'பைத்தியம் இல்லை, உங்களுக்கு வைத்தியம் பார்க்க வந்துள்ளேன்' - திமுகவுக்கு தமிழிசை பதிலடி!

Tamil Nadu Latest Election News : தென்சென்னை பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 24, 2024, 12:27 PM IST
  • எம்.பி., என்றால் வெள்ளம் வந்தால் வந்து நிற்கவேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்
  • திமுக கூறும் பொய்களை எதிர்த்து தான் பாஜக களத்தில் நிற்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்
  • பிரதமர் மோடி குறித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு தமிழிசை கண்டனம்.
'பைத்தியம் இல்லை, உங்களுக்கு வைத்தியம் பார்க்க வந்துள்ளேன்' - திமுகவுக்கு தமிழிசை பதிலடி! title=

Tamil Nadu Latest Election News : தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜனை அறிமுகப்படுத்தும் கூட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை செளந்தரராஜன், "எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றும் ஒரே அரசியல் கட்சி தொண்டர்கள் பாஜகவில்தான் உள்ளார்கள். யார் என்ன சொன்னாலும் 1% கூட வெற்றி வாய்ப்பு இல்லை என எண்ணிவிடாதீர்கள். 

'பைத்தியம் இல்லை, வைத்தியம் பார்க்க வந்துள்ளேன்'

பாஜக தொண்டன் கடுமையாக உழைத்தால் ஆளுநராக கூட ஆகலாம் என்பதற்கு சாட்சியாக நான் உள்ளேன். சந்திரசேகர் ராவ், ரேவந்த் ரெட்டி போட்டியிடும் நேரத்தில் எதிர்பாராமல் பாஜக வெற்றி பெற்றது. ஏளனமாக பேசுவதை எல்லாம் காதில் கேட்டுக் கொண்டிருந்தால் தமிழிசை உருக்கமாக இங்கு நின்று கொண்டிருக்க மாட்டாள். உங்களை ஓட ஓட விரட்டுவதுதான் பாஜகவின் வேலை.

இன்றைய காலகட்டத்தில் மாற்று சக்தி உருவெடுக்க வேண்டுமென்றால் பாஜக தலைமையில்தான் உண்டாகும். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதற்கு பைத்தியமா என கேட்கிறார்கள், நான் பைத்தியம் அல்ல உங்களுக்கு வைத்தியம் பார்க்கவே வந்திருக்கிறேன்" என்றார்.

மேலும் படிக்க | மோடி இருந்தால் நான் போக மாட்டேன்! ஒரு மாற்றம் வேண்டும் - சுப்பிரமணிய சுவாமி!

'மாவு இல்லாமல் தோசை சுட முடியாது'

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில், "திமுகவில் சாமானிய தொண்டனை தலைவனாக்க முடியுமா?... பாஜகவில் முடியும், வாரிசு இல்லாமல் பாஜகவில் தலைவனை உருவாக்க முடியும்.
ஆக்கும் அறிக்கையை பார்த்திருப்போம்.... ஒழிக்கும் அறிக்கையை பார்த்ததில்லை. அதுதான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி" என்றார். 

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த திமுகவின் வாக்குறுதியை சுட்டிக்காட்டி, "தோசை மாவு நம் கையில் இல்லை, பின்பு எப்படி தோசை ஊற்ற முடியும்" என முதலமைச்சருக்கு பதில் கூறும் வகையில் தெரிவித்தார். மேலும், "தோசை மாவு மத்திய அரசு கையில் உள்ளது, உங்களால் அதை சுட முடியாது. நீட் விலக்கை முதல் கையெழுத்தாக திமுக போடும் என நினைத்தால் திமுக மற்றவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது.

