கொல்கத்தாவை அடுத்து உத்தரகாண்டில்... வன்கொடுமைக்கு ஆளான செவிலியர் - தவிக்கும் 11 வயது மகள்

National News: கொல்கத்தாவில் பெண் ஜூனியர் டாக்டர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய சூழலில், உத்தரகாண்டில் செவிலியரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 16, 2024, 12:45 PM IST
  • ஜூலை 30 ஆம் தேதி அந்த செவிலியர் காணாமல் போயுள்ளார்.
  • ஆக. 8ஆம் தேதி அன்று அவரது உடல் போலீசாரால் கண்டெடுக்கப்படுகிறது.
  • அந்த செவிலியருக்கு 11 வயதில் மகள் இருக்கிறார்.
கொல்கத்தாவை அடுத்து உத்தரகாண்டில்... வன்கொடுமைக்கு ஆளான செவிலியர் - தவிக்கும் 11 வயது மகள் title=

National News In Tamil: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசின் கே.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான பெண் ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சஞ்சய் ராய் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தனது பொறுப்பை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவர் வேறு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கொல்கத்தா போலீசார் முதல்கட்டமாக இந்த வழக்கு விசாரித்து வந்த நிலையில், சிபிஐ தற்போது இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. மருத்துவமனையில் குற்றம் நடந்த சம்பவ இடத்தை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அத்துமீறி புகுந்து அனைத்தையும் நாசம் செய்திருக்கிறது. இதனால், சம்பவ இடத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் கிளம்பியிருக்கின்றன. இதுவரை வன்முறை தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், அந்த பெண்ணின் உடலில் 150 கிராம் விந்தணு இருந்ததாகவும், இதனால் இது கூட்டு பாலியல் வன்முறையாகும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். 

உத்தராகாண்டில் கொடூரம்

இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், கொல்கத்தாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. உயிரிழந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளன. இந்த விவகாரம் உச்சத்தில் இருந்து வரும் சூழலில், உத்தரகாண்டில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மேலும் படிக்க | கொல்கத்தா மருத்துவர் கொலை: 4 மனைவிகள்... ஆபாச பட அடிமை - குற்றவாளியின் பகீர் பின்னணி!

உத்தரகாண்டில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய வழியில், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண் காணாமல் போய் 8 நாள்களுக்கு பின்னர் சடலமாக அவரது உடல் கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தர்மேந்திரா என்பவரை உத்தரகாண்ட் போலீசார் கைது செய்துள்ளனர்.

11 வயது மகளின் தாய்

கடந்த ஜூலை 30ஆம் தேதி மாலையில் தனது பணி முடித்து மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுள்ளார், அந்த செவிலியர். உத்தரகாண்டின் ருத்ராபூர் நகரின் இந்திரா சௌக் பகுதியில் இருந்து இ-ரிக்ஷாவில் அந்த செவிலியர் ஏறியது சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. ருத்ராபூர் என்பது உத்தரகாண்ட் - உத்தர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் எல்லைப் பகுதியாகும். இந்த செவிலியர் உத்தர பிரேதசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் வரும் காசி ரோடு பகுதியில் வீடு எடுத்து தனது 11 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார் 

மாலையில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டும் அந்த செவிலியர் வீடு திரும்பவில்லை. வீட்டில் இருந்த உறவினர்கள் அவரை தேடியும் கிடைக்கவில்லை. செவிலியர் காணாமல் போனது குறித்து அடுத்த நாள் காலையில் அவரின் சகோதரி உத்தர பிரதேச போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

8 நாள்களுக்கு பிறகு 

சம்பவம் நடந்து சுமார் 8 நாள்களுக்கு பிறகு ஆக. 8ஆம் தேதி அன்று அந்த பெண்ணின் வீட்டில் இருந்து 1.5 கி.மீ., தூரத்தில் உள்ள திப்திபா கிராமத்தில் காலி நிலம் ஒன்றில் பெண்ணின் உடலை உத்தர பிரதேச காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். போலீசார் ஒரு குழுவை அமைத்து குற்றவாளியை தேடி வந்துள்ளனர். அந்த செவிலியரின் உடலை கண்டெடுத்தபோது அவரிடம் மொபைல் இல்லாததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

அந்த மொபைலை குற்றவாளிதான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என நினைத்த போலீசார் அந்த மொபைலை டிரேஸ் செய்து குற்ரவாளி தர்மேந்திராவை ராஜஸ்தானில் வைத்து நேற்று முன்தினம் (ஆக. 14) கைது செய்துள்ளனர். குற்றவாளி தர்மேந்திரா உத்தர பிரதேசத்தின் பரேலி நகரில் தினக்கூலியாக பணியாற்றுபவர் ஆவார்.

நடந்தது என்ன?

சம்பவம் நடந்த அன்று தர்மேந்திரா மது அருந்தியிருந்ததாகவும், அப்போது அந்த செவிலியரை பார்த்து அவரையே பின் தொடர்ந்து சென்றிருக்கிறார் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளனர். அந்த செவிலியர் தனது குடியிருப்பு பகுதியை நெருங்கியபோது, அவரை தர்மேந்திரா தாக்கியுள்ளார். அந்த செவிலியரை அருகில் இருந்த மறைவான புதருக்குள் இழுத்துசென்று அவரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, அவரது சேலையை வைத்தே கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் என உத்தம் சிங் நகர், மூத்த காவல் கண்காணிப்பாளரான டிசி மஞ்சுநாத் தெரிவித்தார். அந்த செவிலியரின் மொபைல் மட்டுமின்றி ரொக்கம் 3 ஆயிரம் ரூபாயையும் தர்மேந்திரா திருடிச்சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிவாரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News