சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் காணிக்கை கணக்கு காட்டவே இல்லை - அமைச்சர் சேகர்பாபு

சிதம்பரம் கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நகைகள் குறித்து அந்த காலத்தில் இருந்து இதுவரை எந்த கணக்கும் தீட்சிதர்கள் காட்டவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 27, 2023, 06:13 PM IST
  • சிதம்பரம் கோயில் என்ன தீட்சிதர்கள் சொத்தா?
  • சட்டத்தின்படி தமிழக அரசு உரிய நடவடிக்கை
  • காணிக்கை குறித்து கணக்கு தாக்கல் செய்யவில்லை
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் காணிக்கை கணக்கு காட்டவே இல்லை - அமைச்சர் சேகர்பாபு title=

சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் நடவடிக்கை மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதி மறுத்தனர். ஆனால் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்கு சென்ற நிலையில், அனைத்து பக்தர்களும் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்தும் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாக புகார்கள் கூட எழுந்தன. இந்த பிரச்சனையின் தொடர்ச்சியாக திடீரென ஆனி திருமஞ்சனத்தையொட்டி கனகசபை மீது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

மேலும் படிக்க | சிதம்பரம்: கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கதவை பூட்டிய தீட்சிதர்கள்

இதற்கு கோயில் செயல் அலுவலர் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பதாகையை அகற்ற சென்றார். ஆனால், அவரை முற்றுகையிட்ட தீட்சிதர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய குறிப்பிட்ட நாட்களுக்கு அனுமதிக்க முடியாது என கூச்சலிட்டனர். மேலும், அவரிடம் வாக்குவாதமும் செய்தனர். இது குறித்து செயல்அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அரசும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோருடன் சென்று அந்த பதாகையை அகற்றினர். ஆனால் தீட்சிதர்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சில விளக்கங்களை கொடுத்தார். அவர் பேசும்போது, " தீச்சிதர்கள் என்றாலே பிரச்சனை தான். சுமார் 200 பேர் சேர்ந்து கொண்டு சிதம்பரம் கோவிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி செயல்படுகிறார்கள். சிதம்பரம் கோவிலை தணிக்க செய்யக்கூட அனுமதிக்க மறுக்கிறார்கள். விலை உயர்ந்த நகைகள் வரவு வைக்கப்பட்டது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்க மறுக்கிறார்கள். இது அவர்களின் சொந்த நிறுவனம்போல் கோயிலை நினைக்கிறார்கள். மக்களின் ஆதரவால் நடக்கும் கோவில் அது. அரசுக்கு தகவல் தரமறுக்கிறார்கள்.

பக்தர்களை நீதிமன்ற தீர்ப்பீன்படி கனகசபையின் மீது நின்று சாமி கும்பிட நியாயத்தின் படி அனுமதிக்கின்றோம். சட்டத்தின்படி ஆட்சி நடக்கிறது என்பதை நிரூபிப்போம். சிதம்பரம் நடராசர் கோவிலில் உண்டியல் உள்ளதா? வைப்பு நிதி என்ன? என்பது குறித்து இதுவரை கணக்கு இல்லை. அந்த காலத்திலிருந்து இப்போது வரை உள்ள நகைகள் குறித்தும் கணக்கு காட்ட வில்லை. முறைப்படி ஆவணங்களை சேகரித்து நீதிமன்றம் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆவணங்கள் முறையாக சேகரித்து அதற்கான பணிகள் சென்று கொண்டிருக்கின்றன" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளார் - வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News