கொல்கத்தா பெண் கொலையான நேரத்தில்... கல்லூரி முதல்வராக இருந்தவர் கைது - பின்னணி என்ன?

Sandeep Gosh Arrested: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையான ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 2, 2024, 10:18 PM IST
  • சிபிஐ இவரிடம் இரண்டு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டது.
  • தற்போது அவர் ஊழல் வழக்கில்தான் கைதாகி உள்ளார்.
  • இவர் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.
கொல்கத்தா பெண் கொலையான நேரத்தில்... கல்லூரி முதல்வராக இருந்தவர் கைது -  பின்னணி என்ன? title=

Sandeep Gosh Arrested: கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கடந்த ஒரு மாதமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆக. 9ஆம் தேதி இதே மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது. 

இந்த சம்பவம் நடந்த போது கல்லூரி முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ். அந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு அவர் தனது முதல்வர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அந்த மருத்துவ மாணவி கொலை வழக்கில் சந்தீப் கோஷிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கொலை வழக்கில் விசாரணை

மருத்துவ மாணவி கொலை குறித்து போலீசாரிடம் உடனடியாக உரிய முறையில் புகார் அளிக்காதது தொடர்பாகவும், உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடம் அது தற்கொலை என்று  கூறியது தொடர்பாகவும் இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சிபிஐ இவரிடம் உண்மை கண்டறியும் (Lie Detector Test) பரிசோதனையையும் மேற்கொண்டது.

மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு: யாத்திரைக்கு சென்ற பக்தர்களுக்கு பாதிப்பு - 2 பெண்கள் உயிரிழப்பு

ஊழல் வழக்கிலும் விசாரணை

இதை தொடர்ந்து, இவர் மீதான ஊழல் வழக்கையும் சிபிஐ விசாரித்து வந்தது. பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கையும், ஊழல் குற்றச்சாட்டையும் சிபிஐ தொடர்ந்து விசாரித்தது. கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆணைக்கு இணங்க, ஊழல் வழக்கில் சிபிஐ இன்று அவரை கைது செய்துள்ளது. அதாவது, இவர் பொறுப்பில் இருந்த நேரத்தில் ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் பல்வேறு நிதி ரீதியான முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தெரியவந்தது. இதை தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறையின் சிறப்பு செயலாளர் தேபல் குமார் கோஷ் அளித்த புகாரின் பேரில் சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்தது. 

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

சந்தீப் கோஷ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாத உரிமை கோராத உடல்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தது, பயோமெடிக்கல் கழிவுகளை கடத்தியது, தேர்ச்சி பெற வைப்பதற்கு லஞ்சம் வாங்கியது என தொடர் குற்றச்சாட்டுகள் வந்தன. அதேபோல் பெண் மருத்துவரின் கொலையிலும் பல்வேறு மாறுபட்ட தகவல்களால் இவர் மீது சந்தேகம் அதிகமானது. 

தொடர்ந்து, ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கத்துறையும், சிபிஐ உடன் இணைந்து ஊழல் வழக்கு விசாரணையை தீவிரமாக்கியதால் அவர் கடும் அழுத்தத்திற்கு ஆளானார். இந்நிலையில், இவரின் கைது மேலும் இந்த வழக்கை பரபரப்பாக்கி உள்ளது. பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய் குற்றத்தை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் பரிசோதனையில் அவர் குற்றத்தை மறுத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.   

மேலும் படிக்க | கொல்கத்தா கொடூரம்: பலியான பெண்ணின் பெற்றோருக்கு வந்த 3 கால்கள்... நீடிக்கும் மர்மம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News