உதயசூரியன் என்றாலே கண்கள் கூசும் ஆட்களுக்கு.... விடியல் தெரியாது - ஸ்டாலின் தடாலடி!

TN Latest News Updates: விடியலைத் தருவதுதான் உதயசூரியன் என்றும் ஆனால், உதயசூரியன் என்றாலே கண்கள் கூசும் ஆட்களுக்கு விடியல் என்றால் தெரியாது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 4, 2024, 09:17 PM IST
  • காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் பார்க்க தொடங்கியிருக்கிறோம் - ஸ்டாலின்
  • முந்தைய ஆட்சி காலத்தில் ஆட்சியாளர்களை களத்தில் பார்க்க முடியாது - ஸ்டாலின்
  • பொதுமக்கள் முன்வைக்கும் நியாயமான விமர்சனங்களை கேட்கிறோம் - ஸ்டாலின்
உதயசூரியன் என்றாலே கண்கள் கூசும் ஆட்களுக்கு.... விடியல் தெரியாது  - ஸ்டாலின் தடாலடி!

Tamil Nadu Latest News Updates: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 4) சென்னை வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார்.

Add Zee News as a Preferred Source

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் (TN Chief Minister MK Stalin),"கடந்த வாரம் நடைபெற வேண்டிய நிகழ்ச்சி இது. ஆனால், என்ன காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் பெஞ்சல் புயல் காரணமாக இது ஒத்திவைக்கப்பட்டு, இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தீவிரமடையும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள்

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் பார்க்க தொடங்கியிருக்கிறோம். வானிலை கணிப்புகளைவிட அதிகமான மழை கொட்டி தீர்க்கும் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களிலும், உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் இந்த மாற்றத்தையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். எல்லா நாட்டிலும் நடப்பதுதான் அப்படி என்ற காரணத்தினால், நம்முடைய தமிழ்நாடு அலட்சியமாக இருந்ததில்லை.

நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் உயிரிழப்புகள் பெரிதும் ஏற்படவில்லை என்பது முக்கியம். ஆனால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அதிகமான அளவிற்கு மழை பெய்து, பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை, நிவாரணத்தை மழை தொடங்கியதில் இருந்து இப்போது வரைக்கும் தமிழ்நாடு அரசு செய்துகொண்டுதான் இருக்கிறது" என்றார்.

மேலும் படிக்க | தள்ளிப்போகிறதா அரையாண்டு தேர்வுகள்...? அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

மேலும் மழை வெள்ள நிவாரணம் குறித்து பேசிய அவர்,"ஒன்றிய அரசிடம் இருந்தும் நிதியும் நாங்கள் கேட்டிருக்கிறோம். விரைவில் இந்த பாதிப்பில் இருந்து நிச்சயமாக நாம் மீண்டு வருவோம். கடந்த காலங்களில் மழை, வெள்ளத்தில் தவித்த சென்னையை மீட்டெடுத்திருப்பது போன்று, மற்ற பகுதிகளையும் விரைவாக மீட்டெடுப்போம். ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டு வரும்! இப்போதே சில மாவட்டங்கள் முழுமையாக மீண்டு வந்துக் கொண்டிருக்கிறது. 

அதிமுக மீது மறைமுக தாக்கு...

அல்லல்படும் மக்களின் வேதனையில் அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாமா என்று சிலர் மலிவான அரசியலில் ஈடுபடுகிறார்கள். கடந்த ஆட்சியில், அது எந்த ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும். 2015 செயற்கை வெள்ளத்திலும், பல்வேறு புயல்களிலும் சென்னையை வெள்ளத்தில் மிதக்கவிட்டது போன்று, இப்போது நாங்கள் தவிக்கவிடவில்லை. அதற்கு ஃபெஞ்சல் புயலில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகளும் நம்முடைய பணிகளும்தான் அதற்கு சாட்சி! முன்பெல்லாம் சென்னையில் மழை பெய்தால், உதவி கேட்டு அல்லாடும் நிலையும், தன்னார்வலர்களிடம் உதவி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிடும் நிலையும், எப்போது வெள்ளம் வடியும் என்று காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது.

ஆட்சியாளர்களை களத்தில் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும் என்ன பிரச்சினை என்றும் தெரியாமல், 'வாக்காளர் பெருமக்களே'-என்று பேசியவர்கள் இருந்தார்கள். மீடியாக்கள் மைக்கை நீட்டினால், பதில் சொல்லாமல், 'ப்ளீஸ் விட்டுடுங்க'-என்று சொன்னவர்கள்தான் இருந்தார்கள், கடந்த கால ஆட்சியில். தன்னார்வலர்கள் உதவி செய்ய வந்தால், அவர்களை மிரட்டுவார்கள். அவர்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள். அந்தக் காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது" என கடந்த அதிமுக ஆட்சியை கடுமையாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார். 

