நகர்ந்தது நிவர்: புயலை திடமாக எதிர்கொண்டு நிமிர்ந்தது தமிழகம்

கடந்த காலங்களில் தமிழகம் கண்ட புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளின் நினைவுகள் நிர்வாகத்தையும் மக்களையும் சேர்ந்தே அச்சுறுத்தின.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2020, 09:27 AM IST
  • கரையை கடந்தது நிவர் புயல்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அதிக பாதிப்புகள் தவிர்க்கபட்டன.
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
நகர்ந்தது நிவர்: புயலை திடமாக எதிர்கொண்டு நிமிர்ந்தது தமிழகம் title=

நிவர் புயல் கரையைக் கடந்தது. நவம்பர் 21 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக தீவிரமடைந்தது. இந்த புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக மாறியது.

நேற்று இரவு மேலும் தீவிரமடைந்து நள்ளிரவு 11.30 மணியளவில் கரையை கடக்கத் தொடங்கிய நிவர் சூறாவளி (Nivar Cyclone), இன்று அதிகாலை புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே 2.30 மணியளவில் கரையைக் கடந்தது. வானிலை ஆய்வு மைய தகவல்படி (IMD), தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் புயலால் விளைந்த பாதிப்புகளால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக மக்கள் நிவர் புயலை கண்டு பதட்டத்தில் இருந்தனர். கடந்த காலங்களில் தமிழகம் கண்ட புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளின் நினைவுகள் நிர்வாகத்தையும் மக்களையும் சேர்ந்தே அச்சுறுத்தின.

எனினும், நிவர் புயல் தாக்கியபோது, அதை தமிழகம் (Tamil Nadu) திடமாக நின்று எதிர்கொண்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். நிவர் புயலால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இருப்பினும், கடந்த இரு தினங்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக, சென்னையின் (Chennai) புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. முடிச்சூர், மணிமங்கலம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து செல்வதால் புறநகர் பகுதியில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

வீடுகள் இரவோடு இரவாக வெள்ளத்தில் மூழ்கியதால் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. அடையாற்றில் திறக்கப்பட்ட நீர் புறநகர் பகுதிகளை சூழ்ந்து கடந்து செல்கின்றது. குறிப்பாக, தாம்பரத்தை ஒட்டிய முடிச்சூர் பகுதிகளில் ஏராளமான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

எனினும், ஏரிகள் தூர் வாரப்பட்டு, நீர் போகும் பாதைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளதால், இம்முறை இந்த நீர் தேக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.

ALSO READ: கரையை கடந்தது நிவர் புயல்: மழை நீடிக்கும் என IMD எச்சரிக்கை

முன்னதாக, மிகவும் கடுமையான நிவர் சூறாவளி நேற்று இரவு கடற்கரையைத் தாக்கியது. இரவு முழுதும் அதி தீவிர நிலையில் இருந்த இந்த சூறாவளி இன்று அதிகாலை கடலைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு (Puducherry) அருகிலுள்ள தமிழ்நாட்டின் மரக்காணம் அருகே கரையை கடந்தது. கடக்கும்போது, ​​சூறாவளியால் மணிக்கு 120 முதல் 130 கி.மீ வரை வேகமான காற்று வீசியது. இது பின்னர் மணிக்கு 140 கி.மீ. ஆக தீவிரமடைந்தது.

நிவர் சூறாவளி பலவீனமடைந்து வருவதால், இது பெங்களூருவை நோக்கி நகர்ந்தவுடன் பலத்த காற்று வீசாது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) நகரத்திற்கு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மஞ்சள் எச்சரிக்கையை அளித்துள்ளது.

எனினும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

எனினும், அரசாங்கம் எடுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கடந்த ஆண்டுகளில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் நல்ல விளைவுகளைத் தந்துள்ளன என்று கூறினால் அது மிகையாகாது. தமிழகம் நிவர் புயலை மேன்மையாக, திடமாக, உறுதியாக எதிர்கொண்டது!!

ALSO READ: நிவர் புயலைக் கண்காணிக்க செயற்கைக்கோள் படங்களை TNSDMA பயன்படுத்தம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News