திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு: பலர் காயம்

சர்வதர்ஷன் டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக கோவிலில் உள்ள டிக்கெட் கவுண்டரில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோயிலில் நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 12, 2022, 02:44 PM IST
  • திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசல்.
  • டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அலை மோதியதால் நெரிசல் ஏற்பட்டது.
  • பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு: பலர் காயம் title=

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை வெங்கடாசலபதி கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பக்தர்கள் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, சர்வதர்ஷன் டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக கோவிலில் உள்ள டிக்கெட் கவுண்டரில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோயிலில் நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 

'சர்வதர்சனம்' என்றால் 'அனைவருக்கும் தரிசனம்' என்று பொருள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் 'தரிசனம்' செய்வதற்கான இலவச டோக்கன்களை வழங்குகிறது.

ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்குவதை டிடிடி நிர்வாகக் குழு அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். இதனை முன்னிட்டு திருமலையிலேயே ஏராளமான பக்தர்கள் தங்கி விட்டனர்.

இன்று காலை பக்தர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியைத் தாண்டி கோயிலுக்குள் செல்ல முயன்றனர். இதனால் திருமலை கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-ன் படி, ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலை கோவில் சன்னதியில் நெரிசல் ஏற்பட்டு அதன் காரணமாக ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | திருப்பதியில் முதியோருக்கு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி! 

டிடிடி அதிகாரிகளின் அலட்சியத்தால் நெரிசல் ஏற்பட்டதாக பக்தர்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருப்பதி வெங்கடாசலபதி கோயிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு மூடப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் 14 அன்று கோவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

திருப்பதி பாலாஜி கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடாசலபதி கோயில், ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஒரு விஷ்ணு ஸ்தலமாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. 

கலியுகத்தில் சோதனைகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து மனித குலத்தை காப்பாற்ற விஷ்ணு பகவான் வேங்கடாசலபதியாக இங்கு அருள் பாலிக்கிறார். திருமலை மலைகள் சேஷாசலம் மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். திருப்பதி கோவிலுக்கு ஆண்டு முழுதும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். பக்தர்களின் வருகை மற்றும் தரிசன ஏற்பாடுகளை நிர்வகிப்பதில் திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.

இதற்டிடையில், இந்த செய்தி குறித்து, டிடிடி சேர்மன், சுப்பாரெட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். ‘நெரிசல் போன்ற சூழ்நிலை எதுவும் ஏற்படவில்லை. இன்று எதிர்பாராத கூட்டம் வந்தது. ஒரு மணி நேரத்தில் எங்கள் அதிகாரிகள் நிலைமையை சரிசெய்தனர். பக்தர்கள் திருமலை காத்திருப்பு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். திருப்பதியில் ஒரு நாளில் 80,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இன்று யாரும் எதிர்பாராத வகையில் கூட்டம் அலைமோதியது. தற்போது அனைவரும் திருமலை வரிசைக்கு மாற்றப்பட்டு நிலைமை கட்டுக்குள் உள்ளது.’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 300 ரூபாய் டிக்கெட் 3,000 ரூபாய்; பதறிய திருப்பதி தேவஸ்தானம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News