துரோகம்.. திமுகவின் பினாமி.. பச்சோந்தியை விட அதிகம் நிறம் மாறுபவர் ஓபிஎஸ் -ஈபிஸ் விமர்சனம்

AIADMK News: தடைகளை தாண்டி பொதுகுழுவை நடத்தினோம். திமுகவிற்கு பினாமி போல் ஓ.பி.எஸ் செயல்படுகிறார். பச்சோந்தியை விட அதிகம் நிறம் மாறுபவர் ஓ.பி.எஸ் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 8, 2022, 04:00 PM IST
  • ஓ.பன்னீர் செல்வம் கட்சிக்கு விசுவாசமாக இல்லை.
  • தடைகளை தாண்டி பொதுகுழுவை நடத்தினோம்.
  • போதை பொருட்களை விற்பனை செய்வதே திமுகவினர் தான்.
  • ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய தனி சட்டம் இயற்ற வேண்டும்.
துரோகம்.. திமுகவின் பினாமி.. பச்சோந்தியை விட அதிகம் நிறம் மாறுபவர் ஓபிஎஸ் -ஈபிஸ் விமர்சனம் title=

சென்னை: தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக எடப்பாடி கே.பழனிச்சாமி வருகை தந்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசினார். அப்பொழுது அவர், பன்னீர் செல்வம் மன்னிப்பு கேட்டாலும் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் எனக் கேள்வி எழுப்பிய அவர், பச்சோந்தியை விட அதிகம் நிறம் மாறுபவர் ஓ.பி.எஸ் எனக் கடுமையாக தாக்கி எடப்பாடி பழனிச்சாமி பேசினார். 

செய்தியாளர்களிடம் அவர் பேசியது பின்வருமாறு:

நன்றிக் கூறிய எடப்பாடி பழனிசாமி:

அதிமுக பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் என பல்வேறு பொறுப்புகள் உருவாக்கப்பட்டு, இன்று தலைமை கழகம் வந்து உள்ளோம். இந்த நேரத்தில், உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பிளவு படவில்லை. சிலர் துரோகம் செய்துவிட்டார்கள்:

பொதுகுழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று நிறைவேற்றப்பட்டு என்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தார்கள். இன்றைய தினம் நீதிமன்றம் உத்தரவின்படி அதிமுக தலைமை அலுவலகம் எங்களுக்கு தரப்பட்டது. அதிமுக பிளவு படவில்லை. ஒரு சில பேர் துரோகம் செய்தார்கள்‌. அவர்கள் கட்சியில் விட்டு நீக்கப்பட்டனர். திமுக துணையுடன் ஒருசிலர் கட்சி அலுவலகத்திற்கு மீறி நூழைந்து, பொருள்கள், ஆவணங்களை, அதிமுகவிற்கு சொந்தமான பத்திரங்கள் திருடி, பொருள்களை வெளியே எடுத்து வந்து தீயை வைத்து கொளுத்தி உள்ளனர். தலைமைக் கழகத்தில் இருந்த வாகனங்களை சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இந்த விடியா (திமுக) அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக அரசின் சட்ட ஒழுங்கு எவ்வளவு சீர்குலைந்துள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்.

மேலும் படிக்க: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: பொதுச்செயலாளராக தொடர்கிறார் இபிஎஸ்

சோதனைகளை சாதனைகளாக அதிமுக மாற்றியுள்ளது:

நீதிமன்றம் சென்ற பிறகு, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம், சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்தார்கள்.

32 ஆண்டு காலம் ஆண்ட அதிமுக பிரதான எதிர்க்கட்சி. ஆனால், இன்று கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் விடியா (திமுக) அரசு ஏற்படுத்தி உள்ளது. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுக விற்கு சோதனைகள் ஏற்பட்டுள்ளன. அது அனைத்து தொண்டர்களின் ஆதரவோடு சாதனையாக மாற்றப்பட்டுள்ளது. அது போல் இதுவும் சாதனையாக மாறும்.

அதிமுகவில் விரைவாக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும். அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைந்து மீண்டும் அதிமுக அரசு அமைப்போம் என்பதே சபதம் லட்சியம். 

திமுகவிற்கு பினாமி போல் ஓ.பி.எஸ் செயல்படுகிறார்: 

ஓ.பன்னீர் செல்வம், மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். கட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒருவர் கொள்ளை கூட்டத்திற்கு தலைவர் போல வந்து கழகத்தின் தலைமை அலுவலகத்தை உடைத்தார். இதனை நாட்டு மக்கள் பார்த்துள்ளனர். இப்போது மன்னிப்பு கேட்டால் எப்படி தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். கட்சி அலுவலகத்தின் பிரதான கதவை காலால் எட்டி உதைக்கின்றனர். கீழ்தரமான செயலில், திமுகவின் பினாமியாக ஓ.பி.எஸ் உள்ளார். திமுகவிற்கு உடந்தையாக பினாமி போல் ஓ.பி.எஸ் செயல்படுகிறார். அதிமுக தலைமைக் கழகம் மாபெரும் தலைவர்கள் பணியாற்றிய புனிதமான இடம். ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தான். ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து பெரிய பொறுப்பை வழங்கினோம்.

