கோவிட் நோயாளிகளுக்கு சிக்கன் பிரியாணி: ரெஸ்டாரண்டுகளிலிருந்து வரும் உணவு

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, திருச்சி மாவட்ட நிர்வாகம், சிக்கன் பிரியாணி உட்பட அசைவ உணவுகளை வழங்கத் துவங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 11, 2020, 09:09 AM IST
  • உணவு ஆரோக்கியமான முறையில் நோயாளிகளை வந்தடைவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு கூறினார்.
  • நாளொன்றுக்கு சுமார் 500 பேருக்கு இந்த பேக்ட் உணவு வழங்கப்படுகிறது.
  • நோயாளிகளுக்கு இரு முறை சுண்டல் வகைகள், முட்டை, வாழைப்பழம், எலுமிசச்சம் பழரசம் ஆகியவையும் தினமும் வழங்கப்படுகின்றன.
கோவிட் நோயாளிகளுக்கு சிக்கன் பிரியாணி: ரெஸ்டாரண்டுகளிலிருந்து வரும் உணவு title=

திருச்சி: கோவிட்-19 (Covid—19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, திருச்சி (Trichy) மாவட்ட நிர்வாகம், சிக்கன் பிரியாணி (Chicken Biriyani) உட்பட அசைவ உணவுகளை வழங்கத் துவங்கியுள்ளது. நகரில் உள்ள உணவகத்திலிருந்து உணவு ஆர்டர் செய்யப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, பாரதிதாசன் காஜாமலை வளாகத்தில் உள்ள கோவிட் சிகிச்சை மையம் (Covid Centres) ஆகியவை இந்த உணவுகள் வழங்கப்படும் மையங்களில் அடங்கும்.

திங்கட்கிழமை முதல் வெளி ரெஸ்டாரண்டுகளிலிருந்து ஆர்டர் செய்யப்பட்டு வாங்கப்படும் உணவுகள் நோயாளிகளுக்கு மூன்று வேளையும் வழங்கப்படுவதாகவும், இந்த உணவு ஆரோக்கியமான முறையில் நோயாளிகளை வந்தடைவதாகவும் மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு கூறினார். வாரத்தின் ஏழு நாட்களும் என்னென்ன உணவுகளை வழங்க வேண்டும் என உணவகத்திற்கு கூறப்பட்டுள்ளது. வியாழக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதிய உணவிற்கு சிக்கன் பிரியாணியும் முட்டை மசாலாவும் மெனுவாக வைக்கப்பட்டுள்ளன.

முன்னர் மருத்துவமனையிலேயே உணவு தயாரிக்கப்பட்டு வந்தது. சிலசமயம் தனியார் நிறுவனங்களும் பொது மக்களும் உணவுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். மூன்று கோவிட் மையங்களில் நாளொன்றுக்கு  சுமார் 500 பேருக்கு இந்த பேக்ட் உணவு வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு நோயாளிக்கு மூன்று வேளை உணவுக்கு சுமார் 250 ரூபாய் ஆகும் என்றும் இந்தத் தொகை மாநில பேரிடர் நிதி அல்லது தமிழக (Tamil Nadu) அரசாங்க நிதியிலிருந்து பெறப்படுகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ALSO READ: உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சோமராசம்பேட்டையைச் சேர்ந்த ஒருவர், மருத்துவமனையில் ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டதாகக் கூறினார். உணவின் ருசி நன்றாக இருந்ததாகவும், ஆனால், சில சமயம் அளவு குறைவாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். புரதச்சத்து, கார்போஹைட்ரேட்ஸ், விடமின்கள், கொழுப்புச்சத்து ஆகியவை நிறைந்த மெனுவை தாங்கள் தயார் செய்ததாக நிர்வாகம் தெரிவிக்கிறது. கோவிட் மையங்களில் நோயாளிகளுடன் வந்தவர்களுக்கு மருத்துவமனையில் தயாரிக்கப்படும் உணவே அளிக்கப்படுகின்றது.

உணவகத்திலிருந்து வரும் உணவைத் தவிர, நோயாளிகளுக்கு இரு முறை சுண்டல் வகைகள், முட்டை, வாழைப்பழம், எலுமிசச்சம் பழரசம் ஆகியவையும் தினமும் வழங்கப்படுகின்றன. மேலும் நோயாளிகளுக்கு உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீரும் வழங்கப்படுகின்றது.

ALSO READ: ஹார்ஸ்ஷூ நண்டு ரத்தம் கொரோனாவை குணப்படுத்த உதவும் என தகவல்..!

Trending News