'வெள்ளம் வந்தால் வந்து நிற்க வேண்டும்'

திமுக கூறும் பொய்களை எதிர்த்து தான் பாஜக களத்தில் நிற்கிறது. தொண்டர்கள் கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் வேறு கட்சியில் வர முடியுமா? பாஜகவில் தான் அது முடியும். திட்ட திட்ட, அழுத்த அழுத்த, அடிக்க அடிக்க மேல எழும்பி வருவது தான் தாமரை. சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, இலைகள் துளிர்கிறதோ இல்லையோ, கைகள் உயர்கிறதோ இல்லையோ, தாமரை மலர்ந்தே தீரும் என தனது வழக்கமான அடுக்கு வசனத்தில் பேசி முடித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்திரராஜன், "தென் சென்னை நல்ல பாராளுமன்ற உறுப்பினரை பெற வேண்டும், வெள்ளம் வந்தால் வந்து நிற்கவேண்டும். 40 வருடமாக இங்கு இருக்கிறேன், நான் இங்கு வேட்பாளராக பார்க்கவில்லை, வாக்காளராக பார்க்கிறேன்.

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கண்டனம்

தூத்துக்குடியில் நடந்த ஒரு கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை காதில் கேட்க முடியாத வார்த்தைகளை பேசியிருக்கிறார். அதையும் கேட்டுக் கொண்டு ஒரு பெண் எம்.பி., அங்கேயே உட்கார்ந்திருக்கிறார். தென் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அது எவ்வளவு மோசமான வார்த்தை என எனக்கு தெரியும். எங்கே போனது உங்கள் நாகரிகம். 

'தாமரை மலர்ந்தே தீரும்...'

அதே போல, X தளம், பேஸ்புக்கில் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள். எதிர்கட்சியை சேர்ந்தவர்கள், அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நீங்கள் எங்களை பரிகசிக்க பரிகசிக்க நாங்கள் மிளிருகின்றோமா இல்லையா என்பதை பாருங்கள், வளர்கிறோமோ இல்லையா என்பதை பாருங்கள், தாமரை தென் சென்னையில் மலர்கிறதா என்பதை பாருங்கள். தேர்தல் நேரத்தை கருத்தில் கொண்டு நாகரிகமாக பேச கற்றுக்கொள்ளுங்கள்.

மோடி பயத்தில் தான் தமிழகத்திற்கு வருகிறார் என்று முதலமைச்சர் சொல்கிறார். தூத்துக்குடியில் வெள்ளம் ஏற்பட்டபோது முதலமைச்சர் மக்களை சந்திக்காமல், இந்தியா கூட்டணியில் கூட்டணி பேச சென்றுவிட்டார். இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க இந்தியாவில் உள்ள யாரும் தயாராக இல்லை. கூட்டணியில் உள்ள ஒரு முதலமைச்சர் சிறையில் உள்ளார், இங்கே ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார்.

பிரதமரின் ஆதரவு எங்களுக்கு உள்ளது, மீண்டும் பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது. நான் மட்டும் இங்கு வேட்பாளர் இல்லை, கட்சியில் உள்ள அனைவரும் வேட்பாளர்கள் தான். யார் வேட்பாளர் என்பதை கட்சியின் தலைமை தான் முடிவு செய்கிறது.

திருமாவளவன் குறித்த கேள்விக்கு...?

திருமாவளவன் எதை வைத்து கட்சி நடத்துகிறார், அவர் மட்டுமல்ல,அந்த கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் தொகுதியில் எதை வைத்து அங்கு நிற்கிறார்கள். கனிமொழி எதன் அடிப்படையில் தூத்துக்குடியில் நிற்கிறார், நான் அங்கு பிறந்தவள், கனிமொழி அங்கு பிறந்தாரா...? 

அவர்கள் முதுகில் அவ்வளவு ஓட்டையை வைத்துக் கொண்டு, மற்றவர்களின் ஓட்டை குறித்து அவர்கள் பேசுகிறார்கள். நான் தென்சென்னையில் ஜாதிபார்த்தா  நிற்கிறேன்...? ஜாதியை பார்த்தா எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். திருமாவளவன்  அப்படி தான் சொல்லிக் கொண்டு இருப்பார், அவர் கட்சியை சார்ந்த நபர்களை காப்பாற்றவில்லை. அவரை பற்றி பேச வேண்டாம்" என்றார்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் 7 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்... யார் யார் மீண்டும் போட்டி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News