மேலும் படிக்க: எடப்பாடி பழனிச்சாமி புத்தி தடுமாற்றத்தில் உள்ளார் - புகழேந்தி தாக்கு

அதிமுக சின்னத்தை முடக்க வாய்பில்லை:

புகார் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், அதற்கு ஆதாரம் வேண்டும். 96% பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தங்கள் பக்கம் உள்ளது. சட்டரீதியாக யாரும் எங்களை ஒன்றும் செய்யமுடியாது. பச்சோந்தியை விட அதிகம் நிறம் மாறுபவர் ஓ.பன்னீர் செல்வம். அவர் கட்சிக்கு விசுவாசமாக இல்லை. சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்கு அளித்தவர் ஓ.பி.எஸ். அன்று முதல் இன்றுவரை நான் அணி மாறாமல் உள்ளேன். நான் கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறேன். திமுகவால் அதிமுக தொண்டனை கூட அசைக்க கூட முடியாது.

திமுகவுக்கு நோபல் பரிசு வழங்கவேண்டு:

திமுக ரடிவுகளை வைத்து கட்சி நடத்துகிறார்கள். நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சொன்னார்.திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் ரத்து செய்யவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு பேச்சு. பொய் பேசுவதற்கு நோபல் பரிசு வழங்கவேண்டுமென்றால், அது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தான் கொடுக்கலாம்.

திமுக ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் கட்ட பஞ்சாயத்து, செயின் பறிப்பு மற்றும் தமிழகம் முழுவதும் போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. காவல்துறை திமுகவிற்கு ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: ’உத்தமர் போல பேசும் மகா நடிகர் ஓபிஎஸ்’ ஜெயக்குமார் கடும் தாக்கு

ஏது நல்லது எது கெட்டது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை:

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்யவேண்டும். யாராவது சூதாட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துவார்களா? சூதாட்டத்திற்கு கருத்து கேட்பு நடத்தும் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். ஏது நல்லது எது கெட்டது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாட்டார்கள், அதற்கு பணம் வந்துகொண்டிருக்கிறது. விரைவில், ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய தனி சட்டம் இயற்ற வேண்டும்.

அதிமுக எம்.எல்.ஏ-கள் 50 பேர் திமுகவுடன் தொடர்பில் உள்ளதாக ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டிற்கு, வருகிற தேர்தலில் ஆர்.எஸ்.பாரதி தேர்தலில் நின்று ஜெய்த்து காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். 

போதை பொருட்களை விற்பனை செய்வதே திமுகவினர்:

தமிழகத்தில் போதை  அதிகரிப்பிற்கு மத்திய அரசு தான் காரணம் என்று அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டிற்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டில், காவல்துறை உளவுப்பிரிவு இருக்கும் போது, காவல்துறையினர் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முடியும். ஆனால், அப்படி தடுக்கவில்லை. ஏனென்றால் போதை பொருட்களை விற்பனை செய்வதே திமுகவினர் தான்.

மேலும் படிக்க: சவாலே சமாளி! நான் ரெடி நீ ரெடியா? பதவியை ராஜினாமா இபிஎஸ் தயாரா? சவால் விடும் ஓபிஎஸ்

ஓ.பன்னீர் செல்வம் உண்மை தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் கேள்விக்கு, என்ன உண்மையை சொல்ல போகிறார். கதவை உடைத்ததையா, பொருள்களை கொள்ளையடித்ததையா மக்களிடையே சொல்ல போகிறார்? எனக் கேட்டார்.

தடைகளை தாண்டி பொதுகுழுவை நடத்தினோம்: 

தேர்தல் வருகிற போது சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அதிமுக தொண்டர்கள் நிகழ்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். திமுக துணையோடு, எவ்வளவு தடைகளை ஓ.பி.எஸ் ஏற்படுத்தினாலும் எவ்வளவு அமைதியாக பொதுகுழுவை நடத்தி காட்டினோம். இதுதான் ஒற்றுமை, இதுதான் பலம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் படிக்க: திமுகவுடனான உறவை ஓபிஎஸ் பகிரங்கப்படுத்திவிட்டார்: இபிஎஸ் குற்றச்சாட்டு

(செய்தி சேகரிப்பு: சிவராமன் . ஜீ தமிழ் நியூஸ்)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News