சென்னையில் பூட்டிய வீட்டில் துணிகர திருட்டு: உடன் பணியாற்றியவரும் உடந்தையா?

வீட்டில் வைத்திருந்த 4.5 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 30 சவரம் தங்க ஆபரணங்கள் திருட்டு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் மனைவி, உடனடியாக அருகில் உள்ள வளசரவாக்கம் ஆர்.9 காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 17, 2021, 11:20 AM IST
சென்னையில் பூட்டிய வீட்டில் துணிகர திருட்டு: உடன் பணியாற்றியவரும் உடந்தையா?  title=

வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் கள்ளச்சாவி போட்டு வீட்டைத் திறந்து, 4.5 கோடி ரூபாய் பணம் மற்றும்  30 சவரம் தங்க நகையை திருடிச் சென்ற பலே கில்லாடிகள் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஆழ்வார் திருநகர் சித்து விநாயகர் கோயில் செயின்ட் அருகில் வளசரவாக்கம் வந்தே மாதரம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர் கோபால பிள்ளை. இவரது மனைவி ஆமெல்லா ஜோதினி கோபால் பிள்ளை. 

இவர்கள் கடந்த 17.11.2021 அன்று வீட்டைப் பூட்டிக்கொண்டு தங்களது சொந்த ஊருக்குச் சென்று, 20.11.2021 அன்று திரும்பி வீட்டிற்கு வந்தனர். ஆனால் வீட்டிற்கு திரும்பி வந்த தம்பதிக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனெனில் வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தன. 

வீட்டில் வைத்திருந்த 4.5 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 30 சவரம் தங்க ஆபரணங்கள் திருட்டு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் மனைவி, உடனடியாக அருகில் உள்ள வளசரவாக்கம் ஆர்.9 காவல் நிலையத்தில் (TN Police) புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அங்குள்ள சிசிடிவி கேமரா வீடியோக்களை ஆய்வு செய்ததில்  திருடர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண் மற்றும் திருடர்களின் ஒரு சில அங்க அடையாளங்கள் கிடைத்தது. பின்னர் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். 

தீவிர விசாரணை செய்ததில் 4 பேர் கொண்ட கும்பல் திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியான 31 வயது மணி  முகலிவாக்கத்தை சேர்ந்தவர். சதீஷ் என்பவர் குரோம்பேட்டை நெமிலிச்சேரி பாரதிபுரத்தையும், சுரேஷ் என்பவர் ராயப்பேட்டை சுரேஷ் கன்னி கோயில் தெருவையும், ஆறுமுகம் என்பவர் சிவகங்கை மாவட்டத்தையும் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

ALSO READ | சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு 

இந்த 4 பேரும் ஒன்றாக இணைந்து இந்த திருட்டு வழக்கில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த 4 பேர் கொண்ட கும்பல் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இவர்களிடம் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், ஆறுமுகம் என்பவர் மீது ஏற்கனவே கிண்டி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது என்பது தெரிய வந்தது. 4.5 கோடி ரூபாய் பணம் மற்றும் 30 சவரன் தங்க நகை மற்றும் திருட்டுத்தனமாக பயன்படுத்திய ஒரு கார் ஆகியவற்றையும் கொள்ளையர்களிடம் இருந்து  போலீசார் கைப்பற்றினர்.

4 பேரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆமெல்லா ஜோதி, கோபால் பிள்ளை, அவர்களுடன் பணிபுரிந்து வந்த ஒரு நபரின் தூண்டுதலின் பெயரில் தான் இந்த திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக 4 பேரும் ஒப்புக்கொண்டனர். நான்கு பேர் கொண்ட கும்பலை விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கவுள்ளனர். 

மேலும் இந்த 4 திருடர்களை (Thieves) தவிர ஆமெல்லாஜோதினி,கோபால் பிள்ளை சொத்தை பற்றி அறிந்திருந்த அவர்களுடன் பணிபுரிந்து வந்த நபர் தான் இந்த குற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்ததாக தெரிய வந்ததால், முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | திருமணத்துக்கு ஆசைப்பட்ட ’குடி’மகன் - கொலை செய்த தந்தை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News