கூடங்குளம் கொலை முயற்சி வழக்கு: 18 பேருக்கு 7 ஆண்டு சிறை... சு.ப. உதயகுமார் விடுதலை!

Kudankulam Case Verdict: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட வழக்கில் 18 பேருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 22, 2023, 08:43 AM IST
  • இந்த வழக்குகளில் 22 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
  • அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
  • மேலும், மூவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கூடங்குளம் கொலை முயற்சி வழக்கு: 18 பேருக்கு 7 ஆண்டு சிறை... சு.ப. உதயகுமார் விடுதலை! title=

Kudankulam Case Verdict: கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்தின் போது அப்போதைய அதிமுக ஆட்சியில் போடப்பட்ட  இரண்டு வழக்கிற்கு நேற்று (ஜூலை 21) வள்ளியூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சு.ப. உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்ட 22 பேர்களில் ராணி என்றவர் மட்டும் இறந்துவிட்டார். 

எஞ்சிய 21 பேரில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சு.ப .உதயகுமார், புஷ்பராயன், சேசு ராஜன் ஆகியோர் மூவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டு நான்கு பெண்கள் உட்பட 18 பேருக்கும் 7 ஆண்டு கால சிறை தண்டனை விதித்து நீதிபதி பர்ஷித் பேகம் தீர்ப்பளித்தார். 

தீர்ப்பை கேட்டவுடன் அங்கிருந்த பெண்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மீது போடப்பட்ட வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கிய முதல் வழக்கு இதுவாகும்.

நிலுவையில் 63 வழக்குகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு  அணுமின் நிலையத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்தபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அப்போதைய அதிமுக அரசு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் கூடங்குளம், உவரி, பழவூர், வள்ளியூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் அரசு ஆணையின்படி 295 வழக்குகள் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டன. சில வழக்குகள் காவல்துறையினில் விசாரணையில் தள்ளுபடி செய்யப்பட்டன. எஞ்சியுள்ள 63 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் படிக்க | கிளிசரின் போட்டு கண்ணீர் வடித்தவர் எங்கே? குஷ்பூவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி

வழக்கு விவரம் 

இதில் ஒரு கட்டமாக, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் இடிந்தகரையை சார்ந்த பிரைட்டன் மற்றும் இளங்கோ ஆகியோர் தாங்கள் கூடங்குளம் அணுமின் நிலை  போராட்டத்தின்போது, 'தெறிப்பு' எனப்படும்  தங்களது வருமானத்தின் பத்தில் ஒரு பகுதியை கொடுப்பதற்கு மறுத்ததாகவும் அதன் பேரில் சு.ப. உதயகுமார் ,புஷ்பராயன் மற்றும் சேசு ராஜான் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு இடிந்தகரையை சார்ந்த ஜோதி, ரோசாரி, லூர்து மைக்கேல் உள்ளிட்ட 19 பேர் கொண்ட கும்பல் கொடிய ஆயுதங்களால் தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் கூடன்குளம் போலீசார் கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி கொடூரமான ஆயுதங்களால் தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

மூவர் விடுதலை

இதில் சு.ப. உதயகுமார், புஷ்பராயன், சேசு ராஜன் உள்ளிட்ட 22 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், நேற்று சார்பு நீதிமன்ற நீதிபதி பர்ஷித் பேகம் தீர்ப்பு வழங்கினார்.

இதில் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சு.ப. உதயகுமார், புஷ்பராயன், சேசு ராஜன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ராணி என்பவர் உயிரிழந்தார். எஞ்சிய 18 பேரையும் அவர் குற்றவாளியாக அறிவித்து அவர்களின் குடும்ப விவரங்களையும் கேட்டுறிந்தார்.

தீர்ப்பு வழங்கினார்

அதன் பின் சுமார் பத்து நிமிடங்கள் கழித்து, 'போராட்டம் நடத்துவது அவர்களின் தனி உரிமை. ஆனால் போராட்டத்தில் பங்கேற்பதற்கும் போராட்டத்திற்கு பணம் கேட்டு கட்டாயப்படுத்துவதற்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. எனவே போராட்டத்தில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தி ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய உங்களுக்கு தலா இரண்டு வழக்குகளிலும் ஏழு ஆண்டுகால சிறை தண்டனை விதிப்பதாகவும் அதனை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்' எனவும் அவர் தீர்ப்பளித்தார்.

இதனைக் கேட்ட நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் கதறி அழுதனர். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். இந்த நிலையில் நேற்றிரவு அவர்களை பாளையங்கோட்டை சிறையில் அடைப்பதற்காக வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

மேலும் படிக்க | உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு... கபில் சிபல் வாதிட்டது என்ன? - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News