தனியார் வங்கிகள் தங்களது பணவசூல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் -முதல்வர்

ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில் தனியார் வங்கிகள் தங்களது பணவசூல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 26, 2020, 06:43 PM IST
தனியார் வங்கிகள் தங்களது பணவசூல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் -முதல்வர் title=

ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில் தனியார் வங்கிகள் தங்களது பணவசூல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகள் பல மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்போது முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு...

31 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் 14.4.2020 வரை நீட்டிக்கப்படுகிறது.

அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைத்திட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தலைமையில் இப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் பொருட்கள் நேரவரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர வரம்பு ஏதும் குறைக்கப்படவில்லை.

தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள் சுய உதவி குழுக்கள் ஆகியவை தினசரி/வராந்திர/ மாதவட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்கு செல்ல இயலாததால், இது போன்ற பணவசூலை உடனடியாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பண வசூலை நிறுத்தி வைக்காமல், இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரப்படும். 

அதிக மக்கள் வாழும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள் சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.

பெரிய காய்கறி மார்க்கெட் / சந்தைகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்திட, விசாலமான இடங்கள் (அ) மைதானங்களில் அவை அமைக்க வேண்டும். SocialDistancing norms படி மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மளிகை, மருந்து கடைகளிலும் சமூக விலகலை தீவிரமாக பின்பற்ற உத்தரவு. 

கர்ப்பிணிப் பெண்கள், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காச நோய், HIV தொற்று உள்ளோர் போன்றவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பெறுகின்றனர். அவர்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெற, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்டோர் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சியர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வழங்க நடவடிக்கை. இதனை மீறி வெளியே வருவோர் மீது அபராதம் விதிப்பதோடு தகுந்த பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

வெளிநாட்டிலிருந்து வந்த சுமார் 54,000 பேர்களின் பட்டியல் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தவும், அவர்கள் வெளியே வராதவாறு தீவிரமாக தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வேளாண்துறை விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசிய துறை என்பதால், விவசாய தொழிலாளர்கள், அறுவடை இயந்திரங்கின் நகர்வு அனுமதிக்கப்படுகிறது. வேளாண் விளை பொருட்களை சந்தைக்கும் தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.

காய்கறிகள், பழங்கள், முட்டைகள் போன்ற விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற நபர்களுக்கும் தேவையான அனுமதி சீட்டை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்.

கொரோனா நோயின் தீவிரத்தையும், மனித சமுதாயத்திற்கு இது பேரழிவு ஏற்படுத்த வல்லது என்பதையும் மக்களுக்கு உணர்த்து வண்ணம், ஒலிப்பெருக்கி, தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், துண்டு பிரசுரங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவு.

மின் வணிக நிறுவனங்களான (e - commerce) Grofers, Amazon, Big Basket, Flipkart, Dunzo போன்ற நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்கனவே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மளிகை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மற்ற நிறுவனங்களும் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடைகளும், கூட்டுறவு விற்பனை அங்காடிகளும், வீடுகளுக்குச் சென்று வழங்க அனுமதிக்கப்படுகிறது.

Zomato, Swiggy, Uber eats போன்ற நிறுவனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும், தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கான தடை தொடரும். மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் தாங்களாகவே சமைக்க இயலாதோர் மெஸ் மற்றும் சிறு சமையலகங்கள் மூலம் ஏற்கனவே உணவுகளை பெற்று வருகின்றனர். இதற்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படுகிறது.

கால்நடை, கோழி, மீன், முட்டை, கால்நடைத் தீவனம் ஆகியவற்றின் நகர்வுகளும் அனுமதிக்கப்படுகிறது. இதில் சிரமங்கள் ஏதும் இருந்தால் காவல்துறை தலைமையக கட்டுப்பாட்டு அறையை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள் : (044-28447701,  044-28447703)

முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர் அவசர உதவி தேவைப்பட்டால், 108 ஐ தொடர்பு கொள்ளலாம். ஆம்புலன்ஸ் சேவையுடன் இச்சேவையும் இணைத்து செயல்பட வேண்டும்.

அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு நிவாரணங்கள் முழுமையாக பயனாளிகளை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் அவரவர் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்க ஏற்பாடு செய்யலாம். தொற்றினை தடுக்க கை ரேகை பதிவு செய்து பொருட்கள் வழங்குவதை தவிர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Trending News