மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்! கனிமொழி பாஜகவில் சேருவாரா? 0/40க்கு பிறகு அண்ணாமலை கேள்வி!

Annamalai Interview After 0/40 In Election: தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்று கொள்கிறோம் என்று சொல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து மக்கள் பணி மூலம் 2026ல் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 5, 2024, 11:06 PM IST
  • கனிமொழி பாஜகவில் சேரத் தயாரா?
  • தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக அண்ணாமலை வைக்கும் நிபந்தனை
  • நாவடக்கம் என்பது எனக்கு மட்டும் தானா? அண்ணாமலை கேள்வி
மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்! கனிமொழி பாஜகவில் சேருவாரா? 0/40க்கு பிறகு அண்ணாமலை கேள்வி! title=

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து மக்கள் பணி மூலம் 2026ல் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்பு பாஜகவை விமர்சனங்கள் செய்த அதிமுகவுக்கு இப்போது புத்தி வந்துள்ளது என்று சொன்ன அவர், நாம் தமிழர் கட்சி நேர்மையாக இந்த தமிழக அரசியலில் நின்று இருக்கிறார்கள் அதை பாராட்டித் தான் ஆக வேண்டும் என்றும் பாராட்டியுள்ளார். நடந்து முடிந்த 18 வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

பாஜக தேசிய அளவில் பெரிய சரித்திரம் படைத்து பண்டித் ஜவஹர்லால் நேருவுக்கு பின் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார் என்று கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்வது கடினம் அதை பாஜக செய்துள்ளது, எல்லா வாக்காளர்களுக்கும் நன்றிக்கடன் பெற்றுள்ளோம் என்று கூறினார்.

இலக்கு வைத்து வேலை செய்தோம், நிறைய மாநிலங்களில் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகி உள்ளது என்று கூறிய அவர், தமிழகத்தில் 
40க்கு 40 தொகுதிகளை வென்ற இந்திய கூட்டணி கட்சியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், பிரதமர் மோடியின் நலத்திட்ட பணிகள் தமிழகத்தில் வந்து சேர்வதற்கு உடன் இருப்போம் என்று உறுதியளித்தார்.

நேற்று பிரதமர் மோடி எந்த அளவிற்கு பாஜக தொண்டர்கள் உழைக்கிறீர்களோ அதைவிட கூடுதலாக நான் உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் வறுமை என்பது கடந்த கால பேச்சாக மட்டும் இருக்கும் அதற்காக உழைப்போம் என்று தெரிவித்துள்ளார் என்று கூறிய அண்ணாமலை, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்திருப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தேசிய ஜனநாயக கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது அதை அடைய முடியவில்லை என்பது வருத்தமே என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?

அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் இங்கிருந்து பாஜக சார்பில் வெற்றி வேட்பாளர்கள் வருவார்கள் என்றும், அதற்காக இன்னும் கடினமாக உழைப்போம், எந்த இடத்தில் தவறு என்பதை அடுத்த ஒரு வாரத்தில் பரிசீலனை செய்து இன்னும் எப்படி சிறப்பாக செய்வது என்று யோசித்து செயல்படுவோம் என்று கூறிய அவர், பாஜக வேட்பாளர்கள் அதிகமாக உழைத்து உள்ளார்கள் சில இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் ஒரு செய்தி சொல்லி இருக்கிறார்கள். அடுத்து எந்த கட்சியை மக்கள் விரும்பி இருக்கிறார்கள் என்பதை தீர்ப்பில் மக்கள் சொல்லி இருக்கிறார்கள். பாஜக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மக்கள் சொல்கிறார்கள் என்று கூறிய அண்ணாமலை, ஒரு விஷயத்தை பெருமையாக பதிவு செய்ய நினைக்கிறேன் என்றும், 
கோயம்புத்தூரில் ஒரு வேட்பாளராக நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருப்பது பணம் கொடுக்காமல் பெற்றது என்று தெரிவித்தார். 

எங்கள் பணி இன்னும் கடுமையான பணி என்பதை புரிந்து கொள்கிறோம். இன்னும் மக்களை சந்திப்போம்.  தமிழகத்தில் பண அரசியலைத் தாண்டி தேசியத்தை கொண்டு வர இன்னும் உழைக்க வேண்டும் என்றும், அந்த  இலக்கு பெரிய இலக்கு அதை வைத்து தான் வேலை செய்தோம் என்றும், இன்னொரு கட்சி செய்யக்கூடிய தவறுகளை நாங்கள் செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார். 

மாநிலத் தலைவராக தமிழகத்தில் நீங்கள் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்பிர்களா என்ற கேள்விக்கு,  முதலில் பத்திரிக்கையில் பாஜகவை நோட்டா கட்சி என்று எழுதினீர்கள். தற்போது, உங்கள் கேள்வி, தமிழக பாஜக மீது எதிர்பார்ப்பை வைத்திருக்கிறீர்கள்  என்பதை உணர்த்துகிறது. பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்திருப்பதே ஒரு விதத்தில் வெற்றி, இதுவரை சரித்திரத்தில் வாங்காத அளவுக்கு கோயம்புத்தூரில் நாங்கள் வாக்குகளை பெற்றிருக்கிறோம். கோயம்புத்தூரில் உள்ள 10 எம்.எல்.ஏக்களில் 9 பேர் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் எங்களது வாக்குகளின் முக்கியத்துவத்தைப் பார்க்க வேண்டும். 

