தொடங்கியது ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் - இலக்கு என்ன ?

MK Stalin Starts Counting And Writing Plan : மாணவர்கள் பிழையின்றி எழுத முயற்சிக்கும் விதமாக தமிழக அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது. அத்திட்டத்திற்கு ‘எண்ணும் எழுத்தும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் இலக்கு என்ன ?  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 13, 2022, 03:23 PM IST
  • குழந்தைகள் பிழையின்றி எழுத ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடக்கம்
  • மாணவர்களுடன் பெஞ்சில் அமர்ந்து பாடங்களை கவனித்த மு.க.ஸ்டாலின்
  • ‘குழந்தைகள் பிழையின்றி எழுத, படிக்க வேண்டும் என்பதே இலக்கு’
தொடங்கியது ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் - இலக்கு என்ன ? title=

மொழிப் பிரச்சனைகளில் உரிமைச் சார்ந்த போராட்டங்களில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாக திகழும். தற்போது வரை தமிழ் மொழி மீதும், அதன் பண்டைய இலக்கியம் மற்றும் வரலாற்றுத் தொன்மைகள் மீதும் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தச் சூழலில், மொழிக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலத்தில், தங்களது தாய்மொழியான தமிழ்மொழியை பிழையும், தவறுமாக எழுதும் ஓர் தலைமுறை அதிகரித்துள்ளது. 

வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட எதிலும் அவ்வளவு பிழைகள். பல்வேறு மன அழுத்தங்களால் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் தற்கொலைக் கடிதங்களில்கூட, தங்களின் மன உணர்வுகளை ஓர் மொழி மூலம் சொல்ல முடியாத அளவுக்கு தமிழ் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது இப்படியே போனால் சரியல்ல என்று தமிழ் ஆர்வலர்கள் கவலைக் கொள்ள ஆரம்பித்தனர். வளரும் தலைமுறையினர் தமிழ் மொழியை நன்றாக எழுதவும், பேசவும், கணக்குப் பாடத்தில் நல்ல புரிதலும் அடையும் விதமாக புது முயற்சியை தமிழக அரசு கையிலெடுத்துள்ளது. 

மேலும் படிக்க | தமிழகத்தில் சாதி கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சி - அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்து அரசுப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. கொரோனா தொற்று அச்சத்தின் மத்தியிலும் மாணவர்கள் இன்று பள்ளிக்கு வந்தனர். புதிதாக இணையும் குழந்தைகளுக்கு மலர் கொடுத்து சிவப்புக் கம்பளம் வரவேற்பு நிகழ்ச்சி திருவஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதுபோன்ற பல பள்ளிகளில் புதிய மாணவர்களுக்கு விதவிதமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகளை வழங்கி வரவேற்றனர். முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு பாடபுத்தகங்களும் வழங்கபட்டன. 

இதையடுத்து, தமிழக அரசு உத்தரவின் பேரில் நீதி போதனை கதைகள் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாளைக்கு நீதிபோதனை பாடங்கள் நடத்தப்படும் என்றும் மேலும் தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள இந்த கல்வியாண்டிற்கான ‘எண்ணும் எழுத்தும்’ பாடத்திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தி, ‘இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள். ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். 

cm stalin in school

இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ -  மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்!’  என்று தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ஆதீனத்தை தொட்டால் திமுகவில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள் - கொந்தளித்த ஹெச். ராஜா

முதல் நாள் பள்ளி திறப்பையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கு, ‘எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டத்தை அவா் தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல், 10ஆம் வகுப்பறைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கே மாணவர்களின் பெஞ்ச் வரிசையில் அமர்ந்து தமிழ் பாடத்தைக் கவனித்தார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனிருந்தார்.

இதையடுத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மாணவா்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம் என்றார். இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவா்களும் 8 வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் இலக்கு என்றும் முதலமைச்சர் கூறினார். 

cm stalin in school

ஒவ்வொரு பாடத்திற்கும் தனித் தனிக் குழக்கள் அமைக்கப்பட்டு இந்த திட்டத்தை செழுமைப்படுத்துவார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்தார். மாணவர்கள் எப்போதும் படிப்பு படிப்பு என்று இருக்க வேண்டும் என்று முதலமைச்சராக இல்லாமல் ஒரு தந்தையாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். படிக்காமல் சாதித்த யாராவது ஒருவரைக் காட்டினால், படித்துச் சாதித்த லட்சம் பேரை நாம் காட்ட முடியும் என்றும், படிக்காமல் சாதிக்க முடியும் என யாராவது சொன்னால் அது வெறும் ஆசை வார்த்தை, சூழ்ச்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

மேலும் படிக்க | 8 மாதங்களில் கட்டடம்- 4 ஆண்டுகளாக ஒற்றை செங்கல்: வைரலாகும் சு.வெங்கடேசனின் பதிவு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News