முத்தலாக் மசோதாவை அதிமுக எதிர்த்ததா? ஆதரித்ததா? என்பது விடுகதை: ப.சிதம்பரம்

முத்தலாக் மசோதாவின் மீது வாக்கெடுப்பு...!! மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 31, 2019, 08:02 PM IST
முத்தலாக் மசோதாவை அதிமுக எதிர்த்ததா? ஆதரித்ததா? என்பது விடுகதை: ப.சிதம்பரம் title=

புதுடெல்லி: முத்தலாக் மசோதாவின் மீது வாக்கெடுப்பு...!! மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்த முறை மீண்டும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதாவை நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மோடி அரசு தாக்கல் செய்தது. 

முன்னதாக கடந்த மாதம் 21-ஆம் தேதி முத்தலாக் மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தாக்கல் செய்தார். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரித்து பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் தற்போது வேலூர் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதுமட்டுமில்லாமல் உள்ளாட்சி தேர்தலும் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத் பேசியது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை அதிமுக மீது ஏற்படுத்தியது.

சுதாரித்துக்கொண்ட அதிமுக, நேற்று முன்தினம் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து பேசியது. இந்த மசோதாவின் ஒரு சில பிரிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக்குழுவுக்கு அனுப்ப வேண்டு எனக்கூறிவிட்டு வாக்களிப்பில் பங்கேற்காமல் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கடும் எதிர்ப்புக்கிடையே, இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஒரே கட்சியை சேர்ந்த இரு அவைகளின் உறுப்பினர்கள் மாறி மாறு பேசியதால் விவாதத்துக்கு உள்ளானது. 

அதிமுக உறுப்பினர்கள் ஆதரவும் , எதிர்ப்பும் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், அதிமுக-வை கிண்டல் செய்யும் விதத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியது, முத்தலாக் தண்டனைச் சட்ட மசோதா செல்லாது என்று மிக விளக்கமாக மாநிலங்கள் அவையில் அஇஅதிமுக தலைவர் உரையாற்றினார். அவை உறுப்பினர்கள் அவரது உரையைப் பாராட்டினார்கள்.

முத்தலாக் தண்டனைச் சட்ட மசோதா செல்லாது என்று மிக விளக்கமாக மாநிலங்கள் அவையில் அஇஅதிமுக தலைவர் உரையாற்றினார். அவை உறுப்பினர்கள் அவரது உரையைப் பாராட்டினார்கள்.

மசோதாவின் மீது வாக்கெடுப்பு, அஇஅதிமுக உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை! மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Trending News