ஜெ.,வுக்கு விதித்த ரூ.100 கோடி அபராதம்: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக மனு

Last Updated : Mar 22, 2017, 09:10 AM IST
ஜெ.,வுக்கு விதித்த ரூ.100 கோடி அபராதம்: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக மனு title=

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு மீறி சுமார் ரூ.66 கோடி சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கை பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா விசாரித்தார்.

முடிவில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் குற்றவாளிகள் என கண்டு, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

தனிக்கோர்ட்டு 2014-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

இந்த அப்பீல் வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து 2015-ம் ஆண்டு, மே மாதம் 11-ம் தேதி தீர்ப்பு அளித்தார்.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக அப்பீல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் விசாரித்து, இறுதி வாதங்கள் முடிந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-நம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த தீர்ப்பில், ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் மீதான அப்பீல் வழக்கு இல்லாமல் போகிறது என கூறிய நீதிபதிகள் மற்ற 3 பேர் மீது தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்தனர்.

இந்த 3 பேரும், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டது தெரியவந்து இருப்பதாக கூறிய நீதிபதிகள், 3 பேரும் பெங்களூரு தனிக்கோர்ட்டில் உடனடியாக சரண் அடையவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் சரண் அடைந்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிப்பது தொடர்பாக கர்நாடக அரசுக்கு குழப்பம் ஏற்பட்டது. சட்ட வல்லுனர்களும் இதுதொடர்பாக இரு வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். 

இதையடுத்து தற்போது கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கேட்டு ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட்டு அபராதத் தொகையை வசூலிக்க முடியுமா? ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை கைவிடப்பட்டதாக கருத முடியுமா? என்ற விளக்கங்களை கர்நாடக அரசு கோரியுள்ளது. 

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கூர்ந்து ஆய்வு செய்தால் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்க முடியாது என்று கூறப்படுகிறது. காரணம், ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் மீதான வழக்கு கைவிடப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

எனவேதான் தற்போது கர்நாடக அரசுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே அது விளக்கம் கேட்டு மனு செய்துள்ளது.

Trending News