வாய் ஜாலத்தால் மக்களை ஏமாற்ற நினைப்பவர் ஸ்டாலின்- உதயகுமார்...

திமுக தலைவர் முக ஸ்டாலின் எப்போது மக்களுக்காக சிறை சென்றார் என அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Last Updated : Nov 17, 2019, 01:37 PM IST
வாய் ஜாலத்தால் மக்களை ஏமாற்ற நினைப்பவர் ஸ்டாலின்- உதயகுமார்... title=

திமுக தலைவர் முக ஸ்டாலின் எப்போது மக்களுக்காக சிறை சென்றார் என அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்காக சிறை சென்றதாக கூறும் ஸ்டாலின், கச்சத்தீவு, காவிரி போன்ற விவகாரங்களுக்காக சிறை சென்றாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஸ்டாலின் இதுவரை மக்களுக்காக சிறை சென்றது கிடையாது என குற்றம்சாட்டிய அமைச்சர், முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட பிரச்னைகளில் சட்ட போராட்டங்கள் நடத்தி தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை மீட்டுக் கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனவும் குறிப்பிட்டார்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், தமது வாய் ஜாலத்தால் மக்களை ஏமாற்ற நினைப்பதாகவும் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.

முன்னதாக நேற்று தருமபுரியில் திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தான் மக்கள் நலனுக்காக சிறை சென்றதாக குறிப்பிட்டார். 

இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது., "தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்படவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதிமுக ஆட்சி சட்டவிரோத பேனர் வைத்து மரணத்திற்கு காரணமாகி வருகிறது.

ஒன்றல்ல, பலமுறை சிறை சென்றுள்ளேன். கொலை செய்ததற்காகவோ, கொள்ளை அடித்ததற்காகவோ அல்ல, மக்கள் நலனுக்காக.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் என்பது போல் விமர்சிக்கப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பாஜக ஆட்சியும் தான் நடக்கிறது என்பதை ஆளும் கட்சியினர் புரிந்துக்கொள்ள வேண்டும்.

தமிழக அமைச்சரவையில் ஊழலின் ஊற்றுக்கண்களாக தங்கமணியும், வேலுமணியும் இருக்கின்றனர். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி இருவரையும் இரு கண்களாக பாவித்து வருகிறார். அமெரிக்காவில் துணை முதல்வர் விருது வாங்கிக் கொண்டிருக்கிறார். உண்மையில் அவருக்கு ஊழல் மகன் என்ற பட்டம் தான் அளிக்கவேண்டும். 

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது அவ்களுக்கு தெரியாது, கோவையில் அதிமுக கொடிக்கம்பத்தால் அனுராதா கால் பறிபோனது தெரியாது. ஊழல் செய்வது மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகத் தெரியும். கடப்பாறையை விழுங்கிவிட்டு ‘கம்’மென இருப்பவர் அவர்" என கடுமையாக சாடினார்.

இந்நிலையில் இன்று ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் உதயகுமார் தெரிவிக்கையில்., திமுக தலைவர் ஸ்டாலின், தமது வாய் ஜாலத்தால் மக்களை ஏமாற்ற நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Trending News