அரசு ஊழியர் கோரிக்கைகளை ADMK-PMK அணியே நிறைவேற்றும்!

அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கைகளை அதிமுக - பா.ம.க அணியே நிறைவேற்றும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

Last Updated : Mar 19, 2019, 01:19 PM IST
அரசு ஊழியர் கோரிக்கைகளை ADMK-PMK அணியே நிறைவேற்றும்! title=

அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கைகளை அதிமுக - பா.ம.க அணியே நிறைவேற்றும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

"தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் & பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை; அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே பா.ம.க. நிலைப்பாடு ஆகும்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதம் 2016-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 21 மாதங்கள் தாமதமாக 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து தான் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதம் வழங்கப்பட்டது. கடுமையான நிதிநிலை நெருக்கடியால் 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை அதிமுக அரசால் வழங்க முடியவில்லை. அதேபோல், 2003-ஆம் ஆண்டில் மத்திய அரசு மேற்கொண்ட கொள்கை முடிவு காரணமாகவே பழைய ஓய்வூதிய முறை கைவிடப்பட்டு, புதிய ஓய்வூதிய முறை அறிமுகம் செய்யப் பட்டது. இவை தவிர ஊதிய விகித முரண்பாடு உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களால் முவைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் பாட்டாளி  மக்கள் கட்சி தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கிறது. இப்போதும் இந்தக் கோரிக்கைகளை ஆதரிக்கிறது.

அரசு எந்திரம் என்பதே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான். அவர்களுக்கான உரிமைகளை வழங்கி, அவர்களை மனநிறைவுடன் வைத்திருந்தால் மட்டுமே அரசு எந்திரம் மிகவும் சிறப்பாக இயங்கும். அதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கத்திலிருந்தே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்திருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களின் நியாயமான  கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. வலிமையாக குரல் கொடுத்து வந்திருக்கிறது.

2016-ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலுக்காக பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக 22 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவர்கள் இப்போது முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்திருந்தது. 2019&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் கூட நாடு முழுவதும்  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வைப்போம்; அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத் தொகைக்கு 10% வட்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

2019 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் 10 கோரிக்கைகளின் அடிப்படையில் தான் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தது. அவற்றில் ஏழாவது கோரிக்கையாக பா.ம.க. முன்வைத்தது,‘‘தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் - புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பதால் அவற்றை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்பதுதான். இக்கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றித் தருவதாக அதிமுக அரசு பா.ம.க.விடம் உறுதியளித்திருக்கிறது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் நடைபெற்ற விவாதங்களின் போதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தாங்களாக முன்வந்து அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உறுதி பூண்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் கடந்து இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் அதிகாரம் யாருக்கு உள்ளது? என்பதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டும். ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகும் தமிழகத்தை ஆளப் போவது  அதிமுக தான். அதிமுகவால் தான் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அதற்காக அழுத்தம்  கொடுக்கவும், வெற்றி பெறுவதற்கும்  பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் முடியும்.

இவற்றை உணர்ந்து வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தே.மு.தி.க, தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணியை ஆதரித்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வாக்களிக்க வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க பா.ம.க போராடும்; வெற்றி பெறும்" என தெரிவித்துள்ளார்.

Trending News