கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே புதிய கல்விக் கொள்கை -PMK!

கருத்தொற்றுமை ஏற்பட்டால்  மட்டுமே புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப் பட வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 2, 2020, 12:01 PM IST
கருத்தொற்றுமை ஏற்பட்டால்  மட்டுமே புதிய கல்விக் கொள்கை -PMK! title=

கருத்தொற்றுமை ஏற்பட்டால்  மட்டுமே புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப் பட வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பொருளாதாரம் சார்ந்த புதிய அறிவிப்புகளுடன் கல்வி சார்ந்த அறிவிப்பு ஒன்றும் இடம் பெற்றுள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்பது தான் அதுவாகும். மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட வரைவு கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு தேவையற்றது ஆகும்.

இந்தியக் கல்வி முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வல்லுனர் குழு கடந்த ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி வரைவுக் கல்விக் கொள்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் அவர்களிடம் தாக்கல் செய்தது.  அன்றே அந்த அறிக்கை பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை அறிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வரைவுக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அம்சங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லாததால், அதற்கு கடும் எதிர்ப்பு  எழுந்தது. வரைவுக்கொள்கை பற்றி கருத்து மற்றும் யோசனைகளை தெரிவிக்க ஜூன் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படிருந்த நிலையில், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று முதலில் ஜூலை 31-ஆம் தேதி வரையும், பின் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கருத்துரைகளும், ஆலோசனைகளும் பெறப்பட்டன. அவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலனை  செய்ததா? அவற்றின் அடிப்படையில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டனவா? என்பது தெரியவில்லை.

தொடக்கக் கல்வியை தாய்மொழியில் வழங்க வேண்டும், பள்ளிக்கல்வி அளவில் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற ஒரு சில நல்ல திட்டங்கள் வரைவு தேசியக் கொள்கையில்  இடம் பெற்றுள்ள போதிலும், மீதமுள்ள பெரும்பான்மையான திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். குறிப்பாக மும்மொழிக் கொள்கை, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடுவது, உயர்கல்விக்கான மானியத்தை குறைப்பது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை  அனுமதிப்பதன் மூலம் கல்வியில் சமூகநீதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது என வரைவுக் கல்விக் கொள்கையில் எதிர்மறையான அம்சங்கள் ஏராளமாக உள்ளன. சுருக்கமாக கூறினால், அண்மைக் காலங்களில் மக்களிடம் கடும் எதிர்ப்பை சந்தித்த கொள்கைகளில் வரைவுக் கல்விக் கொள்கை  குறிப்பிடத்தக்கதாகும்.

வரைவுக் கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள எதிர்மறையான அம்சங்களை நீக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். அதை உறுதி செய்ய வேண்டியது மாணவர் நலனில் அக்கறையுள்ள கட்சிகளின் பணியாகும். வரைவுக் கொள்கை மீதான கருத்துகளையும், அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த ஆலோசனைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியிருக்கிறது.  தமிழக அரசின் சார்பிலும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து  ஆலோசனைகள் பெறப்பட்டு அவற்றின் தொகுப்பு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

வரைவுக் கல்விக் கொள்கை தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள யோசனைகளில் எவ்வளவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது? மாணவர்கள் நலனுக்கு எதிரான திட்டங்களில் எத்தனை நீக்கப்பட்டுள்ளன? என்பன போன்றவற்றை முழுமையாக அனைவருக்கும் தெரிவித்த பிறகு தான் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட வேண்டும். அதற்கு முன்பாக மத்திய அரசே தன்னிச்சையாக புதிய கல்விக் கல்விக் கொள்கையை வெளியிடுவது முறையல்ல.

எனவே, வரைவு தேசியக் கல்விக் கொள்கை மீது எவ்வளவு கருத்துரைகளும், ஆலோசனைகளும்  பெறப்பட்டன; அவற்றில் எத்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை  மத்திய அரசு வெளியிட வேண்டும். அதனடிப்படையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும். அதில் கருத்தொற்றுமை ஏற்பட்டால்  மட்டுமே புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News