Pulwama: பயங்கரவாத தற்கொலை தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த 40 CRPF வீரர்களை நினைவுகூறுவோம்

நம் வாழ்வை நிம்மதி நிறைந்த பூங்காவாக்க, பனிப் பாறைகளிலும் பாலைவனங்களிலும் இரவும் பகலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் வீர்ரகளை எப்போதும் நம் நினைவில் கொள்வது அவசியமாகும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 14, 2021, 09:08 AM IST
  • பிப்ரவரி 14 அன்று ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கர தற்கொலை தாக்குதல் நடந்தது.
  • இதில் 40 CRPF வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • 12 நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் பாலாக்கோட்டில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
Pulwama: பயங்கரவாத தற்கொலை தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த 40 CRPF வீரர்களை நினைவுகூறுவோம் title=

புதுடெல்லி: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 14 அன்று ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கர தற்கொலை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) 40 வீரர்கள் உயிரிழந்தனர். புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவை இந்தியா இன்று அனுசரிக்கிறது. அந்த தாக்குதலில் உயிர் துறந்த துணிச்சலான வீரர்களின் தியாகத்தை நாடு நினைகூறுகிறது.

2019 பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த தாக்குதலில் அஹ்மத் தார் என அடையாளம் காணப்பட்ட 22 வயதான ஒரு இளைஞன் ஒரு மாருதி ஈகோ வண்டியை, ஒரு வழிப்பாதை வழியாக நெடுஞ்சாலைக்கு ஓட்டிச் சென்று, ஐ.இ.டி நிறைந்த தனது காரை CRPF வீரர்கள் பயணித்த கான்வாயில் மோதினார்.

வெடித்துச் சிதறிய பேருந்து உலோகக் குவியலாய் கீழே விழுந்தது. இந்த தாக்குதலில் குறைந்து 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். காஷ்மீரில், 30 ஆண்டுகால போராட்டக் காலத்தில் நடந்த மிக பயங்கரமான தாக்குதலாகும் இது.

2,500 CRPF வீரர்களைக் கொண்ட 78 பேருந்துகள் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் (Jammu Kashmir) நோக்கி சென்று கொண்டிருந்தன.

இந்த தாக்குதலில் தங்கள் நாட்டிற்கு பங்கு இருக்கிறது என்பதை பாகிஸ்தான் பலமுறை மறுத்த போதிலும், புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழு ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றது.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களின் தடயவியல் விசாரணைக்குப் பின்னர் அம்மோனியம் நைட்ரேட், நைட்ரோகிளிசரின் மற்றும் ஆர்.டி.எக்ஸ் ஆகியவை தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

ALSO READ: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா போன்ற தாக்குதலை முறியடித்த ராணுவத்தினர்...!!!

தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட பயங்கரவாதியின் டி.என்.ஏ-வும் பொருந்தியதால் அவரது அடையாளமும் உறுதிசெய்யப்பட்டது.

பிப்ரவரி 14 அன்று நடந்த புல்வாமா (Pulwama) தாக்குதலைத் தொடர்ந்து, 12 நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் பாலாக்கோட்டில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் பெயர்கள் கொண்ட நினைவுச்சின்னம் 2020 பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் உள்ள லெத்போரா முகாமில் உள்ள சிஆர்பிஎஃப் பயிற்சி மையத்தில் திறக்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னத்தில் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த 40 வீரர்களின் பெயர்களுடனும் அவர்களின் புகைப்படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. CRPF-ன் குறிக்கோளான "சேவா மற்றும் நிஷ்டா" (சேவை மற்றும் விசுவாசம்) என்ற சொற்றொடரும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டின் எல்லைகளில் காவல் தெய்வங்களாய் நின்று காக்கும் வீரர்கள் நாம் போற்றி பாராட்ட வேண்டியவர்கள். அவர்கள் எல்லையில் கண் விழித்து காப்பதால்தான் நாம் நாட்டில் கண் மூடி நிம்மதியாக உறங்க முடிகிறது. போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று சண்டையிட தைரியமில்லாத சில பயங்கரவாத குழுக்களும், அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் நாடுகளும் நடத்தும் இது போன்ற சதி வேலைகள் பெரிய அளவில் கண்டிக்கத்தக்கவை. நம் வாழ்வை நிம்மதி நிறைந்த பூங்காவாக்க, பனிப் பாறைகளிலும் பாலைவனங்களிலும் இரவும் பகலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் வீர்ரகளை எப்போதும் நம் நினைவில் கொள்வது அவசியமாகும். 

ALSO READ: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News