கொரோனாவை விரட்ட கசப்பு மருந்து ஊரடங்கு: அனைவரும் கடைப்பிடிப்போம்- PMK

கொரோனா நோயை விரட்ட கசப்பு மருந்து ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிப்போம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.,

Last Updated : Mar 25, 2020, 11:07 AM IST
கொரோனாவை விரட்ட கசப்பு மருந்து ஊரடங்கு: அனைவரும் கடைப்பிடிப்போம்- PMK title=

கொரோனா நோயை விரட்ட கசப்பு மருந்து ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிப்போம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.,

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்தியாவில் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு ஆணையை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்திருக்கிறார். கொரோனாவை கட்டுப்படுத்த 3 வார ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஒரு வாரத்திற்கும் மேலாக நான் வலியுறுத்தி வந்த நிலையில், அதை பிரதமர் அறிவித்திருப்பது  நிம்மதியளிக்கிறது. கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கு மிகச்சிறந்த நடவடிக்கை இது ஆகும்.

கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் எதார்த்தமானவை; தீர்க்கமானவை. ‘‘21 நாள் ஊரடங்கு உத்தரவு கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிரான உறுதியான போரில் அவசியமான நடவடிக்கை ஆகும். இது மக்கள் ஊரடங்கை விட சில படிகள் மேலானது; கடுமையானது. இதை நீங்கள் பின்பற்றியே தீர வேண்டும். இந்த விஷயத்தில் சிலரின் அலட்சியம், சிலரின் தவறான யோசனைகள் உங்களையும், குழந்தைகளையும், பெற்றோரையும், குடும்பத்தையும், நண்பர்களையும், ஒட்டுமொத்த நாட்டையும் மிகப்பெரிய ஆபத்தில் ஆழ்த்தி விடும். ஆகவே, ஊரடங்கு ஆணை காலத்தில்  உங்கள் வீட்டுக்கு வெளியில் நீங்கள் எடுத்து வைக்கும் ஓர் அடி கூட உங்கள் வீட்டுக்கு கொரோனா பெருந்தொற்று நோயை அழைத்து வந்து விடும்’’ என்று பிரதமர் கூறியிருப்பது 100% உண்மையாகும்.  இதைத் தான் கடந்த 10 நாட்களாக பா.ம.க ஆலோசனையாகவும், எச்சரிக்கையாகவும் கூறி வந்தது.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு என்பது சுதந்திர இந்தியாவில் இதுவரை கேள்விப்படாத ஒன்றாகும். ஆனாலும், கொரோனா என்ற பேரழிவை முறியடிக்க இதைத் தவிர வேறு வழியில்லை. 21 நாட்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பது மிகக்கடினமான செயல் தான்; இது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இன்றைய சிக்கலான சூழலில் இதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். போர்க்களத்துக்கு செல்லும் வீரர்கள் எத்தனை மாதங்கள் ஆனாலும், ஆண்டுகள் ஆனாலும் களத்தை எதிர்கொண்டு தான் தீர வேண்டும்; போர்க்களத்தில் தங்களுக்கு ஏற்படும் வசதிக் குறைவை மட்டுமின்றி, வாழ்க்கை இழப்பையும்  வீரர்கள் பொருட்படுத்துவதில்லை.

அவ்வளவு ஏன்?.... கொரோனா நோயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல் துறையினர்,  ஊடகத்துறையினர் என பல லட்சக்கணக்கானோர், நாம் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இரவு பகலாக, ஓய்வு, உறக்கமின்றி பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இதற்காக சலித்துக் கொள்வதில்லை. அவர்களுடன் ஒப்பிடும் போது நாம் கடைபிடிக்கப்போகும் ஊரடங்கு என்பது ஒரு பொருட்டே அல்ல. கொரோனா தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. கொரோனா பரவினால் இந்தியாவில் லட்சக்கணக்கானோர் உயிருடன் இருக்க மாட்டார்கள். நாம் நமது நண்பர்களையும், உறவினர்களையும் கூட இழக்க நேரிடலாம். ஆகவே, வருமுன் காப்பது தான் சிறந்தது. அதற்கான கசப்பு மருந்து தான் 21 நாள் ஊரடங்கு. அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் நம்மைத் தாக்காது என்பது போன்ற தவறான நம்பிக்கைகளும், அலட்சியமும், பிரதமர் கூறியதைப் போல நம்மையும், நாட்டையும் மிகப்பெரிய ஆபத்தில் ஆழ்த்தி விடும். அதிலும் குறிப்பாக கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் கிராமங்களுக்கு சென்றுள்ளதால் நோய் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முதன்முதலில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர் கடந்த 7-ஆம் தேதி அடையாளம் காணப்பட்டார். 17-ஆம் தேதி அவர் முழுமையாக குணமடையும் வரை, அதாவது அடுத்த 11 நாட்களுக்கு வேறு எவருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை. இரண்டாவது நோயாளி 18-ஆம் தேதி அடையாளம் காணப்பட்டார். ஆனால், அடுத்த 6 நாட்களில் கூடுதலாக 16 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. தேசிய அளவில் பார்த்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐத் தொட  45 நாட்கள் ஆன நிலையில், கடந்த 10 நாட்களில் 450 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசின் வேகம் இந்த அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதை உணர்ந்து மக்கள் தங்களையும், மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களாக இருந்தாலும், அண்டை மாநிலங்களில் இருந்தும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் கிராமங்களுக்கு சென்றவர்களாக இருந்தாலும் அடுத்த சில வாரங்களுக்கு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் கொரோனா வைரஸ் நெருப்புச் சங்கிலியை அறுத்து மக்களை பாதுகாக்க வேண்டும். கொரோனா கிருமியை இந்தியர்கள் அனைவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு வெற்றி கொள்ள போராட வேண்டும்.

என்றார். 

Trending News