கடைசி விவசாயிதான் எஞ்சாயி எஞ்சாமிக்கு முக்கிய காரணம் - விளக்கம் கொடுத்த தீ

எஞ்சாயி எஞ்சாமி பாடல் விவகாரம் தொடர்பாக பாடகி தீ தெருக்குரல் அறிவுக்கு விளக்களித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 2, 2022, 02:59 PM IST
  • கடந்த ஆண்டு எஞ்சாயி எஞ்சாமி சுயாதீன பாடல் வெளியானது
  • பல இடங்களில் அறிவின் பெயர் தவிர்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது
  • பாடகி தீ இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்
 கடைசி விவசாயிதான் எஞ்சாயி எஞ்சாமிக்கு முக்கிய காரணம் - விளக்கம் கொடுத்த தீ title=

தெருக்குரல் அறிவின் வரிகளில் பாடகி தீ மற்றும் அறிவு ஆகியோர் குரலில் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் கடந்த ஆண்டு ‘எஞ்சாயி எஞ்சாமி’ என்ற சுயாதீன பாடல் வெளியானது. அந்தப் பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. குறிப்பாக பாடல் வரிகளை பலரும் பாராட்டி அறிவுக்கு தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இதனையடுத்து Rolling Stone India என்ற ஆங்கில தளத்தில் இப்பாடலை பாராட்டும் வகையில் பதிவொன்று போடப்பட்டது. ஆனால் அதில் தெருக்குரல் அறிவின் பெயர் இடம்பெறாதது அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் கடந்த 28ஆம் தேதி செஸ்  ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இந்தப் பாடலை தீ மற்றும் மாரியம்மாள் இணைந்து பாடினர். அப்போதும் அறிவின் பெயர் இடம்பெறாதது மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. நிலைமை இப்படி இருக்க அறிவு இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பாடலை எழுதியது, பாடியது, கம்போஸ் செய்தது மற்றும் பெர்ஃபார்மன்ஸ் செய்தது என எல்லாமே செய்தது நான்தான்.  யாரும் எனக்கு இதற்கு இசையையோ, ஒரு பாடலை வரியையோ தரவில்லை.  இப்போது இந்த பாடல் பிரபலமாக இருப்பதற்கு கிட்டத்தட்ட 6 மாத காலங்கள் இரவு பகல் என பாராமல் கண் விழித்து தூங்காமல் உழைத்திருக்கிறேன்” என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பாடகி தீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து அளித்திருக்கும் விளக்கத்தில், “எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவர் பற்றியும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே கூறியிருக்கிறேன். இருவரின் முக்கியத்துவத்தையும் எங்கேயும் குறைத்து மதிப்பிட்டதில்லை. ஒவ்வொரு வாய்ப்பின் போது, மேடையிலும் இருவரையும் முன்னிலைப்படுத்தி வருகிறேன்.

Arivu

அதேநேரத்தில் எங்களது பணி குறித்து மற்றவர்கள் வெளியிடும் விளம்பரங்களில் எனக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இயக்குனர் மணிகண்டனும், அவரின் `கடைசி விவசாயி' திரைப்படமும் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் உருவாக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் வரிகளையும் பாட்டையும் நாங்கள் விவாதித்துதான் உருவாக்கினோம். பாடல் வெளியாகும் வரை நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில்தான் இருந்தோம்.

மேலும் படிக்க | ஒரே நாளில் 5 மில்லியன் பார்வைகள் - அசத்தும் பொன்னியின் செல்வன் சிங்கிள்

பாடலுக்கான அர்த்தங்களை பாடல் வெளியான பின் அறிவின் ஒவ்வொரு இன்டெர்வியூ மூலமாக நான் தெரிந்துகொண்டேன். அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது என நம்பி, அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. 'எஞ்சாயி எஞ்சாமி' எட்டிய உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசைப்பட்டேன். ஏதேனும் ஒரு வாய்ப்பு அதில் சமமாக இல்லாமல் இருந்தால் நிச்சயம் அதில் நான் இருக்கமாட்டேன்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by D H E E (@dhee___)

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் நானும் அறிவும் பங்கேற்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர். அறிவு அமெரிக்காவில் இருந்ததால் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து அவர் குரலை நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொண்டோம். தனது குரலுக்காகவும், பாடலில் அவரின் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அறிவு பேசப்பட்டார். 'எஞ்சாயி எஞ்சாமி' பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மஜ்ஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் அடி மனதில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரபஞ்சத்தின் மீதும் உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பு, மரியாதையால் சக கலைஞர்களால் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும்” என குறிப்பிட்டிருக்கிறார்.

Santhosh Narayanan

முன்னதாக தீயின் தந்தையும் இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் அளித்திருந்த விளக்கத்தில், “ பாடலை தீயும், அறிவும் பாடினார்கள், பாடல் எப்படி அமைய வேண்டும் என்பதிலும் இருவரும் பங்கெடுத்தார்கள். இதில் தீ பாடிய வரிகளுக்கான பாடல் மெட்டை அவரே உருவாக்கினார். பிற வரிகளுக்கான மெட்டை நான் உருவாக்கினேன். அறிவு பாடிய வரிகளுக்கான மெட்டையும் நான் உருவாக்கி இருந்தேன்.

இப்பாடலின் வரிகளுக்கு அறிவுடன் இணைந்து நிறைய நேரம் செலவிட்டேன். பாடலில் இடம்பெற்றிருந்த ஒப்பாரி வரிகளுக்கு அரக்கோணம் பகுதி சுற்று வட்டாரத்தில் தாத்தாக்களும், பாட்டிகளும் உதவினர். அவர்களின் பங்களிப்புக்கு மதிப்பளித்த அறிவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ’எஞ்சாயி எஞ்சாமி’ பாடலை ஒட்டு மொத்தமாக முடிக்க நாங்கள் 30 மணி நேரம் எடுத்துக் கொண்டோம். பாடல் பதிவு செய்யும்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். இப்பாடலின் மூலம் வந்த வருமானம் அனைத்தையும் நான், தீ, அறிவு சமமாகவே பங்கிட்டு கொண்டோம் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறேன்.

மேலும் படிக்க | எஞ்சாயி எஞ்சாமி மெட்டு என்னுடையதுதான் - தெருக்குரல் அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் நிகழ்வில் அமெரிக்கப் பயணம் காரணமாக அறிவு பங்கேற்க இயலாது என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம்.

நான் எப்போதும் அறிவை சிறந்த கலைஞர் என்றே உணர்கிறேன். நான் எப்போதும் எனது படைப்பு தளத்தை ஒடுக்கப்பட்டவர்களுக்காவே பயன்படுத்தி கொண்டிருக்கிறேன். இம்மண்ணின் கலைக்கும், கலைஞர்களுக்கும் என்னிடம் அன்பு மட்டுமே உள்ளது” என பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News