Russia - Ukraine Conflict Live Updates: உக்ரைன் அதிபர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரின் முதல் நாள் நிலவரப்படி, ரஷ்யா 203 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 25, 2022, 09:02 PM IST
    போரின் முதல் நாள் நிலவரப்படி, ரஷ்யா 203 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
Live Blog

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நேற்று காலை தொடங்கியது. போரின் முதல் நாள் நிலவரப்படி, ரஷ்யா 203 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 

ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உட்பட குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டனர் என்று உக்ரைன் கூறுகிறது.

உக்ரைனில் 11 விமான நிலையங்கள் உட்பட 74 தரைக்கு மேல் உள்ள இராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக முழு அளவிலான இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,  அண்டை நாடுகளின் எல்லைகளை "ஆக்கிரமிப்பதை" தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பான உடனடி கள நிலவரத்தை தெரிந்துக் கொள்ள ஜீ தமிழ் நியூஸ் நேரலை பக்கத்தில் இணைந்திருங்கள்.

25 February, 2022

  • 21:00 PM

    உக்ரைன் அதிபர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தார். தூதுக்குழுவை அனுப்ப ரஷ்யா தயாராக உள்ளது

  • 19:00 PM

    உக்ரைன் விவகாரத்தை கூர்ந்து கவனித்து வருகிறோம்; அமைதியான முறையில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க கோருகிறோம் - தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிக்கை.

  • 18:45 PM

    ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் 2022 க்கு ரத்து செய்யப்பட்டது: ஃபார்முலா 1 அறிவிப்பு

     

  • 18:30 PM

    உக்ரைனுக்காகப் போராட "போர் அனுபவம்" கொண்ட ஐரோப்பியர்களுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

  • 18:00 PM

    முதல் கட்டமாக இந்திய மாணவர்கள் செர்னிவ்சியில் இருந்து உக்ரைன்-ருமேனியா எல்லைக்கு சென்றடைந்தனர். இந்தியர்களை பத்திரமாக மீட்க மேற்கு உக்ரைனில் உள்ள Lviv மற்றும் Chernivtsi நகரங்களில் MEA முகாம் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

     

  • 17:30 PM

    உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை போலந்து வழியாக மீட்க நடவடிக்கை:
    ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக இந்தியர்களை வெளியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் பொது போக்குவரத்து மூலம் போலந்து-உக்ரைன் எல்லைக்கு வரும் இந்திய குடிமக்கள் இந்தியக் கொடியை வாகனங்களில் ஒட்டி வைக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.

     

  • 17:15 PM

    தொலைபேசி உரையாடல்:
    சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசி உள்ளதாகத் தகவல்

  • 17:15 PM

    எல்லா இடங்களிலும் தீப்பிழம்புகள், சிதைந்த வீடுகள்: 
    ரஷ்ய இராணுவம் கியேவை அடைந்தது. தலைநகருக்கு வெளியே ஒரு பெரிய தடுப்பை உக்ரைன் ராணுவம் அமைத்துள்ளது. ரஷ்யா ராணுவம் நகருக்குள் நுழைவதைத் தடுக்க உக்ரைன் ராணுவம் தங்களால் இயன்றதைச் செய்து வருகிறது. கியேவின் புறநகரில் உள்ள ஒபோலோன் பகுதியில் ரஷ்ய தரப்பில் இருந்து கடும் குண்டுவீச்சு நடத்தப்பட்டுள்ளது. கியேவை சுற்றி குண்டு துப்பாக்கிச் சத்தம் கேட்ட வண்ணம் இருக்கிறது. மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். 

  • 16:15 PM

    உக்ரைனின் இராணுவம் சண்டை நிறுத்தினால், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

  • 16:00 PM

    ரஷ்யப் படைகள் வடகிழக்கு மற்றும் கிழக்கில் இருந்து கியேவை நெருங்கி வருகின்றன - AFP செய்தி ஊடகத்திடம் உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

  • 15:45 PM

    உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியப் பிரஜைகளுக்கும்/மாணவர்களுக்கும் ஆலோசனைகளை வழங்குகிறது - ருமேனியா மற்றும் ஹங்கேரியில் இருந்து வெளியேறுவதற்கான வழிகளை உருவாக்க இந்திய அரசு செயல்பட்டு வருகிறது.

     

  • 15:15 PM

    உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசு வெளியேற்ற விமானங்களை ஏற்பாடு செய்யும், அதற்கான செலவை அரசே ஏற்கும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ANI தெரிவித்துள்ளது.

  • 14:45 PM

    தனது விமான நிலையங்களில் தரையிறங்கவோ அல்லது தனது வான்வெளியில் பறக்கவோ பிரிட்டிஷ் விமானங்களுக்கு  ரஷ்யா தடை விதித்துள்ளது என்று மாநில சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

  • 14:45 PM

    ரஷ்யா-உக்ரைன் இடையே சண்டை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், ​​இங்கிலாந்து பாதுகாப்பு மந்திரி வாலஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர், "ரஷ்யா 450 க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை உக்ரைன் மீது அதிபர் புதின் நடத்திய தாக்குதலில் குறைந்தது 137 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • 14:15 PM

    உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான பயணச் செலவை தமிழக அரசு ஏற்கும்

    உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான பயணச் செலவை தமிழக அரசு ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். உக்ரைனில் சுமார் 5000 தமிழர்கள் சிக்கியுள்ளனர்.

  • 11:45 AM

    ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

    வெள்ளிக்கிழமை அதிகாலையில் கிய்வ் மீது பறந்துக் கொண்டிருந்த ரஷ்ய விமானத்தை உக்ரேனியப் படைகள் சுட்டு வீழ்த்தின. சுடப்பட்ட விமானம்,  குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது மோதி தீ பிடித்து எரிந்தது.

