கொரோனா காலத்திலும் பயங்கரவாதமா? ஐ.நா-வில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!!

வர்சுவல் பயங்கரவாத எதிர்ப்பு வாரத்தில் பேசிய இந்திய தூதுக்குழுவின் தலைவர் மகாவீர் சிங்வி, தொற்றுநோயை சமாளிக்க உலகம் முழுவதும் ஒன்று திரண்டு வரும் நேரத்தில், துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருகிறது என்று கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 8, 2020, 04:40 PM IST
  • பாகிஸ்தான், பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது.
  • மதவாத நாடான பாகிஸ்தான் இந்தியர்களின் மதச்சார்பின்மையை புரிந்துகொள்வது கடினம்.
  • சிறுபான்மையினர் பாகிஸ்தானில் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
கொரோனா காலத்திலும் பயங்கரவாதமா? ஐ.நா-வில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!! title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் (Corona Virus) நெருக்கடிக்கு மத்தியில், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இந்தியா (India) பாகிஸ்தானை குறை கூறியது. ஐக்கிய நாடுகள் சபையின் (UN) வர்சுவல் சந்திப்பில், அண்டை நாடான பாகிஸ்தானின் உண்மையான முகத்தை இந்தியா வெளிப்படுத்தியதுடன், சர்வதேச பயங்கரவாதத்தின் மையம் என்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான அடைக்கலம் என்றும் பாகிஸ்தான் ஏன் அழைக்கப்படுகிறது என்பதை அந்நாடு  ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் கூறியது.

வர்சுவல் பயங்கரவாத (Terror) எதிர்ப்பு வாரத்தில் பேசிய இந்திய தூதுக்குழுவின் தலைவர் மகாவீர் சிங்வி, “இந்த தொற்றுநோயை சமாளிக்க உலகம் முழுவதும் ஒன்று திரண்டு வரும் நேரத்தில், துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருகிறது. பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது.  பாகிஸ்தான் (Pakistan) இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து எமது உள் விவகாரங்களில் தலையிடுகிறது ” என்று குற்றம் சாட்டினார்.

ஒரு பயங்கரவாதியை ஏன் தியாகி என்று அழைக்கிறது பாகிஸ்தான்?

தன் நாட்டிலிருந்து நடத்தப்படும் பயங்கரவாத சதி நடவடிக்கைகளை நிறுத்துமாறு உலக நாடுகள் பாகிஸ்தானை வற்புறுத்த வேண்டும் என இந்திய மற்ற நாடுகளைக் கேட்டுக்கொண்டது. இந்த சந்தர்ப்பத்தில், காபூலில் இந்திய தூதரகம் மீதான பயங்கரவாத தாக்குதல், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல், 2016 பதான்கோட் தாக்குதல், ஊரி மற்றும் புல்வாமா தாக்குதல் ஆகியவற்றில் பாகிஸ்தானுக்கு இருந்த  பங்கை இந்தியா கோடிட்டுக் காட்டியது. மேலும், 9/11 சூத்திரதாரி ஒசாமா பின்லேடனை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தியாகியாக அறிவித்ததையும் இந்தியா நினைவூட்டியது.

ALSO READ: பாகிஸ்தானில் பாதுகாப்பு கருவிகள் பற்றாக்குறை: அரசு மருத்துவர்கள் ராஜினாமா

வர்சுவல் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையைப் பற்றியும் இந்தியா தன் கருத்துக்களை முன்வைத்தது. ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் தவறான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட அறிக்கைகளை வெளியிடுவதாக சிங்வி கூறினார். இந்தியாவுக்கு எதிராக எல்லையில் பயங்கரவாதிகளை ஊக்குவிக்க நிதி உட்பட அனைத்து வகையான உதவிகளையும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அளிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் கொள்கைகள் பற்றிய தவறான தகவல்களையும் பாகிஸ்தான் பரப்புகிறது என்று சங்வி கூறினார்.

இது தவிர, பலூசிஸ்தான், கைபர் பக்துங்க்வா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) ஆகிய பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மத மற்றும் கலாச்சார சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகளையும் இந்தியா சுட்டிக்காட்டியது. இந்திய அதிகாரி கூறுகையில், "இந்தியாவில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளை வகிக்கிறார்கள், அங்கு முழு மரியாதையும் பெறுகிறார்கள். இதற்கு மாறாக, சிறுபான்மையினர் பாகிஸ்தானில் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். மதவாத நாடாக இருக்கும் பாகிஸ்தான்  இந்தியர்களின் மதச்சார்பின்மையை  புரிந்துகொள்வது கடினம்.” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் மற்ற நாடுகளை குற்றம் சாட்டுவதற்கு முன்னர் தன் குறைபாடுகளை சரிசெய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிங்வி மேலும் கூறினார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராக விஷத்தைத் தூண்டுவதன் மூலம் எதுவும் நடக்கப்போவதில்லை என்றும் இந்தியா பாகிஸ்தானை எச்சரித்தது.

ALSO READ: சீனாவுடனான CPEC திட்டம் வெற்றிகரமாக நிறைவடையும்: இம்ரான் உறுதி

Trending News