நாளை வாக்கு எண்ணிக்கை! கர்நாடக தேர்தல் முடிவை எப்போது, எங்கே, எப்படி தெரிந்து கொள்வது?

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு 2023 அட்டவணை: கர்நாடக சட்டசபையின் 224 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள்.eci.gov.in, www.eciresults.nic.in, eci.gov.in, results.eci.gov.in போன்ற இணையதளங்களில் பார்க்கலாம்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 12, 2023, 03:14 PM IST
  • கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13 சனிக்கிழமை நடைபெறுகிறது.
  • 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸுக்கு இடையே கடுமையான போட்டி.
  • தேர்தல் முடிவுகள் www.eci.gov.in, www.eciresults.nic.in, eci.gov.in, results.eci.gov.in போன்ற தளங்களில் பார்க்கலாம்.
நாளை வாக்கு எண்ணிக்கை! கர்நாடக தேர்தல் முடிவை எப்போது, எங்கே, எப்படி தெரிந்து கொள்வது? title=

Karnataka Assembly Election 2023 Result: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13 சனிக்கிழமை நடைபெறுகிறது. 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் பரம எதிரிகளான பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெற்றது. கர்நாடக சட்டசபையின் 224 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்குத் தொடங்கும். நண்பகலுக்குள் முன்னிலை விவரமும், மாலைக்குள் முழு முடிவுகளும் தெரியவரும். பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் பார்ட்டி,  ஆம் ஆத்மி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற போன்ற கட்சிகள் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டன.

பாஜக, காங்கிரஸ், மஜத இடையே மும்முனைப் போட்டி:
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பல கட்சிகள் களம் கண்டாலும் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. அதிக இடங்களில் இந்த மூன்று கட்சிகள் மட்டும் தான் வேட்பாளர்களை நிறுத்தினர். பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மஜத 209 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2,615 வேட்பாளர்கள் 224 தொகுதிகளில் போட்டியிட்ட னர். 

பாஜக - 224
காங்கிரஸ் - 223
மஜத - 209

மேலும் படிக்க: “ஆபரேஷன் தாமரை” வியூகத்தை எதிர்கொள்ள “ஆபரேஷன் கை” திட்டத்தை கையில் எடுத்த காங்கிரஸ்

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு:
கர்நாடகம் முழுவதும் 58,545 வாக்குச் சாவடிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. வாக்குப்பதிவு செய்யப்பட்ட 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முத்திரையிடப்பட்டு 34 வாக்குப்பெட்டி மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் 24 மணி நேர ஆயுத பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கர்நாடக தேர்தல் முடிவை இந்த தளங்களில் தெரிந்துக்கொள்ளலாம்:
கர்நாடக சட்டசபையின் 224 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்குத் தொடங்கும். கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் www.eci.gov.in, www.eciresults.nic.in, eci.gov.in, results.eci.gov.in போன்ற இணையதளங்களில் பார்க்கலாம்.

இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தலில் வாக்குகள் பதிவு:
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2018-இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பதிவான 72.44 சதவீதம் தான் இதுவரை அதிகமாக இருந்தது. முந்தைய தேர்தலைவிட இம்முறை 0.75 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளது. வாக்குகள் பதிவான இயந்திரங்கள் நாளை (மே 13, சனிக்கிழமை) காலை 8 மணிக்கு திறக்கப்படுகின்றன. அதன்பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

மேலும் படிக்க: கர்நாடகா அரியணை யாருக்கு! ZEE NEWS-ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
காங்கிரஸ் தனிக்கட்சியாக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறின. ஒரு சில கணிப்புகளில் பாஜக தனிக்கட்சியாக அதிக இடங்களைப் பெறும் என்றும் கூறப்படுகிறது. ஒரு சில ஊடகங்களில் தொங்கு சட்டப்பேரவை அமையும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. ஒருவேளை தொங்கு சட்டப்பேரவை அமையும் பட்சத்தில் மஜதவு உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.

காங்கிரஸின் “ஆபரேஷன் கை” திட்டம்:
பாஜகவின் “ஆபரேஷன் தாமரை” வியூகத்தை எதிர்கொள்ள முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் “ஆபரேஷன் ஹஸ்தா” (Operation Hand) என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது கர்நாடகாவில் அடுத்த ஆட்சியை அமைப்பதற்கான எண்ணிக்கையை உறுதி செய்ய இரு முக்கிய கட்சிகளும் அதற்கான திரைமறைவு திட்டங்களை தொடங்கியுள்ளன. கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் குறைந்தால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை கைப்பற்ற “ஆபரேஷன் கை” திட்டத்தை காங்கிரஸ் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்முறை எப்படியாகிலும் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தே தீர வேண்டும் என்பதில் அக்கட்சியின் தலைவர்கள் உறுதியாக இருப்பதால் அதற்கான திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன.

கர்நாடக தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி கூறியது:
224 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 73.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 1952 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவாகும். 

இதுவரை ரூ.153.17 கோடி ரொக்கம், ரூ. 84.93 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ. 24.26 கோடி மதிப்புள்ள இலவசப் பொருள்கள், ரூ. 24.03 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள், ரூ. 93.23 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.4.79 கோடி மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 384.46 கோடியாகும். 

மேலும் படிக்க: EC: தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட EVM கர்நாடக தேர்தலில்? வதந்திக்கு நடவடிக்கை அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

“ ”

Trending News