சம்பிரதாயங்கள் இல்லாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... கட்டுப்பாடுகள் இதுதான்..!

avaniyapuram jallikattu 2024 restrictions: மதுரையில் கோலாகலமாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அரசு மற்றும் காவல்துறை சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமான சம்பிரதாயங்களுக்கு அனுமதியில்லை.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 15, 2024, 01:00 PM IST
  • கோலாகலமாக நடக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
  • முதன்முறையாக சம்பிரதாயங்கள் இல்லாமல் நடக்கிறது
  • காளைகளின் பெயரில் சாதிப் பெயர் இனி இருக்காது
சம்பிரதாயங்கள் இல்லாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... கட்டுப்பாடுகள் இதுதான்..! title=

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை  அவனியாபுரம் ஜல்லிகட்டு தொடங்கியுள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா  தலைமையில் ஜல்லிகட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது.  முதல் சுற்றில் 50 பேர் களத்தில் இறக்கப்பட்டனர். வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பச்சைகொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். 1000 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர் ஆகியோருக்கு தலா ஒரு கார் என 2 கார்கள் பரிசு வழங்கப்பட இருக்கிறது. இந்த கார்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சார்பில் வழங்கப்பட இருக்கிறது. 

மேலும் படிக்க | ஜல்லிக்கட்டுகளில் சாதிப் பெயர் இனி குறிப்பிடப்படாது!

மதுரையில் பலத்த பாதுகாப்பு

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சுமார் 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகர காவல்துறை கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. போட்டியில் கலந்துகொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான QR கோடுடன் கூடிய அனுமதிசீட்டுடன் ஒரே நபர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்படும் எனவும், போட்டியை முன்னிட்டு காளை வெளியேறகூடிய வாடிவாசல் பகுதிக்கு முன்பாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பபட்டுள்ளன.

சம்பிரதாயங்களுக்கு அனுமதி இல்லை

முத்துப்பட்டி சாலை சந்திப்பு தொடங்கி அவனியாபுரம் பேருந்துநிலையம் வரை வாடிவாசல், காளை சேகரிப்பு இடம், காளை மருத்துவபரிசோதனை பகுதி, காளைகள் அனுப்பும் பகுதி, பார்வையாளர்கள் பகுதி என அனைத்து பகுதிகளிலும் இருபுறமும் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டி முழுவதும்  அரசுத் தரப்பு 'ஜல்லிக்கட்டு ஏற்பாட்டு குழு  போட்டியை நடத்துகின்றனர். இந்த போட்டியின் போது கிராமம் சார்ந்த நபர்களுக்கோ, கோவில் காளைகளுக்கு மரியாதை போன்ற சம்பிரயாதங்களோ அரசியல் கட்சியினர் தொடர்பான விளம்பரங்களோ, அறிவிப்புகள் வெளியிடவோ அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் மருத்துவ குழு

போட்டியை பார்வையிடுவதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வருகைபுரிவார்கள் என்பதால் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில்  2 ஆயிரம் போலிசார் தற்போது இருந்தே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று அவசரகால மருத்துவ தேவைக்காக மருத்துவகுழுக்களும், கால்நடை மருத்துக்குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.  

மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள்

போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றிலும் தலா 75 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்பர்.

முறைகேடுகளை தடுக்க QR கோடு 

போட்டியானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. போட்டி நேரம் நீட்டிப்பு செய்வது தொடர்பாக போட்டியின் நிலையை பொறுத்து மாவட்ட ஆட்சியரால் முடிவு எடுக்கப்படும். இந்த ஆண்டு ஆள்மாறாட்ட முறைகேட்டை தடுக்கும் வகையில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் QR கோடுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Jallikattu Live : தூள் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News