தர்மபுரி தொகுதியில் செந்தில்குமார் எம்பிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? திமுக தலைமை அதிருப்தி

செந்தில்குமார் எம்பி நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியபோதும், அவருக்கு இம்முறை தருமபுரி எம்பி தொகுதியில் போட்டியிட திமுக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 20, 2024, 05:33 PM IST
  • திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது
  • செந்தில் குமார் எம்பிக்கு வாய்ப்பு இல்லை
  • திமுக தலைமை கொண்ட அதிருப்தியே காரணம்?
தர்மபுரி தொகுதியில் செந்தில்குமார் எம்பிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? திமுக தலைமை அதிருப்தி title=

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் டிஆர் பாலு, ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராச்சாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், கனிமொழி கருணாநிதி, ஆ.ராசா மற்றும் கதிர் ஆனந்த் ஆகியோர் மீண்டும் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளிலேயே போட்டியிருகின்றனர். 11 புதுமுகங்களுக்கு திமுக சார்பில் இம்முறை வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. தருமபுரி தொகுதி எம்பி செந்தில்குமார், சேலம் தொகுதியில் வென்ற எஸ்ஆர் பார்த்திபன், திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 

புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக தலைமை இந்த நடவடிக்கை எடுத்தாலும், சிறப்பாக செயல்பட்ட தருமபுரி எம்பி செந்தில்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸை எதிர்த்து போட்டியிட்டு, சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை பெற்ற செந்தில்குமார், 99 விழுக்காடு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்கிறார். 5 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கும் அவர், கொள்கை சார்ந்தும் நாடாளுமன்றத்தில் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தார். பெரியார், அண்ணா ஆகியோரின் பேச்சுகளையும் தன்னுடைய நாடாளுமன்ற உரையில் குறிப்பிடுவதை வாடிக்கையாக வைத்திருந்த செந்தில்குமார், கோமூத்ரா மாநிலங்கள் என நாடாளுமன்றத்தில் பேசி எதிர்ப்புகளையும் பெற்றார்.

மேலும் படிக்க - மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் அறிவிப்பு

இதற்கு பின்னர் வருத்தம் தெரிவித்தாலும், பசுவையும், பசுவின் சிறுநீரான கோமியத்தையும் புனிதம் என கூறுபவர்கள், அதனை தெய்வீகமாக வணங்குபவர்கள் எப்படி இந்த வார்த்தையால் புண்பட முடியும்? என எதிர்கேள்வி எழுப்பினார் செந்தில்குமார். இந்த வார்த்தை அன்பார்லிமென்ட் வார்த்தை என்பதையும், அது புனிதமற்ற வார்த்தையும் என்பதையும், பாஜகவினர் எதிர்த்தபோது தான் தெரிந்து கொண்டேன் என்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார். இது ஒருபுறம் இருக்க தான் வெற்றி பெற்ற தருமபுரி தொகுதிக்காக தொடர்ச்சியாக பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை கொடுத்து, அதனை செயல்படுத்தியும் காட்டினார். தொப்பூர் பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்க மாற்று சாலை அமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரையும் சந்தித்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.

அவரின் எக்ஸ் பக்கத்தில் பார்த்தால் செந்தில்குமார் எம்பியாக கலந்து கொண்ட அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகள், மத்திய அமைச்சர்களிடம் வைத்த கோரிக்கைகள் எல்லாம் இடம்பெற்றிருக்கிறது. தருமபுரி எம்பி தொகுதியில் உள்ள பெண்கள் அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகளையும் கட்டிக் கொடுத்த அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? என கேட்டபோது கட்சி அழைத்து வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன் என கூறினார். என்னைப் பொறுத்தவரையில் மீண்டும் திமுகவில் வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இந்த 5 ஆண்டுகள் தொகுதி மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறேன் என்ற மனநிறைவு இருக்கிறது, அதுபோதும் என பேட்டி ஒன்றில் தெரிவித்தார். 

அதேநேரத்தில் செந்தில்குமாரின் எக்ஸ் பக்கத்தில் பார்க்கும்போது, மார்ச் 12 ஆம் தேதி ஒரே ஒருமுறை மட்டும் முதலமைச்சர் மு.ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதற்கு முன்பும் பின்பும் முதலமைச்சருடனான சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் ஏதும் இல்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை செந்தில்குமார் சந்தித்த புகைப்படங்களும் இல்லை. இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரிக்கும்போது, தலைமைக்கும் அவருக்கும் கொஞ்சம் இடைவெளி இருந்தது உண்மை தான் என்கின்றனர். தருமபுரி இளைஞரணி நிர்வாகிகள் நியமனத்தில் செந்தில்குமார் எம்பிக்கு உடன்பாடு இல்லை என்றும், இதுகுறித்து உதயநிதியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபோது அது பரிசீலிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

திமுக வேட்பாளர் பட்டியலில் மீண்டும் வாய்ப்பளித்திருக்கலாம் என நினைக்கும் ஒருவரை குறிப்பிடுங்கள் என எக்ஸ் பக்கத்தில் பலர் கேட்டப்போது, பலரும் செந்தில்குமாருக்கு தருமபுரியில் போட்டியிட வாய்ப்பளித்திருக்கலாம் என்றே கூறுகின்றனர். திமுகவின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதிலும், கருத்தியல்  தளத்திலும் அரசியல் தளத்திலும், ஒரு எம்பியாகவும் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு அக்கட்சி வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றே கூறுகின்றனர். இதனிடையே, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிந்தன், இனி மாநிலம் முழுவதும் சுழன்று பணியாற்றுங்கள் டாக்டர், தளம் மாறலாம் களம் ஒன்றே என கூறி அரசியல் பிரச்சாரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். செந்தில்குமார் வருவாரா?.

மேலும் படிக்க - 'கண்ணீர்விட்டு கதறினார்...' காங்கிரஸ் டூ பாஜக சென்ற தலைவர் - மறைமுகமாக தாக்கிய ராகுல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News