அங்கே தமிழில் திருவள்ளுவர் இரண்டே அடிகளில் திருக்குறள் என்ற நூலை இயற்றினார். “தோஹா"வில் எட்டு சீர்கள் அமைந்திருக்கின்றன. திருக்குறளில் ஏழு சீர்கள்தான். முதல் அடி நான்கு சீர், இரண்டாவது அடி மூன்று சீர். இதனையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கபீர்தாஸ் ஆன்மிகத்தைப் பற்றி பாட, திருவள்ளுவர் உலகப் பொதுமறையாக, அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று முப்பால்களாக 1330 பாடல்களாக அதனை எழுதினார்.

இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்கிறேன். முத்துசாமி தீட்சிதர் கர்நாடக சங்கீதத்தின் மாமேதை என்று போற்றப்படும் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இங்கே வந்து கங்கை நதியில் மூழ்கி எழும்போது சரஸ்வதி தேவி அவர் கையில் வீணை ஒன்றை பரிசளித்திருக்கிறார் அந்த வீணை இன்னமும் இருக்கிறது. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் படிக்க | காதலியுடன் புதுவீட்டில் குடியேறும் நடிகர்... அப்பார்ட்மெண்ட் ரூ. 100 கோடியா?

இப்படிபட்ட பெருமை மிகுந்த இந்த காசி நகரிலே தமிழ்ச் சங்கமத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் நமது பிரதமர் அவர்களுக்கு எப்படித் தோன்றியது என்பதை எண்ணி மிகவும் வியந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். மோடி ஜி என்னால் என்னுடைய உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. இந்த தமிழ்ச் சங்கமத்தை இந்த புண்ணிய பூமியான காசியிலே நடந்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என்பதை எண்ணி நான் வியந்து மகிழ்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த புகழும் வழங்க வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். வணக்கம்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News