     

  • 11:30 AM

    இந்திய பங்குச் சந்தைகள் மீண்டன

    ரஷ்யாவின் தாக்குதல் நேற்று தொடங்கியதில் இருந்து கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று மீண்டன.

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பூமரங்காக ஒரே இரவில் நிலைமையை சீர் செய்தது. 

    இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, மும்பை சென்செக்ஸ் 1,135 புள்ளிகள், அதாவது 2.08 சதவீதம் உயர்ந்து 55,665 ஆகவும் இந்திய பங்குச்சந்தை நிஃப்டி 2 சதவீதம் உயர்ந்து 16,573 ஆக இருந்தன.

     

     

  • 10:45 AM

    நாஜி தாக்குதலுக்கு இணையானது ரஷ்ய தாக்குதல் 

    நாஜி தாக்குதலுக்கு இணையானது ரஷ்ய தாக்குதல் என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஒப்பிடுகிறார்.

     

    உக்ரைன் தலைநகர் மீதான பயங்கரமான ரஷ்ய ராக்கெட் தாக்குதல்கள். கடைசியாக 1941 இல் நாஜி தாக்குதலின்போது உக்ரைன் அனுபவித்தது என்று அவர் கூறுகிறார். அந்த தாக்குதலில் நாஜிக்களின் தாக்குதலை முறியடித்து வென்றது போல, தற்போது ரஷ்யாவையும் வெல்வோம் என்று கூறும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர், ரஷ்ய அதிபர் புடினை தடுத்த நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ரஷ்யாவை தனிமைப்படுத்துங்கள். உலகமே, ரஷ்யாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்றும், ரஷ்யாவை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கேட்டுக் கொண்டார்.

  • 10:15 AM

    உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் - அமெரிக்க துணை அதிபர் டிவிட் செய்தி

    உலகெங்கிலும் உள்ள எங்கள் கூட்டாளிகள் மற்றும் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம். உக்ரைன் மீதான நியாயமற்ற, தாக்குதலுக்காக அனைவரும்  ஒன்றுபட்டுள்ளோம் என்று உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் டிவிட்டரில் செய்தி பதிவிட்டுள்ளார்.

     

  • 09:30 AM

    ரஷ்யா மீதான தீர்மானம் தொடர்பான UNSC வாக்கெடுப்பு இன்று

    உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியிருக்கும் ரஷ்யா மீதான தீர்மானம் தொடர்பான UNSC வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.  

     

     

    ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு மத்தியில், உக்ரைனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியாகியுள்ளன.

    WORLD

    இன்று காலை கியேவில் இரண்டு பெரிய குண்டு வெடிப்பு சப்தக்கள் கேட்டன;  

  • 09:00 AM

    ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக வெள்ளை மாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம்

    ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைந்ததை அடுத்து வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினார்கள். 

    ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என அந்நாட்டு அதிபர் புடினுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அழுத்தம் தர வேண்டும் எனக் கோரி, வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள லஃபாயேட்டே சதுக்கப் பூங்காவில் கூடிய ஆர்ப்பாட்டர்கள் போரை நிறுத்து என்றும், ரஷ்யா மீது தடைகளை விதிக்கவும் கோரி முழக்கங்களை எழுப்பினார்கள்.

  • 08:15 AM

    கிரிமியா பகுதி உட்பட வடக்குப் பகுதியில் ரஷ்ய டாங்கிகள் எல்லைகளைத் தாண்டின

    கிரிமியா பகுதியில் பல மாதங்களாக ரஷ்யா குவித்திருந்த படைகள் உட்பட, அந்நாட்டின் வடக்குப் பகுதிகளுக்குள் ரஷ்ய டாங்கிகள் புகுந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

    உக்ரைனில், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட நிலத்தடிப் பகுதிகள் மக்களின் பதுங்கும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. உக்ரைனின் நகரங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஷ்யாவின்  ராணுவ கூறியபோதிலும், உக்ரைனின் விமான தளங்கள் உட்பட பல முக்கிய பகுதிகளில் ஷெல் தாக்குதல்கள் தொடர்கின்றன.

  • 07:30 AM

    உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க உலக வங்கி தயாராக உள்ளது

    உக்ரைனுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க உலக வங்கி தயாராக உள்ளது என உலக வங்கி அறிவித்துள்ளது. போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் நாட்டின் உடனடி தேவைகளுக்காக உலக வங்கியும், அதன் அமைப்புகளும் நிதியுதவி வழங்க முடிவு செய்திருப்பதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • 07:15 AM

    அகண்ட ரஷ்யாவே ரஷ்யாவின் இலக்கு

    ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் சோவியத் யூனியனை நிறுவ விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க அதிபர், உக்ரேன் மட்டும் புடினின் இலக்கு அல்ல என்றும், ரஷ்யாவை விரிவாக்க விரும்பும் அவரது செயல், உலகின் பிற பகுதிகள் வந்துள்ள தற்போதைய நிலைக்கு முற்றிலும் முரணானத என்று தெரிவித்தார்.

    ரஷ்யாவின் மோதல் போக்குக்கு எதிராக,பொருளாதாரம், தனி நபர்கள், நிறுவனங்கள் உட்பட  ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தடைகளைத் தவிர, அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை விதிக்கும் வாய்ப்பை பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.  

  • 06:45 AM

    ரஷ்யாவை எதிர்த்துப் உக்ரைன் 'தனியாக போரிடுகிறது' என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவுடனான முதல் நாள் சண்டையில் 137 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளதாக, அவரது கருத்தை மேற்கோள் காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.

Trending News