Ki.Ra: கரிசல் பூமியின் அடையாளம்; முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தார்

கரிசல் பூமியின் அடையாளம் கி.ரா எனும் கி.ராஜநாரயணன் 98 வயதில் இயற்கை எய்தினார்.  தமிழின் தனிப் பெரும் வளத்தை காலம் கரைத்து விட்டது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 18, 2021, 08:54 AM IST
  • கரிசல் பூமியின் அடையாளம்; முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தார்
  • கரிசல் குயில் தன் கானத்தை நிறுத்திக்கொண்டது
  • பல விருதுகளை அலங்கரித்தவர் கி.ரா
Ki.Ra: கரிசல் பூமியின் அடையாளம்; முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தார்  title=

புதுச்சேரி: கரிசல் பூமியின் அடையாளம் கி.ரா எனும் கி.ராஜநாரயணன் 98 வயதில் இயற்கை எய்தினார்.  தமிழின் தனிப் பெரும் வளத்தை காலம் கரைத்து விட்டது.

கரிசல் குயில் தன் கானத்தை நிறுத்திக்கொண்டது. மண்ணின் மனம் கமழ்ந்த தென்றல் காற்றின் பரிசம் எங்கே என்ற ஏக்க பெருமூச்சே தமிழ் நெஞ்சங்களுக்கு மிச்சமாகிறது.

கரிசல் மண்ணில் மழை பெய்யும் போது வரும் வாசம் போன்றது கி.ராவின் எழுத்து. கீழ்தட்டு மக்களின் வாழ்க்கையை எளிமையாக எழுதி நிதர்சனத்தை புரிய வைத்தவர் கி.ரா. சென்ற நூற்றாண்டின் கரிசல் காட்டுத் தமிழ்புலத்தின் ஆகச்சிறந்த  கதைசொல்லி கி.ராஜநாரயணன். அன்னாரின் மறைவுக்கு தமிழுலகமே கண்ணீரஞ்சலி செலுத்துகிறது. 

ஆகச் சிறந்த கதைசொல்லிக்குக் சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான அஞ்சலி செய்திகள் பதிவிடப்படுகின்றன.

புதுச்சேரிக்கே அடையாளம் கொடுத்த மாபெரும் எழுத்தாளர்,  கி.ரா (எ) கி. ராஜநாராயணன் விவசாயிகள் போராட்டத்தின் மூலம் கம்யூனிஸ்ட் ஆனவர். சிறந்த எழுத்தாளர் என்பதோடு, அருமையான கதைசொல்லி என்பதும் அவரது சிறப்பம்சங்கள்!  

Also Read | Cyclone Tauktae கரையைக் கடக்கத் தொடங்கியது; எச்சரிக்கையில் குஜராத் 14 பேர் பலி

சாகித்ய அகாடமி விருது, தனக்கான உரிய மனிதரை தேர்ந்தெடுக்கொண்டது என்றால் அது மிகையாகாது. பல விருதுகளை அலங்கரித்தவர் என்பதை விட, மக்களின் மனதில் நீண்ட காலமாக சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர் என்பதுதான் தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்கான சரியான இடம் என்றே சொல்லலாம்.

கரிசக்காட்டு எழுத்தில் வாழ்ந்து திளைத்துக் கொண்டிருந்த கி.ராஜநாராயணன் தனது எழுத்துப் பணியையும் சிந்தனைப் பணியையும் நிறுத்திக் கொண்டார். ஆனால், தமிழ் இலக்கியத்தில் அவரது பெயர் என்றென்றும் மறையாதது.

எதார்த்த வாழ்வினை இலக்கிய கதைகளாக வடித்த கி.ராஜநாராயணன் ஐயா, எழுத்துக்களையும் எண்ணில்லா சிந்தனைகளையும் நம்முள் விதைத்து விட்டு விடைபெற்றுக்கொண்டார்.

Also Read | Adi Shankaracharya Jayanti : இந்து மதத்தின் மாபெரும் சிற்பி ஆதி சங்கரரின் ஜெயந்தி 

கரிசல் இலக்கியத்தின் தந்தை, தனது 98 வயதில் வயது மூப்பின் காரணமாக புதுச்சேரியில் உயிர் பிரிந்தார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கி. ராஜநாராயணன், நேற்று இரவு (மே 17-ம் தேதி) சுமார் 11:30 மணியளவில் காலமானார்.

கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் ஆகிய நாவல்கள் மூலம் பிரபலமானார் கி.ரா.  கரிசல் வட்டார அகராதி என மக்கள் பேசும் மொழிக்கென ஓர் அகராதியை உருவாக்கினார் கி.ரா. 

மழைக்கு மட்டுமே பள்ளிக்கூடம் ஒதுங்கியவன் என்று தன்னைப் பற்றி சொல்லிய கி.ரா,  பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன் என்று சொல்பவர். ஆனால், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றினார் என்பது, தமிழ் அவரது உயிரில் கலந்தது என்பதை உணர்த்தப் போதுமானது.

Also Read | ரயில் மூலம் தமிழகத்துக்கு 151 டன் ஆக்சிஜன் விநியோகம்

பேசிக் கொண்டிருக்கும்போதே, புராணங்களை காலத்தின் முன்னும், பின்னும் சென்று ஆராயும் நுட்பம் தான் கி.ராவின் சிறப்பு என்று கூறலாம். அதை அவர் கதை சொல்லும் நுட்பத்தில் மட்டும் பயன்படுத்தவில்லை. வாழ்க்கையின் இறுதிக்காலம் வரை நடைமுறைபப்டுத்தினார் என்பதற்கு ஒரே ஒரு உதாராணம் போதும்.  

கடந்த ஆண்டு, "அண்டரண்டப்பட்சி" என்ற பெண்களைப் பற்றிய புத்தகத்தை தன் கைப்பட எழுதினார் கி.ரா. அண்டரண்டப்பட்சியை வாசகர்கள் கைப்பிரதியாகவே படிக்க வேண்டும், அச்சிட வேண்டாம் என ஆசைப்பட்டார். இப்படி தனது இறுதிக் காலம் வரை தமிழையே சுவாசித்த கி.ராவின் இழப்பு, இனிமேல் தமிழில் வெற்றிடமாகவே இருக்கும்…

Also Read | Bizarre Hilarious: 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News