அதிமுக கோவையில் டெபாசிட்டை விட சற்று தான் அதிகம் பெற்றுள்ளது, கோவை அதிமுகவில் கோட்டை என்று தெரியும் அதில் சாதனை படைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

2026 ஆட்சியைப் பிடிப்போம் என்று ஓவர் கான்ஃபிடன்டில் நான் இப்போதும்  உள்ளேன். ஒரு தலைவர் அப்படித்தான் இலக்கைவைத்து பணியாற்ற வேண்டும் என்று கூறிய அவர், முதற்கட்டமாக தோல்விக்கான காரணம் தமிழகத்தை பொறுத்தவரை, பாஜக பாறையை உடைத்து வெளியே வரும் வேலையை செய்து கொண்டுள்ளது என்றும், திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், கொங்கு கட்சி இத்தனை கட்சிகள் சேர்ந்து பெற்ற எம்பிக்களை விட பாஜக அதிக எம்பிக்களை பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | வலுவான எதிர்கட்சியாக செயல்படவில்லை என்பதே தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சொல்லும் பாடம்!

ராஜஸ்தானில் 11 இடங்களை விட்டுக் கொடுத்துள்ளோம் அதற்கான காரணத்தை ஆராய்வோம், மும்பையிலும் வெற்றி குறைந்தது அதையும் ஆராய்வோம், உத்திரபிரதேசத்திலும் வாக்குகள் குறைந்துள்ளது அதை ஆராய்வோம் என்றும், ஒரிசாவில் 25 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் ஆட்சியில் இருந்தார் தற்பொழுது பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார். 

பொறுமையாக பணியை செய்து கொண்டே இருக்கவேண்டும் எனப்தை இதன் மூலம் கற்றுக் கொள்கிறோம் என்றும், தமிழகத்தின் கலாச்சாரத்தை எங்கேயும் யாரும் அவமதிக்க வில்லை போற்றதான் செய்கிறோம் என்று கூறிய அண்ணாமலை, ஒரிசாவில் நவீன் பட்நாயக்கை தோற்கடிக்க முடியும் என்று நானும் கூட நம்பவில்லை என்று கூறினார். ஒரு ஆண்டுகள் முன்பு வரை கூட ஒரிசா மக்கள் அவர்களின் மண் சார்ந்த அரசியலை கொண்டு வர வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்.

நீங்கள் நாவடக்கத்தோடு இருந்திருந்தால்  தமிழகத்தில் ஆறிலிருந்து பத்து தொகுதிகள் வெற்றி பெற்று இருக்கலாம் என்று ஆர்பிஉதயகுமார் கூறிய கருத்துக்கு பதிலளித்த அண்ணாமலை, முன்பு நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி என்றார்கள், இதை ஏன்  முன்பே கூறவில்லை, இதை சொல்வதற்கு இத்தனை நாளா? என்று கேட்டார். அதே நாவடக்கத்தோடு அவர்களும் பேசியிருக்கலாமே என்றும், அதே தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு   அவருடைய ( ஜெயக்குமார் )மகன் தள்ளப்பட்டிருக்கிறார் 
என்றும் பதில் அளித்தார்.

மேலும் படிக்க | பிரதமர் மோடி - அமித் ஷா கூட்டணிக்கு எதிராக மூத்த தலைவர் பாஜகவில் போர்க்கொடி!

2026 இல் தமிழக அரசியலில் முதன்முதலாக கூட்டணி அரசியல் மலரும். 33.52 % 2019 ஆம் ஆண்டு திமுக வாக்கு சதவீதம், இந்த ஆண்டு  26% சதவீதம் 6 சதவீத வாக்குகளை திமுக இழந்தது என்று கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியை இந்த நேரத்தில் நான் பாராட்டுகிறேன் என்று கூறினார். எங்களுக்கும் அவர்களுக்கும் அரசியல் சித்தாந்த அடிப்படையில் வேறுபாடுகள் இருந்தாலும் நேர்மையாக பணம் கொடுக்காமல் நின்றுள்ளார்கள் என்றும், கூட்டணி இல்லாமல் தனித்து புது சின்னத்தில் நின்றுள்ளார்கள் என்றும், நாம் தமிழரை பொருத்தவரை தமிழகத்தில் அவர்களும் ஒரு செய்தியை சொல்கிறார்கள் திராவிட அரசியலில் இருந்து தமிழக மக்கள் வெளியில் வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி களத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை நாங்களும் பார்த்துள்ளோம். சீமான் அவர் பாதையில் பயணிக்கட்டும். நாங்கள் எங்கள் பாதையில் பயணிக்கிறோம். தமிழகத்தில் இங்கு எல்லோருக்கும் கொடுத்துள்ள பணி அடுத்த 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வர உழைக்க வேண்டும் என்பது தான் என்று கூறினார்.

தேசிய அரசியல் பற்றி பேசிய அண்ணாமலை, தேர்தலுக்கு முன்பு எங்களுடன் கூட்டணியில் இணைந்தவர்கள் நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடு என்றும், இது நிலைத்து இருக்கும் கூட்டணி என்றும் கூறினார். என் அப்பா முதலமைச்சரோ எம் எல் ஏவோ இல்லை, கருணாநிதியும் இல்லை, நான் வெற்றி பெற சில ஆண்டுகள் ஆகலாம், என் அப்பா குப்புசாமி ஆடு மாடு மேய்த்து விவசாயம் செய்பவர் பொறுமையாக செல் என்று தான் சொன்னார்

கனிமொழி பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை பதவி விலக வேண்டும் என்று சொன்னதற்குக் பதில் அளித்த அண்ணாமலை, ஒருவேளை கனிமொழி பாஜகவில் வந்து இணைந்தால் நான் பதவி விலகுவது குறித்து பரிசீலனை செய்கிறேன் என்று அதிரடியாக பேசினார்.

மேலும் படிக்க | வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News