வேங்கைவயல் விவகாரம்: இதுவரை என்ன நடவடிக்கை... முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

CM Stalin On Vengaivayal Untouchability Issue: வேங்கைவயல் பிரச்னை குறித்தும், அதில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 20, 2023, 09:53 PM IST
  • ஓய்வுபெற்ற நீதியரசர் சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு.
  • 2 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு
வேங்கைவயல் விவகாரம்: இதுவரை என்ன நடவடிக்கை... முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்! title=

CM Stalin On Vengaivayal Untouchability Issue: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.4.2023) சட்டப் பேரவையில், புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அளித்த பதில்,"சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி, வேங்கைவயல் பிரச்சினையைப்பற்றி குறிப்பிட்டு சொன்னார். ஏற்கெனவே இந்த அவையிலே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, அதற்கு நான் விளக்கம் தந்திருக்கிறேன். 

ஆனால், அதற்குப் பிறகு ஏற்பட்டிருக்கக்கூடிய நடவடிக்கைகள், அதில் இருக்கக்கூடிய முன்னேற்றங்களைப் பற்றி அவர் இங்கே கேட்ட காரணத்தால், இந்த அவையிலே நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் காவல் நிலைய சரகம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்தாண்டு டிச. 24, 25 ஆகிய தினங்களில் 4 குழந்தைகள் உள்பட 5 நபர்களுக்கு வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 4 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்ற நிலையில், கோபிகாஸ்ரீ என்ற குழந்தை மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்றது, மருத்துவர் பரிசோதனையில் மாசடைந்த குடிநீரை பருகியதால் உடல்நலக் குறைவு என்று தெரிய வந்தது. 

அதற்குப் பிறகு, அந்தக் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது அந்தத் தண்ணீர் துர்நாற்றம் வீசியதுடன், தொட்டியில் மனிதக் கழிவு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்தத் தொட்டியிலிருந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு மூன்று முறை சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | கொடநாடு வழக்கு: சட்டப்பேரவையில் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்!

சிறப்பு விசாரணைக் குழு

பாதிக்கப்பட்ட கோபிகாஸ்ரீயின் தந்தை கனகராஜ், கடந்தாண்டு டிச. 26ஆம் தேதி அன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் வெள்ளனூர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வன்கொடுமை சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு "சிறப்பு விசாரணைக் குழு" அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தடய அறிவியல் குடிநீர் மாதிரிகளை சேகரித்து, சென்னை தடய அறிவியல் சோதனை மையத்திற்கு நீதிமன்றம் வாயிலாக அனுப்பி வைத்தார்கள். 

இரட்டை குவளை முறை

கடந்தாண்டு டிச. 27ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்தக் கிராமத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது, "கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் தங்களை வழிபட அனுமதிக்கவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதாகவும்" மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டிருக்கிறார்கள். அதனடிப்படையில் உடனே குளத்தூர் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் அக்கிராமத்தில் தேநீர்க் கடை நடத்தி வரக்கூடிய மூக்கையா மற்றும் அவரது மனைவி மீனாட்சி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மூக்கையா அன்றைய தினமே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். 

அமைதி பேச்சுவார்த்தை

அன்றைய தினமே ஆதி திராவிடர்கள் அய்யனார் கோவிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அப்போது சிங்கம்மாள் என்பவர் ஆதி திராவிடர்கள் சாதிப் பெயரைச் சொல்லி அவதூறாகப் பேசியதால், வட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

சிங்கம்மாள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற கடந்தாண்டு டிச. 29ஆம் தேதி அன்று இலுப்பூர் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை மூலமாக "மேல்நிலை நீர்த் தொட்டியை அசுத்தம் செய்தவர்கள்மீது விரைவில் நடவடிக்கை; இரட்டைக் குவளை முறையை ஒழிப்பது; அடுத்து, அய்யனார் கோயிலில் அனைத்து சமூக மக்களுக்கு சாதி வேறுபாடின்றி வழிபடுவது" ஆகிய முடிவுகள் அந்தக் கூட்டத்தில் முடிவாக எடுக்கப்பட்டது.

சிபிசிஐடிக்கு மாற்றம்

வேங்கை வயலில் சட்டம், ஒழுங்கு நிலையைப் பராமரிக்க சுழற்சி முறையில் தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர். மருத்துவத் துறையினரும் மருத்துவ முகாம் நடத்தியிருக்கிறார்கள். 

சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும் வகையில், கடந்தாண்டு டிச. 29 அன்று அனைத்து சமூகத்தினரும் பங்கேற்ற அமைதி ஊர்வலம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. இவ்வழக்கு விசாரணையை துரிதப்படுத்த, இந்த வழக்கு மாநிலக் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) ஜன. 14ஆம் தேதி அன்று மாற்றப்பட்டது. 

நீதிமன்ற உத்தரவு

இந்நிலையில்தான், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஓய்வுபெற்ற நீதியரசர் சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து, விசாரணை அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | Annamalai: நோ கமெண்ட்ஸ்... இபிஎஸ்-ஐ நோஸ் கட் செய்தாரா அண்ணாமலை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News