திருவண்ணாமலை: 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் தீப கொப்பறை..! ஏற்பாடுகள் தயார்

கார்த்திகை தீபத் திருவிழா 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பறை சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 25, 2023, 04:24 PM IST
  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா
  • மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம்
  • அரோகரா முழக்கத்துடன் சென்ற தீப கொப்பறை
திருவண்ணாமலை: 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் தீப கொப்பறை..! ஏற்பாடுகள் தயார் title=

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழா நாளை நடைபெறுகிறது. நாளை காலை 4 மணியளவில் திருக்கோயிலின் கருவரை முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்பு உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படும் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த 5 - 3/4 அடி உயரமுள்ள கொப்பறை திருக்கோயிலின் கிளி கோபுரம் அருகில் உள்ள நந்தி சிலை முன்பு சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

கொப்பறையை மலை உச்சிக்கு கொண்டு சென்ற பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தியுடன் தூக்கி சென்றனர். இந்த தீப தரிசனத்தைக் காண வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தீபத் திருவிழா ஏற்பாடு குறித்து அண்ணாமலையார் கோயிலில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, ”இந்த ஆண்டு தீபத் திருவிழாவிற்காக 5 அடுக்கு பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை இயக்குனர் தலைமையில் 14,000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோயில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதையில் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | சென்னை: தாயின் மரணத்தில் பிறந்த ஆண் குழந்தை - தனியார் மருத்துவமனை மீது புகார்

14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் தங்களுக்கு உதவலாமா (May I Help You) என்ற 50 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டறியும் வகையில், 30 ஆயிரம் ரிஸ்ட் பேண்டுகளை, கிரிவலம் வரும் குழந்தைகளின் கையில், அவர்களின் பெற்றோரின் பெயரை எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும், தீபத்திருவிழாவின்போது அதிகப்படியான வாகனங்கள் நகருக்குள் வருவதால் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 75 கார் பார்க்கிங் வசதிகள், 14 பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வரும் கார்களுக்கு புதிய முயற்சியாக https://tvmpolicedeepam2023.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி வெளி மாநிலத்திலிருந்து வரும் கார்கள், எந்த இடத்தில் கார் பார்க்கிங் செய்யும் வசதி உள்ளது என கண்டறிந்து, அந்த இடத்தில் பார்க்கும் செய்யும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலையில் இருந்து கோயில் வளாகம் வரை 100 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வந்து செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, தீபத் திருவிழாவின்போது முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், 2,500 நபர்கள் மட்டுமே மலை மீது ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக் குழுக்கள் அமைத்து, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்படும். மலை மீது ஏறும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், அபாயகரமான பொருட்கள் எடுத்துச் செல்லாத வகையில் தீவிரமாக சோதனை செய்த பிறகு, மலை மீது ஏற அனுமதிக்கப்படுவார்கள். மேலும், குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையில், ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் எல்.இ.டி திரை அமைத்து விழிப்புணர்வு படங்களை திரையிடவுள்ளது. 

குற்றப் பின்னணி உள்ள நபர்களைக் கண்காணிப்பதற்காக 60 சிறப்பு போலீஸ் குழுவை நியமித்துள்ளனர். 35 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வர எதிர்பார்க்கப்படுவதால், செல்போன் சிக்னல் கிடைப்பதற்காக ஆறு இடங்களில் தற்காலிக செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லையில் முதல் அடுக்கு, மாவட்ட புறவழிச் சாலையில் இரண்டாம் அடுக்கு, ரயில் நிலையம் மாடவீதியில் மூன்றாம் அடுக்கு, ஒத்தவாடை வீதி சுற்றி நான்காம் அடுக்கு, கோயிலுக்குள் ஐந்தாம் அடுக்கு என 5 அடுக்கு பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, மலை மீது 200 போலீசார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பரணி தீபம் ஏற்றும்போது 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பக்தர்கள் மற்றும் மகா தீபத்திற்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 

குற்றச் சம்பவங்களைத் தடுக்க குற்றவாளிகளைக் கண்டறியும் வகையில், ஃபேஸ் ட்ராக்கர் என்ற செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக துண்டுப் பிரசுரம் ஏற்பாடுகள் செய்து அதில் வரைபடம், பேருந்து நிறுத்தம், கார் பார்க்கிங் வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சடிக்கப்பட்டு, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை சிறப்பான முறையில் நடத்த தமிழ்நாடு காவல்துறையும், மாவட்ட காவல் துறையும் தயார் நிலையில் உள்ளது” என கூறினார்.

மேலும் படிக்க | போலி சான்றிதழ்கள் மூலம் லோன் பெற்ற பெண் கைக்குழந்தையுடன் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News