IND vs BAN: கான்பூர் டெஸ்ட்... 2வது நாள் ஆட்டம் நடக்குமா நடக்காதா - வானிலை ரிப்போர்ட் இதோ!

IND vs BAN, Weather Prediction: கான்பூரில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை நடைபெறுமா அல்லது மழைக்கு வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 27, 2024, 08:31 PM IST
  • இன்று முதல் ஆட்டம் மழையால் தாமதம் ஆனது.
  • போதுமான வெளிச்சம் இல்லை என்பதால் ஆட்டம் முன்னரே தடைபட்டது.
  • இன்று வெறும் 35 ஓவர்களே வீசப்பட்டன.
IND vs BAN: கான்பூர் டெஸ்ட்... 2வது நாள் ஆட்டம் நடக்குமா நடக்காதா - வானிலை ரிப்போர்ட் இதோ! title=

India National Cricket Team: இந்தியாவுக்கு வங்கதேசம் அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரில் (India vs Bangladesh, Kanpur Test) இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சுமார் 9 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய மண்ணில் டாஸ் ஜெயித்து இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. 2015ஆம் ஆண்டில் பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீசியிருந்தது. 

மேலும், இந்திய அணி (Team India) தரப்பில் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோஹித் சர்மா - கௌதம் கம்பீர் இணை அதே காம்பினேஷனில் களமிறங்கியது. வங்கதேசம் அணி (Team Bangladesh) நிகாத் ராணா, டஸ்கின் அகமது ஆகியோருக்கும் பதில் தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், யாஷ் தயாள் ஆகியோருக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதாவது, இந்தியா 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற வியூகத்துடனும், வங்கதேசம் 2 வேகப்பந்துவீச்சாளர்கள், 3 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற வியூகத்துடனும் களமிறங்கி உள்ளன.

கான்பூர் டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம்

மழைக் காரணமாக டாஸ் தாமதமாகதான் வீசப்பட்டது. அதேபோல் போட்டியும் காலை 10.30 மணியளவில்தான் தொடங்கியது. வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. ஓப்பனர் ஜாகிர் ஹாசன் 24 பந்துகளை பிடித்தும் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். அவரை அடுத்து உடனே மற்றொரு ஓப்பனர் ஷாத்மன் இஸ்லாம் 24 ரன்களுக்கு ஆகாஷ் தீப்பிடமே ஆட்டமிழந்தார். அடுத்து மாமினுல் ஹக் மற்றும் கேப்டன் ஷாண்டோ 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷாண்டோ 31 ரன்கள் எடுத்தபோது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, மாமினுல் 40 ரன்களுடனும், முஷ்குபிர் ரஹ்மான் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தபோது போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டத்தை நிறுத்தினர்.

மேலும் படிக்க | ஷகிப் அல்ஹசனுக்கு வங்கதேசத்தில் பாதுகாப்பு கொடுக்க முடியாது - பிசிபி

நாளைய வானிலை என்ன?

வெளிச்சம் அதிகமாக வாய்ப்பில்லை என தெரிந்ததால் முதல் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இன்றைய முதல் நாளில் இந்தியா 35 ஓவர்களையே வீசியிருந்தது. அதில் வங்கதேசம் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்துள்ளது. ஆகாஷ் தீப் 2, அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தினர். பும்ரா, சிராஜ் இன்று விக்கெட் வீழ்த்தவில்லை. ஜடேஜா இன்று பந்தே வீசவில்லை. மாமினுல், ரஹீம் மட்டுமின்றி ஷகிப் அல் ஹாசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ் என இன்னும் 3 பேட்டர்கள் வெளியே காத்திருப்பதால் இந்திய பந்துவீச்சாளர்கள் இவர்களை உடனே விக்கெட் எடுக்க நாளை புது வியூகத்துடன் வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்திய வீரர்கள் விளையாடுவதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் இந்த சூழலில் நாளைய ஆட்டமாவது தடைபடாமல் நடக்குமா என பெரும் கேள்வி எழுந்துள்ளது. 

மழைக்கு வாய்ப்பு இருக்கா...?

வானிலை குறித்து பார்த்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாள்களுக்கு அதிகபட்சமான மழைக்கே வாய்ப்பிருப்பதாக (IND vs BAN 2nd Test Weather Prediction) கூறப்பட்டது. அந்த முதல் நாளான இன்று மழையால் போட்டி எப்படி தடைபட்டதோ அதே நிலைமைதான் நாளையும் என்கிறார்கள்...  weather.com தளத்தின்படி, நாளை 100 சதவீதம் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினமும் மழை இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதால் ஆட்டம் டிராவில் முடியவே அதிக வாய்ப்பிருக்கிறது. 

முன்னதாக, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது, அஸ்வின் கடந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். கடந்த போட்டி நான்கு நாள்களில் அதாவது 10 செஷன்கள் வரையே தாக்குபிடித்தது. இந்த போட்டி நிச்சயம் ஐந்து நாள்கள் வரை செல்லும் என முன்னரே கணிக்கப்பட்ட நிலையில், இன்றைய ஆட்டம் தடைப்பட்டது ஐந்தாவது நாள் வரை போட்டி இருக்கும் என்பதை உறுதியாக்கி உள்ளது. 

மேலும் படிக்க | ஐபிஎல் 2025 மெகா அறிவிப்பு விரைவில், சிஎஸ்கேவில் தோனி நீடிப்பாரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News