உதயசூரியன் என்றாலே கண்கள் கூசும்...

மேலும் தொடர்ந்த அவர்,"நாங்கள் எடுத்த நடவடிக்கையால் சென்னை மழை நின்ற அடுத்த நாளே மீண்டு இருக்கிறது. மழை நின்ற உடனே நான் கொளத்தூர் தொகுதியைப் பார்வையிட்டப்போது, அங்கிருந்த ஒரு பெரியவர் சொன்னார். 'முதல்முறையாக தில்லை நகர், வீனஸ் நகர், செந்தில் நகர் போன்ற இடங்களில் வெள்ளம் வரவில்லை. இந்த நகருக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது'-என்றார்.

மேலும் படிக்க | ரேஷன் கடை குட்நியூஸ்: குடும்ப அரிசி அட்டைத்தாரர்களின் கைரேகையில் இனி இந்த கவலை இருக்காது!

விடியலைத் தருவதுதான் உதயசூரியன். ஆனால், உதயசூரியன் என்றாலே கண்கள் கூசும் ஆட்களுக்கு விடியல் என்றால் தெரியாது. விடியவில்லை... விடியவில்லை... விடியா ஆட்சி என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளிய அந்த விடியா முகங்களுக்கு என்றைக்கும் விடியவே முடியாது. அது விடியவும் விடியாது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

'இதுதான் உண்மையான பாராட்டு'

தொடர்ந்து அவர்,"அதே கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த இன்னொருவர் என்னிடம் சொன்னார். 'உங்களின் பணிகளெல்லாம் வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பெறும்' என்று பாராட்டினார். அப்போது, நம்முடைய அமைச்சர் சேகர்பாபு என்னிடம், 'அண்ணே... இவர் யார் தெரியுமா? இவர் கம்ப்ளைண்ட் பார்ட்டி' என்று சொன்னார். கம்ப்ளைண்ட் பார்ட்டி என்று பெயரே அவருக்கு உண்டு. எப்போது பார்த்தாலும், நான் போகும்போதெல்லாம் புகார் கொடுத்துக்கொண்டே இருப்பார். 

உடனே நான் சொன்னேன். 'புகார் கொடுப்பவர்களுக்கும் நாங்கள் பணிகளை செய்வோம். நம்மைப்பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கும் பணிகளை செய்வோம். ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல. ஓட்டுபோட மறந்தவர்களுக்கும் நாம் நன்மையை செய்வோம். இது தான் உண்மையான பாராட்டு. இந்த பாராட்டுகள்தான் எதிர்கட்சியை வயிறு எரிய வைத்திருக்கிறது. ஏன் என்றால், எவ்வளவு மழை பெய்தாலும் முதலமைச்சர் தொடங்கி, துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என்று அனைவரும் களத்தில் வந்து நிற்கிறார்கள். நிவாரண உதவிகளை செய்கிறார்கள். நம்மால் அரசியல் செய்யமுடியவில்லை என்று இப்போது தவிக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரையில் நமக்கு மக்களின் மனசுதான் முக்கியம். உங்களுக்கு மனசுதான் எங்களுக்கு முக்கியம்" என முதலமைச்சர் ஸ்டாலின் மக்களின் மனநிலை குறித்து பேசினார். 

"பொதுமக்கள் முன்வைக்கும் நியாயமான புகார்களை, விமர்சனங்களை அவர்களின் குறைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, அதை தீர்க்க செயல்படுகிறோம். நம்முடைய அரசில், மக்களின் குரல் கேட்கப்படுகிறது. உங்களின் தேவைகள் தெரிந்துக்கொள்ள முயற்சிக்கிறோம். அதனால்தான், மழை நின்ற அடுத்த சில நாட்களிலேயே, சென்னையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான திட்டங்களைத் தொடங்கி வைக்க நாங்களும் நீங்களும் இங்கு வந்திருக்கிறோம். எவ்வளவு பெரிய மழை பெய்தது. முடிந்த அடுத்தநாளே இன்றைக்கு உங்களை சந்திக்க வந்திருக்கிறோம் என்றால், அதைத்தான் நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்" என்றார், முதல்வர் ஸ்டாலின்...

மேலும் படிக்க | மெரினாவில் ரோப் கார் சேவை! எப்போது முதல் தொடங்கும் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News