மிக்ஜாம் புயலின் கோர ஆட்டம்... ஊர் முழுக்க தண்ணீர் - சென்னையின் இப்போதைய நிலை என்ன?

Chennai Floods: மிக்ஜாம் புயலின் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளதை அடுத்து, பல பகுதிகளில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 5, 2023, 09:34 AM IST
  • இன்னும் பல பகுதிகளில் மின்சாரம் வரவில்லை.
  • சில சாலைகளில் 1 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
  • இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மிக்ஜாம் புயலின் கோர ஆட்டம்... ஊர் முழுக்க தண்ணீர் - சென்னையின் இப்போதைய நிலை என்ன? title=

Chennai Floods: சென்னையில் நேற்று (டிச. 4) மாலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதன் காரணமாக விமான நிலையத்தில் இருந்து அண்ணா சாலை வரையும்; கிழக்கு கடற்கரைச் சாலையும் தடையற்ற போக்குவரத்து சாலைகளாக (Green Corridor) பராமரிக்கப்படு வருகிறது. மற்ற இடங்களில் 1 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அவசர தேவைக்காக அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளைப் பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை புறநகர் ரயில்கள் இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் இன்று காலை 5 மணி முதல் செயல்பட்டு வருகின்றன. பேருந்து போக்குவரத்தும் படிபடியாக அதிகரித்து வருகிறது. 

முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்

புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சி & நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் நீர்தேங்கியுள்ள முக்கியப் பகுதிகளில் நீரகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படு வருகின்றன.

மேலும் படிக்க | வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்... அரசு கண்டுகொள்ள வில்லை என குற்றச்சாட்டு!

அனைத்து பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் சென்னை காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் (DDRT) மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை  மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையுடன் காவல்துறையினர் இணைந்து செயல்படுகின்றனர். சென்னை காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின் (DDRTs) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்

நேற்று காலை கிண்டி 5 பர்லாங் சாலையில் அமைந்துள்ள LPG நிலையத்தின் தற்காலிக ஜெனரேட்டர் அறை, அருகில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் பள்ளத்தில் விழுந்தது. அந்த நிலையத்தின் மூன்று ஊழியர்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்புமற்றும் மீட்புப் பணிகள் துறையினருடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்கப்பட்டோர்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள், M.G.சாலை அடையாரில் அமைந்துள்ள மழைநீர் தேங்கிய அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர். முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட BRN கார்டன் பகுதியிலிருந்து 54 குடும்பங்கள் மீட்கப்பட்டனர். விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராம் தசரதபுரம் 4வது தெருவில், புதிதாக பிரசவித்த தாய் மற்றும் குழந்தை மீட்கப்பட்டனர். கோயம்பேடு பகுதியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தை மீட்கப்பட்டனர். மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்தோம் பகுதியில் உள்ள கணேசபுரம், ஸ்லேட்டர்புரம் & சண்முகா தெருவில் 225 நபர்கள் மீட்கப்பட்டனர். மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்பு நகரில் 15 நபர்கள் மீட்கப்பட்டனர்.

மேலும் படிக்க | சென்னையில் 4 ஆயிரம் கோடிக்கு வடிகால் அமைத்த லட்சணம் இதுதானா? திமுகவுக்கு செல்லூர் ராஜூ கேள்வி

6 நபர்கள் (2 முதியவர்கள். 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள்) மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாச ஐயர் தெருவில் உள்ள மழைநீர் தேங்கிய அவர்களது இல்லத்திலிருந்து மீட்கப்பட்டனர். மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த ராம் நகரிலிருந்து ஒரு பெண் உட்பட 8 நபர்கள் மீட்கப்பட்டு மயிலை பாலாஜி நகர் நிவாரண மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த அண்ணா நகரில் இருந்து 4 நபர்கள் மீட்கப்பட்டனர்.

மெரினா கால்வாய் தெருவில் இருந்து 8 நபர்கள் மீட்கப்பட்டு. V.R.பிள்ளை தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லை அன்னை சத்யா நகரில் இருந்து 250 நபர்கள் மீட்கப்பட்டு, செயின்ட் சேவியர் பள்ளிக்கூட நிவராண முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

17 சுரங்கங்களும் மூடல்

55 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது சாலிகிராமம் மற்றும் பழவந்தாங்கல் ஆகிய இடங்களில் விழுந்த மரங்களை மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவினரால் மற்ற துறைகளுடன் இணைந்து அகற்றப்பட்டன. மேலும், சென்னையில் உள்ள 17 சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது.

கணேசபுரம் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, செம்பியம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மவுண்ட்- தில்லைநகர் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை- அரங்கநாதன் சுரங்கப் பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, CB சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப் பாதை, RBI சுரங்கப்பாதை, கோயம்பேடு, புதுபாலம் சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை, சூளைமேடு, லயோலா சுரங்கப்பாதை ஆகிய 17 சுரங்கப்பதைகளை காவல்துறையினர் மூடி போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளனர்.

சென்னை பெருநகரில் 57 இடங்களில், சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. புயலின் எதிரொலியாக சென்னையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் கீழுள்ள பிளாட்பாரம் அருகே இறந்து கிடந்தவர் பெயர், முகவரி தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் பிரேதம் கைப்பற்றப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லோன் ஸ்கொயர் சாலை ஆவின் பூத் அருகில், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பத்மநாபன்(50) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பிரேதம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகரில் முருகன்(35) என்பவர் மீது மரம் விழுந்ததால் உயிரிழந்தார். 
பட்டினப்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, மாநகர போக்குவரத்து கழக டிப்போ அருகில் இறந்து கிடந்த பெயர், விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் நபரின் பிரேதம் கைப்பற்றப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டியன் நகர். செல்வ விநாயகர் கோயில் தெருவில் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த கணேசன் (70) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பரத்(53 வயது) என்பவர். நொச்சிக்குப்பம் எல்லையம்மன் கோவில் தெருவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் உயிரிழந்தார். 

வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு

அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, சென்னை பெருநகர காவல்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் பல பகுதிகளில் மின்சாரம் வரவில்லை. 

சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு , SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, S & P பொன்னியம்மன் நகர் மற்றும் சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், இராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள், சென்னை  வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட CMBTT, ICF,  இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள், சென்னை  தெற்கு - I மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி, கிண்டி, இராமாபுரம், இராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு - II மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர்,  அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதிகளில் மின்சார சேவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: சென்னைக்கு கரண்ட் எப்போது மீண்டு வரும்? அமைச்சர் தங்கம் தென்னரசு அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News